Skip to main content

திருச்சி ரயில்வே சந்திப்பு மேம்பாலத்தை திறந்து வைத்த அமைச்சர் கே.என். நேரு

Published on 29/05/2023 | Edited on 29/05/2023

 

தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறையின் சார்பில், திருச்சி இரயில்வே சந்திப்பு மேம்பாலத்தின் புதிய கட்டுமானப் பணிகள் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இதில் ராணுவத்திற்குச் சொந்தமான நிலத்தை கையகப்படுத்துவதில் ஏற்பட்ட காலதாமதத்தால் பாலத்தின் 20 விழுக்காடு பணிகள் தடைப்பட்டு போனது. அப்பணிகள் தற்போது நிறைவடைந்ததைத் தொடர்ந்து சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் அணுகு சாலை, இன்று போக்குவரத்து பயன்பாட்டிற்குத் திறக்கப்பட்டது. இதில் அமைச்சர் கே.என். நேரு கொடியசைக்க, 300க்கும் மேற்பட்ட போலீசார் இருசக்கர வாகனங்களில் பேரணியாக பாலத்தைக் கடந்து சென்றனர்.

 

இந்த விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் வைத்தியநாதன், மாநகர காவல் ஆணையர் சத்திய பிரியா உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். திருச்சி ரயில்வே சந்திப்பில் அகலம் குறைந்த ரயில்வே மேம்பாலத்திற்கு பதிலாக புதிய மேம்பாலம் அமைக்கும் பணி இரண்டு கட்டங்களாக நிறைவடைந்துள்ளது. முதல்கட்டமாக, அம்பேத்கர் ரவுண்டானாவை மையமாக வைத்து திண்டுக்கல் சாலை,  மத்திய பேருந்து நிலையம், இரயில்வே சந்திப்பு மற்றும் மதுரை சாலை ஆகியவற்றை இணைக்கும் வகையில் பாலம் கட்டும் பணி முடிக்கப்பட்டு, 80% பணிகள் நிறைவடைந்த நிலையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது.

 

இந்நிலையில் சென்னை - மதுரை தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் வகையிலான மன்னார்புரம் பகுதியில் ராணுவத்துக்குச் சொந்தமான இடத்தைக் கையகப்படுத்துவதில் காலதாமதம் ஏற்பட்டதால்,  இந்த பகுதியில் அணுகுசாலை அமைக்க முடியாமல் இருந்தது. பல்வேறு கட்ட தொடர் நடவடிக்கைகளுக்கு பின்னர் ராணுவத் துறைக்குச் சொந்தமான நிலத்தின் மதிப்பான 8.45 கோடி ரூபாய்க்கு, சம மதிப்பிலான உள்கட்டமைப்பை நெடுஞ்சாலைத் துறையினர் ராணுவத்தினருக்கு அமைத்துத் தருவது எனப் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது.

 

அதனைத் தொடர்ந்து ராணுவத்துக்குச் சொந்தமான 0.66 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. பின்னர் அதில் அணுகு சாலை அமைக்கும் பணியை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர், கடந்த 14.05.2022 அன்று 3.53 கோடி மதிப்பீட்டில் தொடங்கி வைத்தார். மேம்பாலத்தில் சென்னை செல்லும் பகுதிக்கு அணுகு சாலை,  ராணுவத்தின் நிலத்தை ஒட்டிய சுற்றுச்சுவர்,  சேவை சாலை, மழை நீர் வடிகால் அமைப்பு போன்ற கட்டுமான பணிகள் தற்சமயம் முடிவுற்றது. பாலத்தில் மின் விளக்குகள் பொருத்தப்பட்டு சாலை பாதுகாப்பு சிக்னல்கள் அமைக்கப்பட்டு நிறைவுற்ற இப்பாலத்தை அமைச்சர் கே.என். நேரு இன்று திறந்து வைத்தார். பாராளுமன்ற திருச்சி தொகுதி உறுப்பினர் திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர். 

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பயங்கர விபத்து! பரிதாபமாக பலியான நபர்

Published on 07/12/2023 | Edited on 07/12/2023
accident on Trichy-Chennai National Highway!

