Skip to main content

மூதாட்டியை கடத்தி கொன்ற இருவர் கைது! 

Published on 29/06/2022 | Edited on 29/06/2022

 

Two arrested in old lady passed away case

 

கள்ளக்குறிச்சி மாவட்டம், மூங்கில்துறைப்பட்டு அருகிலுள்ள பாக்கம் புதூர் கிராம சுடுகாட்டில் கடந்த வாரம் அடையாளம் தெரியாத ஒரு பெண்ணின் உடல் மர்மமாக புதைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த மூங்கில்துறைப்பட்டு காவல்துறையினர் உடலை மீட்டு பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவந்தனர். 


இந்நிலையில், புதைக்கப்பட்ட பெண்ணுடல் அதே பகுதியில் உள்ள விரியூர் கிராமத்தைச் சேர்ந்த மூர்த்தி என்பவரது மனைவி ஆண்டாள்(60) என்பதும், இவரது கணவர் இறந்துவிட்டதால் தனது மகள் தனலட்சுமியுடன் வசித்து வந்ததும் தெரியவந்தது. கொலை செய்து சுடுகாட்டு பகுதியில் புதைத்த சம்பவத்தன்று அப்பகுதியில் செயல்பட்ட மொபைல் போனில் பேசியவர்களின் சிக்னலை வைத்து சம்பந்தப்பட்ட செல்போன் எண்களை சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரணை செய்தனர். 


அதில் விரியூரைச் சேர்ந்த வீராசாமி(55) மற்றும் அவரின் மகன் விக்னேஷ்(25). ஆகிய இருவரிடமும் போலீசார் விசாரணை செய்தனர். அதில் ஆண்டாள் மகள் தனலட்சுமி  அப்பகுதியில் அரிசி கடை வைத்து நடத்தி வருகிறார். வீராசாமி புதிதாக அரிசி கடை தொடங்க முடிவு செய்து, அதற்காக தனலட்சுமியிடம் ரூ.15 லட்சம் பணம் கொடுத்து அரிசி வாங்கிக் கொடுக்குமாறு கேட்டுள்ளார். அந்தப் பணத்தை வாங்கிய தனலட்சுமி, அரிசி வாங்கி கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் வீராசாமி அரிசி கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை தான் கொடுத்த பணத்தை திருப்பி கொடுக்குமாறு கேட்டுள்ளார். ஆனால், பணத்தையும் திருப்பித் தராமல் தனலட்சுமி காலம் தாழ்த்தி வந்துள்ளார். 


கடந்த 7ஆம் தேதி வீராசாமியும், விக்னேஷும் பணம் கேட்பதற்காக தனலட்சுமி வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது தனலட்சுமி வீட்டை விட்டு தலைமறைவாகி விட்டார். இதனால் ஆத்திரமடைந்த இருவரும், வீட்டில் தனியாக இருந்த தனலட்சுமியின் தாய் ஆண்டாளை தங்களது வீட்டுக்கு அழைத்துச் சென்று கடந்த 18ஆம் தேதி வரை யாருக்கும் தெரியாமல் அடைத்து வைத்துள்ளனர். ஆனாலும், தனலட்சுமி தன் தாயைத் தேடி வரவில்லை. அடைத்து வைத்திருந்த ஆண்டாளை வெளியே விட்டால் அவர் போலீஸிடம் தெரிவித்துவிடுவார் என அஞ்சி கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். 

 

அதன்படி 18-ஆம் தேதி மதியம் ஆண்டாளை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். பின்னர் அவர்களது நண்பர் திருவண்ணாமலை மாவட்டம், அல்லப்பனூரைச் சேர்ந்தவரிடம் ஆலோசனை கேட்டுள்ளனர். அவரது ஆலோசனையின்படி ஆண்டாளின் முகத்தை அடையாளம் தெரியாத அளவிற்கு சிதைத்து ஒரு சாக்கு மூட்டையில் கட்டி, பாக்கம் புதூர் சுடுகாட்டில் கொண்டு வந்து சம்பவத்தன்று இரவோடு இரவாக புதைத்துவிட்டு சென்றுள்ளனர். இதை போலீசாரிடம் தந்தை-மகன் இருவரும் வாக்குமூலமாக அளித்துள்ளனர். கொலைக்கு உடந்தையாக இருந்த அவரது நண்பரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும், வீராசாமியையும் அவரது மகன் விக்னேஷையும் கைது செய்து நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஐ.ஜே.கே கட்சி நிர்வாகி வீட்டின் கழிவறையில் ரூ.1லட்சம் பறிமுதல்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
IJK party executive house toilet Rs 1 lakh seized

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே திருமங்கலம் ஊராட்சியில் உள்ள இந்திய ஜனநாயக கட்சி நிர்வாகி வீட்டின் பின்புறம் உள்ள கழிவறையில் ரூபாய் ஒரு லட்சம் பணம் மற்றும் துண்டறிக்கைகளை  தேர்தல் பறக்கும் படையினர் நேற்று (17.4.2024) இரவு பறிமுதல் செய்தனர்.

பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சி வேட்பாளராக இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் பாரிவேந்தர் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் தாமரை சின்னத்தில் போட்டியிடுகின்றார்.இந்நிலையில் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி லால்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருமங்கலம் மாதா கோயில் தெருவைச் சேர்ந்த சூசையப்பர் மகன் வினோத் சந்திரன்  ஐஜேகே கட்சியின் கிளைச் செயலாளராக உள்ளார். இவர் அந்தப் பகுதி வாக்காளர்களுக்கு ஓட்டுக்கு பணம் கொடுப்பதாக லால்குடி வருவாய் வட்டாட்சியர் முருகனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து லால்குடி வட்டாட்சியர் உத்தரவின் பெயரில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் செழியன் தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தினர். அதில், வினோத் சந்திரன் வீட்டின் பின்புறம் உள்ள கழிவறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு லட்சம் ரூபாய் பணம், பணம் விநியோகிக்கக்கூடிய பெயர் பட்டியல் மற்றும் டாக்டர் பாரிவேந்தரின் பாராளுமன்றத் தொகுதி பணிகள் என்ற தலைப்பில் அச்சிடப்பட்ட 500 புத்தகங்கள் 100 துண்டு பிரசுரங்களை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதனைத் தொடர்ந்தும் வினோத் சந்திரனிடம் நடத்திய விசாரணையில் பறிமுதல் செய்யப்பட்ட பணம் தன்னுடையது இல்லை என கூறியதை அடுத்து பறிமுதல் செய்த பணத்தினை பறக்கும் படை அலுவலர் செழியன் லால்குடி வருவாய் வட்டாட்சியர் முருகனிடம் ஒப்படைத்தார். அவர் பணத்தை லால்குடி கருவூலத்தில் வட்டாட்சியரிடம் ஒப்படைத்தார்.

Next Story

திருமணமான பெண்ணுக்கு கத்தி குத்து; முன்னாள் காதலன் வெறிச்செயல்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 married woman has been stabbed by her ex-boyfriend

திருப்பத்தூர் எல்ஐசி பில்டிங் பின்புறம் உள்ள ராஜீவ் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த குமார் மகள் இந்துமதி. அதே பகுதியைச் சேர்ந்த அனுமுத்து மகன் ஆட்டோ ஓட்டுநரான அஜித்குமார்.

இந்துமதி - அஜித்குமார் இருவரும் காதலித்து வந்ததாக தெரிகிறது. எனவே இந்த காதல் விவகாரம் வீட்டிற்கு தெரிய வர ‌ இதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. இதனால் கடந்த ஏழு வருடங்களுக்கு முன்பு வாணியம்பாடி பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவருடன் இந்துமதியை திருமணம் செய்து வைத்துள்ளனர். இந்த தம்பதிக்கு தற்போது ஐந்து வயதில் பெண் குழந்தை உள்ளது.

இந்துமதிக்கும் கணவர் கார்த்திக்கும் இடையே ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வாணியம்பாடியை விட்டு திருப்பத்தூர்  ராஜீவ்காந்தி நகர் பகுதியில் உள்ள அம்மா வீட்டிற்கு வந்துள்ளார் இந்துமதி. இந்த நிலையில் மீண்டும் இந்துமதி மற்றும் அஜித்குமார் இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. பின்னர் இருவரும் நன்றாக பேசி வந்த நிலையில் திடீரென இந்துமதி  அஜித் குமாரிடம் பேச மறுத்து விலகியதாக தெரிகிறது.

 married woman has been stabbed by her ex-boyfriend

அதனைத் தொடர்ந்து விரக்தியில் இருந்த அஜித்குமார்  திருப்பத்தூர்   பழைய பேருந்து நிலையம் அருகே அஜித்குமார் ஆட்டோ ஓட்டிச் சென்றபோது இந்துமதி அவ்வழியாக  சென்றுள்ளார். அப்போது அஜித்குமார் இந்துமதியை பார்த்து பேசி உள்ளார். அங்கே இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் அஜித்குமார் ஆத்திரமடைந்து திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து இந்துமதியின் முகம் மற்றும்  உடம்பின் பல்வேறு பகுதிகளில் குத்தியும்,வெட்டியும் விட்டு  தப்பியுள்ளார். அப்போது அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.

பின்னர் அங்கிருந்த பொதுமக்கள் இந்துமதியை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக ஆட்டோவில் அழைத்துச் சென்றனர். இந்துமதி திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து திருப்பத்தூர் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அஜித்குமார் திருப்பத்தூர் நகரகாவல் நிலையத்தில் தானாக  சரணடைந்தார்.