Skip to main content

ரயில்வே சுரங்கப்பாதை தண்ணீரில் மூழ்கி இரு சிறுவர்கள் உயிரிழப்பு!!

Published on 14/12/2021 | Edited on 14/12/2021

 

Two boys drowned in railway tunnel

 

மத்திய அரசு பெரும்பாலான ஊர்களில் ரயில்வே பாதையில் குறுக்கே செல்லும் சாலைகளை அமைத்து அவ்வப்போது ரயில்கள் செல்லும்போது மூடுவதற்கும் திறந்து விடுவதற்கும் ஆட்களை நியமித்து அதன்படி பணிசெய்துவந்தனர். கடந்த சில ஆண்டுகளாக ரயில்வே நிர்வாகம் அமைக்கப்பட்டிருந்த பகுதிகளில் அதை மூடிவிட்டு, ரயில்வே பாதைக்கு சிறிய சுரங்கப்பாதை ஏற்படுத்தி அதன் வழியே போக்குவரத்துக்கு வழி செய்துள்ளது. ஆனால் அப்படி சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ள பெரும்பாலான இடங்களில் மழை தண்ணீர் தேங்கி பல மாதங்கள் போக்குவரத்து இல்லாமல் பல கிராமங்கள் முடக்கப்பட்டுள்ளன.

 

பல கிலோமீட்டர் சுற்றிக்கொண்டு தங்கள் பணிகளுக்காக நகரங்களுக்குச் செல்ல வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது. அதைவிடக் கொடுமை அந்த சுரங்கப்பாதையில் தேங்கியிருந்த மழை தண்ணீரில் மூழ்கி இரு சிறுவர்கள் இறந்துபோன சோகம் நிகழ்ந்துள்ளது. விழுப்புரம் அருகே உள்ளது சேர்ந்தனூர் வெள்ளக்குளம் கிராமம். இந்த ஊரைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது மகன் விக்னேஷ் (8), சந்திரமூர்த்தி என்பவரது மகன் தர்ஷன் (6) ஆகிய இருவரும் அங்கு உள்ள பள்ளியில் படித்துவருகின்றனர். நேற்று முன்தினம் (12.12.2021) மாலை சிறுவர்கள் இருவரும் சைக்கிள் ஓட்டிக்கொண்டு அப்பகுதியில் விளையாடிக்கொண்டிருந்தார்.

 

அப்போது அவர்கள் ஊருக்கு அருகே இருந்த ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கியிருந்த தண்ணீரில் இறங்கி அதைக் கடந்து செல்லும்போது அதில் மூழ்கியுள்ளனர். வெகுநேரமாகியும் சிறுவர்களைக் காணாததால் அவரது பெற்றோர்கள் தேடியுள்ளனர். அப்போது அந்தக் கோட்டை அருகே அவர்கள் ஓட்டிச் சென்ற சைக்கிள் கிடைத்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த அவர்கள், சுரங்கப்பாதை குட்டையில் இறங்கி தேடியபோது இரு சிறுவர்களும் தண்ணீரில் மூழ்கி கிடந்துள்ளனர். அவர்கள் இருவரையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர்களைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

 

இதுகுறித்து வளவனூர் போலீசார் வழக்குப் பதிவுசெய்து சிறுவர்களது உடல்களை முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். ரயில்வே நிர்வாகத்தின் சரியான திட்டமிடல் இல்லாததால் ரயில்வே கேட் உள்ள இடங்களில் சுரங்கப்பாதை அமைத்து, மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி, போக்குவரத்து முடக்கப்படுகின்றன. இப்போது அந்தத் தண்ணீரில் மூழ்கி உயிரிழக்கும் சம்பவங்களும் நடக்கின்றன. இதற்கு முறையான தீர்வு காண ரயில்வே நிர்வாகம் முன்வர வேண்டும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பள்ளிப் பேருந்து விபத்து; மாணவர் சொன்ன பகீர் காரணம்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
School bus incident The reason given by the student 

ஹரியானா மாநிலம் மகேந்திரகர் அருகே கனினா என்ற இடத்தில் தனியார் பள்ளிப் பேருந்து விபத்துக்குள்ளானதில் 5 மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும் பேருந்தில் இருந்த 15 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். காயமடைந்த மானவர்கள் மருத்துவமணையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் காயமடைந்த மாணவர்களை ஹரியானா கல்வி அமைச்சர் சீமா த்ரிகா நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளரிடம் பேசுகையில், “நான் இப்போதுதான் மாத்ரிகா மருத்துவமனைக்கு வந்தேன். மூன்று குழந்தைகளை மட்டுமே சந்தித்தேன். மூவரும்  காயமடைந்துள்ளனர். அவர்களின் உடைகள் முழுவதும் ரத்தம் உள்ளது. மருத்துவர்களின் அறிவுரைப்படி இங்கு உரிய சிகிச்சை அளிக்க முடியும்; சிலருக்கு பலத்த காயங்கள் உள்ளன” எனத் தெரிவித்தார்.

இந்த விபத்தில் காயமடைந்த மாணவர் ஒருவர் கூறுகையில், “பேருந்து ஓட்டுனர் குடிபோதையில் 120 கி.மீ. வேகத்தில் பள்ளிப் பேருந்தை ஓட்டினார். இதனால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது” எனத் தெரிவித்தார். இந்தச் சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தேர்த் திருவிழா; மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் காயம்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Andhra Pradesh Kurnool car festival incident

தேர்த் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் காயமடைந்துள்ளனர்.

ஆந்திர பிரதேசம் மாநிலம் கர்னூல் மாவட்டம் சின்ன தெகூர் கிராமத்தில் நடந்த உகாதி விழாவையொட்டி ஆஞ்சநேயர் கோயிலில் தேர்த் திருவிழா நடைபெற்றது. அப்போது தேர் மீது வயர் உரசி தேரில் மின்சாரம் பாய்ந்துள்ளது. இந்த விபத்தில் மின்சாரம் தாக்கியதில் 15 குழந்தைகள் காயமடைந்தனர். இதனையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக குழுந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தகவலை கர்னூல் கிராமப்புற காவல் நிலைய காவலர் கிரண் குமார் உறுதிப்படுத்தியுள்ளார். தேர்த் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் படுகாயமடைந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக கடந்த மார்ச் மாதம் 8 ஆம் தேதி (08.03.2024) ராஜஸ்தான் மாநிலம் கோட்டா அருகில் உள்ள காளிபஸ்தி என்ற இடத்தில் சிவராத்திரி விழா முன்னேற்பாடுகள் நடைபெற்று வந்தன. அங்கிருந்த சிறுவர்கள் கலசத்தில் தண்ணீர் எடுக்கச் சென்றுள்ளனர். அப்போது சிறுவர்கள் எடுத்துச் சென்ற கொடி கட்டிய இரும்புக் குழாய், உயரழுத்த மின்கம்பி மீது உரசியது. இதனால் சிறுவர்கள் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் 17 சிறுவர்கள் படுகாயமடைந்தது குறிப்பிடத்தக்கது.