Skip to main content

திருடன் என நினைத்து  மனநலம் பாதித்த பட்டதாரி அடித்துக் கொலை

Published on 06/12/2022 | Edited on 06/12/2022

 

trichy it men beater and murder

 

திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில், மணிகண்டம் என்ற பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மர அறுவை மில்லில் கடந்த 3ஆம் தேதி அதிகாலை அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் மில்லில் நுழைந்து அங்கிருந்த செல்போனை திருட முயன்றதாகக் கூறப்படுகிறது. அப்போது மில்லின் உரிமையாளர் அவரை விரட்டியுள்ளார். மீண்டும் அதே நபர் இரவும் வந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது மில்லில் இருந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பணியாளர்கள் நான்கு பேர் திருடனை மடக்கிப் பிடித்து அங்கிருந்த மரத்தில் கட்டி வைத்து கண்மூடித்தனமாகத் தாக்கியுள்ளனர்.

 

இதனால், அந்த இளைஞரின் நெஞ்சு,  வலது கை, வலது கால் மற்றும் இடுப்பு பகுதியில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. மருத்துவ உதவி, உணவு மற்றும் தண்ணீர்  என எதுவும் கொடுக்காமல் இரவு முழுவதும் கட்டி வைத்துள்ளனர். இதனால் வலி தாங்க முடியாத அந்த இளைஞர் இறந்துவிட்டார். இதுகுறித்து மணிகண்டம் போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் கொலை செய்யப்பட்டவர் ஐ.டி. பட்டதாரியான சக்கரவர்த்தி எனவும், இவர் திருச்சி துவாக்குடி பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் இவருக்கு திருமணம் ஆகி ஒரு கைக்குழந்தை உள்ளதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

 

குடிப்பழக்கத்தினால் மனநலம் பாதிக்கப்பட்டு காணாமல் போன நிலையில், இவரை மணிகண்டம் பகுதியில் திருடன் என நினைத்து மர அறுவை மில்லில் பணியிலிருந்த  அசாம் மாநில ஊழியர்கள் சக்கரவர்த்தியை அடித்து கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.  அதனைத்  தொடர்ந்து குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த மர அறுவை மில் உரிமையாளரான திரேந்தர், அசாம் மாநில தொழிலாளர்களான பைசல் சாக் (வயது 36), யாசின் மப்ஜில் ஹுக் (வயது 28) ஆகிய 3 பேரையும் போலீசார்  கைது செய்தனர். பின்னர் அவர்களை திருச்சி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'மீண்டும் சிக்கிய 4 கோடி'-பறக்கும் படை அதிரடி!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
erode


நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தீவிரப்படுத்தியுள்ளன.

மேலும், தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் பறக்கும் படையினர் நிலை கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் இரவு பகல் என சுழற்சி முறையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு ரூ.50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்படும் தொகையைப் பறிமுதல் செய்து வருகின்றனர்.

அதன்படி ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, கோபி, அந்தியூர், பவானி சாகர் என மாவட்டம் முழுவதும் உள்ள 8 சட்டமன்றத் தொகுதிகளில் இதுவரைத் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையின் போது, உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.4 கோடியே 28 லட்சத்து 20 ஆயிரத்து 303 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் உரிய ஆவணங்கள் காண்பித்ததால் ரூ.2 கோடியே 95 லட்சத்து 65 ஆயிரத்து 213 சம்பந்தப்பட்டவர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது. மீதம் 1 கோடியே 32 லட்சத்து 55 ஆயிரத்து 90 ரூபாய் பணம் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் உரிய ஆவணங்களை காண்பித்து பணத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அண்மையில் பாஜகவின் நெல்லை வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான பணம் 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில் அது தொடர்பாக அவருக்கு போலீசார் சம்மன் அனுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

சல்மான் கான் வீட்டின் முன் துப்பாக்கிச்சூடு; மும்பை போலீசார் அதிரடி!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
incident front of Salman Khan house Mumbai police in action

பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருப்பவர் சல்மான்கான். இவர் மும்பை பாந்த்ரா நகரில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இந்த இத்தகைய சூழலில் நேற்று முன்தினம் (14.04.2024) இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் சல்மான்கான் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதன் பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். துப்பாக்கிச்சூடு நடந்த போது சல்மான் கான் வீட்டில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டுத் தப்பிச்சென்ற மர்ம நபர்களைத் தேடி வந்தனர். சல்மான் கானுக்கு ஒய் பிளஸ் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்ட நிலையில், அவர் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்ற மர்ம நபர்களை தீவிரமாகத் தேடி வந்தனர்.

இந்நிலையில், நடிகர் சல்மான்கான் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடத்திய விவகாரத்தில் விக்கி குப்தா மற்றும் சாகர் பால் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குஜராத் மாநிலத்தின் பூஜ் பகுதியில் தலைமறைவாக இருந்த குற்றவாளிகளை மும்பை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இது குறித்து பூஜ் சார்பில் காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ஏப்ரல் 14 ஆம் தேதி நடிகர் சல்மான் கானின் வீட்டுக்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடத்திய லாரன்ஸ் பிஷ்னாய் கும்பலில் குற்றம் சாட்டப்பட்ட இருவரை மேற்கு கச்சச் போலீஸார் கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்ட இருவரும் பீகாரைச் சேர்ந்த விக்கி குப்தா (வயது 24), சாகர் பால் (வயது 21) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.