Skip to main content

லாரி சங்க உரிமையாளர்கள், கூலி தொழிலாளர்கள் மோதலால் பாபரப்பு..! போலீசார் குவிப்பு

Published on 08/03/2021 | Edited on 08/03/2021

 

Trichy Truck union owners, wage workers conflict  police


தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் ‘லாரி புக்கிங் சென்டர்’ (பார்சல் ஆஃபீஸ் மையம்) திருச்சி பழைய பால்பண்ணை ரவுண்டானா அருகே இன்று (08.03.2021) திறக்கப்பட்டது. இந்த அலுவலகத்தை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச்செயலாளர் கோவிந்தராஜூலு திறந்து வைத்தார். அப்போது சி.ஐ.டி.யு.வைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட லாரி புக்கிங் ஆபீஸ் சுமைப்பணி தொழிலாளர்கள் திடீர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். 

 

இருதரப்பினருக்கும் கைகலப்பு ஏற்படும் சூழல் நிலவியது. இதனால் போலீசார் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து பேச்சுவார்த்தைக்கு அழைத்துச் சென்றனர். சிறிது நேரத்திற்குப் பிறகு சாலையின் எதிரே கூட்டமாக நின்றுகொண்டிருந்த சி.ஐ.டி.யு.வைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர், திடீரென லாரி புக்கிங் அலுவலத்திற்குள் நுழைந்து வியாபாரிகள், லாரி புக்கிங் உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்களை சரமாரியாகத் தாக்கினர். இதில், வெங்காய மண்டி தலைவர் கந்தன் தலையில் சி.ஐ.டி.யு. சுமை தூக்கும் தொழிலாளர்கள் கட்டையைக் கொண்டு தாக்கியதில் ரத்தம் கொட்டி மயங்கி விழுந்தார். அவரை காப்பாற்ற வந்தவர்களுக்கும் காயம் ஏற்பட்டது. 

 

Trichy Truck union owners, wage workers conflict  police

 

மேலும் புக்கிங் ஆஃபீஸ் முன்பு போடப்பட்டிருந்த சாமியானா பந்தல், வாழைமரம், அலுவலகத்தில் போடப்பட்டிருந்த சேர், டேபிள் ஆகியவற்றை அடித்து நொறுக்கி சாலையில் தூக்கி எறிந்தனர். இதனால் அப்பகுதியே போர்க்களம் போல் காட்சி அளித்தது. இதுகுறித்து வியாபாரி சங்க பொதுச்செயலாளர் கோவிந்தராஜூலுக்கு தகவல் தெரிவிக்கபட்டது. சம்பவ இடம் வந்து வியாபாரிகள் மற்றும் தொழிலாளியைத் தாக்கிய சி.ஐ.டி.யு.வைச் சேர்ந்த தொழிலாளர்களைக் கைது செய்யக்கோரி திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார். 

 

அதனைத் தொடர்ந்து, மறியலில் ஈடுபட்டவர்களுடன் போலீஸ் துணை கமிஷனர்கள் பவன் குமார் ரெட்டி, வேதரத்தினம், உதவி கமிஷனர்கள் மணிகண்டன், ரவி அபிராம் ஆகியோர் வியாபாரிகள் மற்றும் லாரி உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள், தாக்கியவர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தினர். இதனால், போலீசார் நூற்றுக்கும் மேற்பட்ட சி.ஐ.டி.யு.வைச் சேர்ந்த சுமை தூக்கும் தொழிலாளர்களைக் கைது செய்தனர். மேலும் காயமடைந்த கந்தன், 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஐ.ஜே.கே. நிர்வாகி வீட்டில் பணம் பறிமுதல்!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Money confiscated at the IJK administrator house

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை மறுநாள் (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை இன்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெறுகிறது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், திருச்சி மாவட்டம் லால்குடி அருகே ஐ.ஜே.கே. கட்சியின் நிர்வாகி வினோத்சந்திரன் என்பவரின் வீட்டில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக வைத்திருந்த ரூ. 1 லட்சம் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் அதிரடியாக பறிமுதல் செய்தனர். பெரம்பலூரில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் ஐ.ஜே.கே. நிறுவனர் பாரிவேந்தருக்கு ஆதரவாக வாக்களிக்க இந்தப் பணம் கொடுக்கப்பட இருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், பாரிவேந்தர் தொடர்பான கையேடுகளையும் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். முன்னதாக தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்ய வருவதை அறிந்து தனது வீட்டின் கழிவறையில் வினோத்சந்திரன் பணத்தை பதுக்கியுள்ளார். 

Next Story

துரை வைகோவை ஆதரித்து அமைச்சர்கள் தீவிர ஓட்டு வேட்டை!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Ministers are actively gain for votes by supporting MDMK candidate Durai Vaiko

திருச்சி பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் ம.தி.மு.க வேட்பாளர் துரை வைகோ தொகுதி முழுவதும் பம்பரமாக சுழன்று தி.மு.க அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி தீவிரமாக வாக்கு சேகரிப்பில்  ஈடுபட்டார்.

திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, திருவரங்கம், திருவெறும்பூர், புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, துரை வைகோவுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து நேற்று (16-04-24) தீவிர இறுதி கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டார். நேற்று (16-04-24) காலையில் புதுக்கோட்டையில் துரை வைகோவை ஆதரித்து பிரம்மாண்ட வாகன பேரணி நடந்தது. இதில் அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன், மாவட்ட செயலாளர் செல்ல பாண்டியன் மற்றும் கூட்டணி கட்சியினர் திரளாகக் கலந்து கொண்டனர்.

இதையடுத்து, நேற்று மதியம் ஒரு மணிக்கு திருச்சி மத்திய பேருந்து நிலையத்திற்கு வெளியே பெரியார் சிலை அருகில் பிரச்சார பேரணி தொடங்கியது. இதில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்துகொண்டு துரை வைகோவை ஆதரித்து பிரச்சாரம் செய்தனர். அப்போது, தமிழ்நாட்டு மக்களுக்கு அனைத்து உரிமைகளும், திட்டங்களும் கிடைத்திட, மத்தியில் நல்லாட்சி மலர்ந்திட நம்முடைய வேட்பாளர் துரைவைகோவுக்கு தீப்பெட்டி சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக் கொண்டனர். இறுதிக்கட்ட பிரச்சார பேரணி நகர் முழுவதும் சென்று காந்தி மார்க்கெட்டில் முடிவடைந்தது .

இந்தப் பிரச்சார பயணத்தில் மத்திய மாவட்ட தி.மு.க செயலாளர் வைரமணி, மாநகர செயலாளர்கள் மேயர் அன்பழகன், மண்டல குழு தலைவர் மதிவாணன், இனிகோ இருதயராஜ், எம்.எல்.ஏ, ம.தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் டாக்டர் ரொகையா, ம.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் வெல்லமண்டி சோமு, தமிழ் மாணிக்கம், திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரெக்ஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர்கள் புல்லட் லாரன்ஸ், கனியமுதன், மக்கள் நீதி மய்யம் மாவட்ட செயலாளர் வக்கீல் கிஷோர் குமார் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.