Skip to main content

'அமைதிப்படை' ஓ.பி.ஸ்... 'தகரம்' தங்க தமிழ்ச்செல்வன்... - போடியில் டி.டி.வி.தினகரன் பேச்சு!

Published on 30/03/2021 | Edited on 30/03/2021

 

TTV Dinakaran's speech in bodi election campaign

 

போடி தொகுதியில் அ.ம.மு.க வேட்பாளர் முத்துச்சாமியை ஆதரித்து வாக்கு சேகரிக்க போடி வந்திருந்தார் டி.டி.வி.தினகரன். பிரசாரத்தின் போது, ஓ.பி.எஸ் மற்றும் தங்க தமிழ்ச்செல்வனை கடுமையாக தாக்கிப் பேசினார்.

 

தேனி மாவட்டத்தில் உள்ள போடிநாயக்கனூரில், அ.தி.மு.க சார்பில் மூன்றாவது முறையாக ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடுகிறார். தி.மு.க சார்பில் அக்கட்சி தேனி வடக்கு மாவட்டச் செயலாளரான தங்க தமிழ்ச்செல்வன் போட்டியிடுகிறார். அதேபோல, அ.ம.மு.க சார்பில், அக்கட்சியின் தெற்கு மாவட்டச் செயலாளரான முத்துச்சாமி போட்டியிடுகிறார். ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி, போடியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

 

இந்தநிலையில், முத்துச்சாமியை ஆதரித்து பிரச்சாரம் செய்ய, அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தேனி வந்தார். திண்டுக்கல் மாவட்டத்தில் பிரச்சாரத்தை முடித்துவிட்டு, பெரியகுளம் வர இரவு 10 மணியைக் கடந்ததால், பெரியகுளத்தில் காத்திருந்த தொண்டர்களுக்கு கையசைத்துவிட்டு, போடி சென்றார். அங்கே, தனியார் ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த டி.டி.வி.தினகரன் நேற்று காலையில் போடி தேவர் சிலை அருகே பிரச்சாரம் செய்தார் 

 

டி.டி.வி.தினகரனுக்கு, கட்சித் தொண்டர்கள் மலர் தூவி வரவேற்றனர். மலர் தூவுவதை நிறுத்தச்சொன்ன டி.டி.வி.தினகரன், மைக்கை பிடித்து, “இப்படித்தான் பிரச்சாரத்தின் போது, மலர் தூவி, அதில் இருந்த புழு ஒன்று உடலில் ஏறிவிட்டது… பன்னீர், தங்கம் மாதிரி” என்றார். இதனைக் கேட்ட அ.ம.மு.க தொடர்கள் ஆரவாரம் செய்ய, தனது பேச்சைத் தொடர்ந்த டி.டி.விதினகரன் பேசும்போது,

 

''நான் பன்னீரை சேர்மன் என்று தான் கூப்பிடுவேன். அவரும் என்னை அப்படி தான் கூப்பிடச் சொல்வார். இரண்டு நாள்கள் எங்களோடுதான் இருந்தார். யார் சொன்னாங்கனு தெரியல., திடீர்னு ஞான உதயம் பிறந்தது மாதிரி தியானம் பண்ண போயிட்டார். சசிகலா மீது கலங்கம் வந்துவிடக்கூடது என்பதற்காக தான் தர்மயுத்தம் நடத்தினேன் என தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுக்கிறார். எனக்கு சிரிப்பு தான் வருது. இங்கே இன்னொருத்தர் இருக்காறே… தங்க தமிழ்ச்செல்வன். அவர் எதுக்கு நம்ம கூட வந்தார். எதுக்கு நம்ம கூட இருந்தார்னு தெரியல. அவர் பெயரில் தான் தங்கம். குணத்தில் தகரம். இவர்கள் நமக்கு எதிரிகள், துரோகிகள் என யாரை எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் சொன்னார்களோ, அவர்களுடன் சேர்ந்துகொண்டார். 2001 ம் ஆண்டு நான் எம்.பி’யாக இருந்த போது, அமைத்திப்படை பன்னீரும், தகரம் தங்க தமிழ்ச்செல்வனும் எப்படி இருந்தார்கள். இப்போது எப்படி இருக்கிறார்கள் என பாருங்கள் போடி மக்கள் நல்ல தீர்ப்பை அளிக்க வேண்டும்'' என்று பேசினார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“2019ல் நம்பிக்கையோடு வந்தேன், 2024ல்...” - பிரதமர் மோடி

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
 PM Modi campaign and says he came with confidence in 2019 at assam

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெறும் இந்த மக்களவைத் தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகளான தி.மு.க, அதிமுக, காங்கிரஸ், பா.ஜ.க, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரங்களைத் தீவிரபடுத்தி வருகின்றன.

அந்த வகையில், மொத்தம் 14 தொகுதிகளைக் கொண்ட அசாம் மாநிலத்தில் 3 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற இருக்கிறது. அதன்படி, முதற்கட்ட தேர்தலானது வரும் ஏப்ரல் 19ஆம் தேதியும், இரண்டாம் கட்டத் தேர்தலானது ஏப்ரல் 26ஆம் தேதியும், மூன்றாம் கட்டத் தேர்தலானது மே 7ஆம் தேதியும் நடைபெற உள்ளது. நாடு முழுவதும் உள்ள சில தொகுதிகளில் நடைபெறும் முதற்கட்ட தேர்தல் நாளை மறுநாள் (19-04-24) நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்திலும், வாக்கு சேகரிப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், அசாம் மாநிலத்தின் நல்பாரி மாவட்டத்தில் பா.ஜ.க சார்பில் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் இன்று(17-04-24) நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார். அதில் அவர், “இன்று நாடு முழுவதும் மோடியின் உத்தரவாதம் நடந்து கொண்டிருக்கிறது. மோடியின் உத்தரவாதத்திற்கு வடகிழக்கு பகுதியே சாட்சி.

