Skip to main content

ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கத்தில் நீரில் மூழ்கி இருவர் பலி!

Published on 04/06/2022 | Edited on 04/06/2022

 

Two drowned in Attur Kamaraj Reservoir

 

ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கத்தில் குளிக்கச் சென்ற இருவர் நீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் பூஞ்சோலையைச் சேர்ந்த பழனிசாமி என்பவரின் மகன் செல்வகுமார். இவரது அண்ணன் வேல்முருகன் பெரியகுளத்தில் வசித்து வருகிறார். வேல்முருகனின் மகள் தர்ஷினி பெரியகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். ஆத்தூரில் நடந்த திருவிழாவிற்காக கடந்த வாரம் வந்த தர்ஷினி சித்தப்பா செல்வகுமார் வீட்டில் தங்கியிருந்துள்ளார். வேல்முருகன் மகளை அழைத்துச் செல்வதற்காக ஆத்தூர் வந்துள்ளார்.

 

அப்போது செல்வகுமார் வேலைபார்க்கும் முதலாளியின் குடும்பத்தினர் திண்டுக்கல்லில் இருந்து ஆத்தூர் வந்துள்ளனர். உறவினர்கள் மற்றும் தனது முதலாளி குடும்பத்தினர் ஆத்தூருக்கு வந்ததை அடுத்து அருகில் உள்ள ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கத்தில் குளித்துவிட்டு வரலாம் என எல்லோரும் கிளம்பி உள்ளனர். காமராஜர் நீர்த்தேக்கத்திற்கு வந்த அவர்கள் அணையின் உள்ளே இறங்கி குளித்துக் கொண்டு இருந்தபோது செல்வகுமாரின் முதலாளியின் மனைவி தண்ணீரில் தத்தளித்துள்ளார். அவரை காப்பாற்ற சென்ற செல்வக்குமாரை தண்ணீருக்குள் தள்ளிவிட்டு முதலாளியின் மனைவி வெளியே வந்துள்ளார். செல்வக்குமார் தண்ணீரில் தத்தளிப்பதை பார்த்த அண்ணன் மகள் தர்ஷினி சித்தப்பாவை காப்பாற்றுவதற்காக சென்றபோது அவரும் தண்ணீரில் மூழ்கி இறந்துள்ளார்.

 

இறந்துபோனவர்களின் உடலைத் தேடுவதற்காக ஆத்தூர் தீயணைப்பு நிலைய அலுவலர் மோகன் மற்றும் திண்டுக்கல் தீயணைப்பு நிலைய அலுவலர் மயில்ராஜ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து இறந்தவர்களின் உடலை தேடினார்கள். இரண்டு மணி நேரம் அணைக்கட்டில் தேடிய போது இறந்துபோன செல்வகுமாரின் உடலை முதலில் கைப்பற்றி தரைப்பகுதிக்கு கொண்டுவந்தனர். அதன்பின்னர் அரை மணி நேரம் கழித்து அண்ணன் மகள் தர்ஷினியின் உடலை மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.

 

அணைக்கு குளிக்க வந்த இருவர் இறந்து போன சம்பவம் ஆத்தூர் பூஞ்சோலை பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கத்தில் இருவர் நீரில் மூழ்கி இறந்துவிட்டனர் என்ற செய்தி கேட்டவுடன் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி உடனடியாக காமராஜர் நீர்த்தேக்க பகுதிக்குச் சென்று உடலை தேடும் பணியில் ஈடுபட துணையாக இருக்க வேண்டும் என கூறியதையடுத்து ஆத்தூர் ஊராட்சி மன்றத்தலைவர் ஜம்ருத் பேகம், ஹக்கீம் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்க பகுதிக்குச் சென்று தீயணைப்புத் துறையினருக்கு உதவியாக செயல்பட்டனர். கடந்த இரண்டு வருடத்தில் இதுபோல் 9 பேர் உயிரிழந்த நிலையில் இதற்கு மாநகராட்சியின் மெத்தனமே காரணம் என குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

'அதிமுகவின் பொய் பிரச்சாரம் மக்களிடம் எடுபடாது'-ஐ.பி.செந்தில்குமார் பேச்சு

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
'AIADMK's false propaganda will not be accepted by the people' - IP Senthilkumar's speech

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தீவிரப் படுத்தியுள்ளன.

இந்நிலையில், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், பழனி சட்டமன்றத் தொகுதி திமுக உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார் திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். பிரச்சாரத்திற்கு ரெட்டியார்சத்திரம் தெற்கு ஒன்றிய செயலாளரும், ஒன்றிய பெருந்தலைவருமான சிவகுருசாமி தலைமை தாங்கினார். திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் வழக்கறிஞர் காமாட்சி ஒன்றிய குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வி முத்துகிருஷ்ணன், ரெட்டியார்சத்திரம் ஒன்றிய சிபிஎம் செயலாளர் சக்திவேல் வரவேற்றுப் பேசினார்.

நிகழ்வில் மாவட்டச் செயலாளர் ஐ.பி.செந்தில்குமார் பேசுகையில், ''மலைவாழ் மக்களுக்கு திமுக அரசு துரோகம் செய்தது போல் பொய்யான பிரச்சாரத்தை அதிமுகவினர், பாஜகவினர் பரப்பி வருகின்றனர். இது முற்றிலும் மோசடியான பிரச்சாரம் இது பொதுமக்கள் மத்தியில் எடுபடாது. கடந்த ஆண்டு 5.8.22 ஆம் தேதி அன்று, நமது திமுக பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி அவர்கள் ஆடலூர் மற்றும் பன்றி மலைப் பகுதியில் வசிக்கும் பொலையர் இன மக்களைப் பழங்குடியின மக்களாக மாற்றி அவர்களுக்கான உரியச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று மத்திய பழங்குடியின துறை அமைச்சர் அர்ஜீன் முன்டாவிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.

இதோ அந்தக் கோரிக்கை மனு என்று மனுவைத் தூக்கி காண்பித்து பிரச்சாரம் செய்தார். எதையும் ஆதாரத்துடன்தான் நாங்கள் பேசுவோம். ஆத்தூர் தொகுதியின் செல்லப் பிள்ளையாக இருக்கும் அமைச்சர் ஐ.பெரியசாமி ஆடலூர் ஊராட்சிக்கு மட்டும் எண்ணற்ற நலத்திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளார். இங்குள்ள மக்கள் மருத்துவ வசதிக்காக தாண்டிக்குடி, கொடைக்கானல் செல்ல வேண்டிய நிலையை மாற்றி ஆடலூருக்கும் பன்றி மலைக்கும் இடையே மிகப்பெரிய மருத்துவமனையைக் கொண்டு வந்துள்ளார். தேர்தல் முடிந்த பின்பு மருத்துவமனை திறக்கப்படும். ஆம்புலன்ஸ் வசதியுடன் மலையில் உள்ள எந்தக் கிராம மக்களும் இங்கு வந்து சிகிச்சை பெறலாம், விரைவில் மலைக் கிராமத்தில் வசிக்கும் பெண்களும் இலவசமாகப் பேருந்தில் பயணம் செய்ய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் விரைவில் உத்தரவிட உள்ளார். அதன்பின்னர் நீங்கள்(பெண்கள்) திண்டுக்கல்லுக்கு இலவசமாகப் பயணம் செய்யலாம்'' என்று கூறினார்.