Skip to main content

வேலைக்குப் போகாத கணவன்; குழந்தைகளைக் கொன்று தாய் தற்கொலை முயற்சி

Published on 23/01/2023 | Edited on 23/01/2023

 

Two kids passed away mother in critical  near krishnagiri

 

பர்கூர் அருகே, கணவனுடன் ஏற்பட்ட தகராற்றால் விரக்தி அடைந்த இளம்பெண் தனது இரு குழந்தைகளுக்கும் விஷ உணவு கொடுத்து கொன்றுவிட்டு தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

 

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே உள்ள செந்தாரப்பள்ளியைச் சேர்ந்தவர் கவுரி (26). இவருடைய கணவர் முத்துராஜ். கெட்டூரைச் சேர்ந்த இவர் பேக்கரி மாஸ்டராக வேலை செய்து வந்தார். இவர்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 4 வயதில் ஜீவன் என்ற ஆண் குழந்தையும் 2 வயதில் பாவனாஸ்ரீ என்ற பெண் குழந்தையும் இருந்தன. இந்நிலையில், கடந்த சில மாதங்களாக முத்துராஜ் சரியாக வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். இதனால் கணவன் மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. அக்கம்பக்கத்தினர் அவர்களை அவ்வப்போது சமாதானப்படுத்தி வைத்துள்ளனர். ஜன. 17ம் தேதி அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.

 

இதனால் கணவனிடம் கோபித்துக்கொண்டு கவுரி தனது இரு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு செந்தாரப்பள்ளியில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்குச் சென்றுவிட்டார். கணவருடன் அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்ததால் விரக்தி அடைந்த கவுரி, தற்கொலை செய்ய முடிவெடுத்துள்ளார். தான் இறந்துவிட்டால் தனது குழந்தைகள் ஆதரவற்றுப் போய்விடுவார்கள் என்று எண்ணிய அவர்., குழந்தைகளைக் கொன்று விடத் தீர்மானித்துள்ளார். இதையடுத்து, தனது இரு குழந்தைகளுக்கும் விஷ மருந்து கலந்த உணவை சாப்பிடக் கொடுத்துள்ளார். தனது தாய் பாசத்துடன் உணவு ஊட்டி விடுவதாக நம்பிய ஏதுமறியா பிஞ்சுகள், அதை ருசித்து சாப்பிட்டுள்ளனர். பின்னர் அந்த உணவை கவுரியும் சாப்பிட்டுள்ளார். சிறிது நேரத்தில் வாயில் நுரை தள்ளிய நிலையில் மூவரும் மயங்கி விழுந்துள்ளனர்.

 

இதையறிந்த அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மூவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி குழந்தைகள் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். கவுரிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து கந்திக்குப்பம் காவல்நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்ப பிரச்சனையில் இரு குழந்தைகளையும் கொன்றுவிட்டு தாயாரும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் செந்தாரப்பள்ளி பகுதியில் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

காதலை கைவிட மறுத்ததால் ஆத்திரம்!

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
Rage for daughter refusing to give up love and incident happened in krishnagiri

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே பட்வாரப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவருக்கு காமாட்சி (33) என்ற மனைவியும், ஸ்பூர்த்தி எனும் 16 வயதில் மகளும் இருந்தார்கள். ஸ்பூர்த்தி, பாகலூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், கடந்த 14ஆம் தேதி வீட்டை வெளியே சென்று ஸ்பூர்த்தி, இரவு நேரமாகியும் வீட்டுக்கு வரவில்லை. இதில், பதற்றமடைந்த ஸ்பூர்த்தியின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர், அவரை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். ஆனால், அவர்கள் எங்கு தேடியும் ஸ்பூர்த்தி கிடைக்கவில்லை.

இந்த நிலையில், நேற்று முன் தினம் (16-03-24) இரவு பட்வாரப்பள்ளி பகுதியில் உள்ள ஏரியில் ஒரு இளம்பெண் பிணமாக கிடந்தார். இதனை கண்ட அங்கிருந்தவர்கள், இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், இளம்பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

அந்த விசாரணையில், ஏரியில் பிணமாக கிடந்தது ஸ்பூர்த்தி என்பதும், அவர் கொலை செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்தது. மேலும், அவர்கள் நடத்திய விசாரணையில், ஸ்பூர்த்தியும், பாகலூர் அருகே முத்தாலி பகுதியைச் சேர்ந்த சிவா (25) என்ற இளைஞரும் நீண்ட காலமாக காதலித்து வந்துள்ளனர். இந்த விவகாரத்தை அறிந்த ஸ்பூர்த்தியின் பெற்றோர், அவரது காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும், ஸ்பூர்த்தி தனது காதலை கைவிடவில்லை என்று கூறப்படுகிறது. 

இதில் ஆத்திரமடைந்த ஸ்பூர்த்தியின் தந்தை பிரகாஷ், தாய் காமாட்சி ஆகியோர், மாணவியை கடுமையாக தாக்கி கொலை செய்துள்ளனர். மேலும், மாணவியின் உடலை சாக்கு மூட்டையில் அடைத்து மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்று அந்த பகுதியில் ஏரியில் வீசியுள்ளதாக தெரியவந்தது. இதனையடுத்து, பிரகாஷ், காமாட்சி மற்றும் இவர்களுக்கு உடந்தையாக இருந்த ஸ்பூர்த்தியின் பெரியம்மா மீனாட்சி (36) ஆகிய 3 பேரையில் போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். காதலை கைவிடாததால், பெற்றோரே மகளை கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

சிறுமி கொலை; பெற்றோர் உட்பட 3 பேர் கைது!

Published on 17/03/2024 | Edited on 17/03/2024
girl child incident for Bagalur near Hosur in Krishnagiri District

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள பாகலூர் கிராமத்தில் பிரகாஷ் (வயது 40) - காமாட்சி (வயது 35) என்ற தம்பதியர் வசித்து வருகின்றனர். இவர்களின் 11 ஆம் வகுப்பு படித்து வந்த மகள் கடந்த 14 ஆம் தேதி (14.02.2024) வீட்டில் இருந்து வெளியே சென்றார் எனவும், அதன் பின்னர் வீடு திரும்பவில்லை எனவும் கூறப்பட்டது. இதனையடுத்து சிறுமியின் உடலில் காயங்களுடன் ஏரியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டது.

இது குறித்து தகவலறிந்த போலீசார் சிறுமியின் மரணம் குறித்து விசாரணை நடத்தினர்.  அப்போது இளைஞர் ஒருவரை சிறுமி காதலித்து வந்ததாகவும், அதனை பெற்றோர்கள் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. முன்னதாக கடந்த 2022 ஆம் ஆண்டு சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட இளைஞர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.  அதன் பின்னர் சிறையில் இருந்து வெளியே வந்த இளைஞர் மீண்டும் சிவாவுடன் பழகியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

இதனால் சிவாவுடன் பழகக் கூடாது என பெற்றோர் கூறியதை சிறுமி ஏற்க மறுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் சிறுமியை பெற்றோரே கட்டையால் தலையில் தாக்கி கொன்றதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி சிறுமியின் பெற்றோரிடமும் விசாரணை மேற்கொண்டனர். மேலும் சிறுமி காணாமல் போன அன்று வீட்டில் இருந்த சி.சி.டி.வி. கேமரா துணியால் மறைக்கப்பட்டதையும் போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இந்நிலையில் சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சிறுமியின் பெற்றோரான பிரகாஷ் - காமாட்சி மற்றும் சிறுமியின் பெரியம்மா காமாட்சி உட்பட 3 பேரை போலீசார் கைது செய்து சிறைச் சாலைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.