70 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள் அனைவருக்கும் ஆயுஷ்மான் யோஜனா திட்டத்தின் கீழ் 5 லட்சம் ரூபாய் வரை இலவச சிகிச்சை வசதிகள் வழங்கப்படும் என்று உத்தரவாதம் அளித்தேன். அவர்களின் சிகிச்சையை எந்தவித பாரபட்சமும் இல்லாமல் பார்த்துக்கொள்வேன். பி.எம். கிஷான் யோஜனா திட்டத்தின் கீழ் இங்குள்ள விவசாயிகள் ரூ.1000க்கு மேல் பெற்றுள்ளனர். இப்போது, ​​பாஜக இந்தத் திட்டத்தைத் தொடர்வதாக அறிவித்துள்ளது, இதன் மூலம் அசாமின் விவசாயிகளுக்கு எந்தவித பாகுபாடும் இல்லாமல் உதவி மற்றும் அதிகாரம் அளிக்கிறது.

2014ஆம் ஆண்டில் எதிர்பார்ப்புடன் மக்களைச் சந்திக்க வந்தேன். 2019ஆம் ஆண்டில் நம்பிக்கையோடு வந்தேன். தற்போது 2024ல் உத்தரவாதத்தோடு வந்திருக்கிறோம். நாட்டின் ஒவ்வொரு குடிமகனையும் அணுகி அவர்களுக்குத் தகுதியான வசதிகளை வழங்கத் தேசிய ஜனநாயகக் கூட்டணி முடிவு செய்துள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்கு மேலும் 3 கோடி புதிய வீடுகள் கட்டித் தரப்படும். பாகுபாடின்றி அனைவருக்கும் அவை கிடைக்கும்” என்று கூறினார்.

Next Story

“ எங்களுக்கு உத்தரவிடுங்கள்...” - அருண் நேருவை ஆதரித்து அமைச்சர் கே.என்.நேரு பிரச்சாரம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Minister KN Nehru in support of Arun Nehru at perambalur for lok sabha election

தமிழக அரசு மூலம் லால்குடி சட்டமன்ற தொகுதியில் பல்வேறு நலத்திட்ட  நிறைவேற்றப்பட்டுள்ளன. ஒன்றிய அரசிடமிருந்து  திட்டங்களைப் பெற்றுநிறைவேற்றிட உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து, அருன் நேருவை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுங்கள் என அமைச்சர் கே.என்.நேரு பேசினார்.

பெரம்பலூர் பாராளுமன்றத் தி.மு.க வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து லால்குடியில் இருசக்கர வாகன பிரச்சாரப் பேரணி ரவுண்டானாவில் தொடங்கியது. முன்னதாக மத்திய மாவட்டச் செயலாளர் வைரமணி, லால்குடி சவுந்தரபாண்டியன் எம்.எல்.ஏ ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்.

அதனைத் தொடர்ந்து அமைச்சர் கே.என்.நேரு பிரச்சாரப் பேரணியைத் தொடங்கி வைத்து பேசுகையில், “லால்குடி சட்டமன்றத் தொகுதியில் பல்வேறு நலத்திட்ட வளர்ச்சி பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. நமது பகுதியில் எண்ணற்ற திட்டங்கள் நடைபெற்றிருப்பதை நன்கு அறிவீர்கள். மாநில அரசு செயல்படுத்தக்கூடிய திட்டங்களைக் காட்டிலும் ஒன்றிய அரசிடமிருந்து திட்டங்களைப் பெற்று நமது பகுதியில் நிறைவேற்றிட வேண்டும். இது நமது சொந்தத் தொகுதி என்பதால் அதிகமாகத் திட்டங்களைக் கொண்டு வந்து பணிகளைச் செய்திட உங்கள் ஆதரவு கேட்டு வந்துள்ளோம்.

Minister KN Nehru in support of Arun Nehru at perambalur for lok sabha election

எங்களுக்கு உத்தரவிடுங்கள், நாங்கள் பணியாற்றத் தயாராக உள்ளோம். லால்குடி நகராட்சி பகுதியில் புதிய பேருந்து நிலையம், தாலுகா அலுவலகம், அலுவலகத்திற்கு புதிய கட்டிடம், பொதுமக்கள் வசதிக்கேற்ப புதிய மார்க்கெட் அமைக்கப்பட உள்ளது. இந்தப் பணிகள் எல்லாம் அடுத்த மாதம்  தொடங்கப்பட உள்ளது. எனவே இப்படிப்பட்ட எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றிட உதய சூரியன் சின்னத்தில் வாக்களித்து அருண் நேருவை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து பெரம்பலூர் பாராளுமன்றத் தி.மு.க வேட்பாளர் அருண் நேரு வாக்காளரிடம் வாக்கு சேகரித்தார்.