 

தூத்துக்குடியில் இருந்து கடலூர் சாத்தான் குப்பம் நோக்கி சுமார் 500 உர மூட்டைகளை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி வந்துகொண்டிருந்தது. இந்த லாரியை அர்ஜுன் என்பவர் ஓட்டிவந்தார். லாரி திருச்சி சஞ்சீவி நகர் பேருந்து நிலையம் அருகே இன்று அதிகாலை வந்தபோது, தனது கட்டுப்பாட்டை இழந்து பேருந்து நிழற்குடையில் மோதியதில் நிழற்குடையை நொறுக்கியது. மேலும் அதன் அருகே தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்தில் இருந்த 20 அடி பள்ளத்தில், உர மூட்டைகளுடன் லாரி தனது பக்கவாட்டில் கவிழ்ந்தது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருச்சி கோட்டை போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். 

 

அந்த விசாரணையில், இந்த சம்பவத்தின் போது பேருந்து நிழற்குடையில் மூன்று நபர்கள் இருந்துள்ளனர். இதில், இருவர் தப்பி ஓடிவிட ஒரு நபர் மட்டும் விபத்தில் சிக்கியது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து போலீஸார் மற்றும் தீயணைப்புத் துறையினர் உடனடியாக ஜெ.சி.பி. இயந்திரத்தின் உதவியுடன் பள்ளத்தில் கவிழ்ந்த லாரியை மீட்டனர். பிறகு சரிந்து விழுந்திருந்த உர மூட்டைகளை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். அப்போது, உர மூட்டைகளின் அடியில் 50 வயது மதிக்கத்தக்க நபரை உயிரிழந்த நிலையில் மீட்டனர். 

 

உர மூட்டைகளுக்கு இடையே சிக்கி உயிரிழந்த நபர் குறித்து போலீஸார் நடத்திய விசாரணையில், உயிரிழந்த நபர் திருச்சி மண்ணச்சநல்லூர் காமராஜர் காலனியைச் சேர்ந்த முருகேசன் என்பது தெரியவந்தது. போலீஸாரின் தொடர் விசாரணையில், திருச்சி சஞ்சீவி நகர் பகுதியில் முருகேசன் தனியார் நிறுவனம் ஒன்றில் இரவு காவலராக பணியாற்றி வருகிறார். பணி முடித்து வீடு திரும்புவதற்காக பேருந்து நிலையத்தில் அமர்ந்திருந்த போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது. மீட்கப்பட்ட முருகேசனின் உடல் தற்போது உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

“புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார் நிலையில் உள்ளது” - அமைச்சர் கே.என்.நேரு

Published on 02/12/2023 | Edited on 02/12/2023

 

Minister KN Nehru says Storm alert is on standby

 

வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி (21.10.2023) தொடங்கியதிலிருந்து தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

 

தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலவி வந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது தற்போது வடமேற்கு திசையில் 18 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. மேலும், இது சென்னையிலிருந்து 510 கி.மீ தொலைவில் இருந்து வருகிறது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாறும் எனச் சொல்லப்பட்டுள்ளது. 

 

இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற உள்ள நிலையில் அதற்கு மிக்ஜம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த மிக்ஜம் புயல் டிசம்பர் 5 ஆம் தேதி முற்பகலில் நெல்லூருக்கும் - மசூலிப்பட்டினத்திற்கும் இடையே கரையைக் கடக்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக வட தமிழக கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில், புயலை எதிர்கொள்ள எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். 

 

இது குறித்து அமைச்சர் கே.என்.நேரு கூறியதாவது, “தேவையான புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. சாக்கடை குழிகளில் மழை நீர் தேங்காதவாறு எந்திரங்கள் மூலம் அடைப்புகள் நீக்கப்பட்டுள்ளன. 2042 கி.மீ தூர்வாரும் பணிகள் நடைபெற்றதால் மழை நீர் எங்கும் தேங்கவில்லை. அவசர தேவைகளுக்காக ஜெனரேட்டர்கள், மின்மோட்டார்கள் என அனைத்தும் தயார் நிலையில் உள்ளது. அடுத்த 2 நாட்களுக்கு கடற்கரைகள் மற்றும் பூங்காக்களுக்கு செல்வதை மக்கள் தவிர்க்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.  

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்