Skip to main content

சில்லறை கொடுப்பதில் பெண்ணிடம் தகராறு! ஆம்புலன்ஸுக்கு வழிவிடாமல் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்!  

Published on 16/05/2022 | Edited on 16/05/2022

 

 Transport workers struggle not to give way to ambulances!

 

கடலூர் மாவட்டம், சிதம்பரத்திலிருந்து விருத்தாச்சலம் நோக்கி நேற்று மாலை அரசு பேருந்து ஒன்று வந்தது. ஓட்டுநர் கதிர்வேல் பேருந்தை ஓட்டி வர, சு.கீணனுாரை சேர்ந்த மணிகண்ணன்(29) என்பவர் நடத்துநர் பணியில் இருந்தார். அப்போது அந்த பேருந்தில் பயணம் செய்த பெண் ஒருவர் 500 ரூபாய் கொடுத்து டிக்கெட் எடுத்துள்ளார். அதற்கு நடத்துநர் மணிவண்ணன், சில்லரை இல்லை என்றதுடன் இறங்கும் போது வாங்கிக்கொள்ளுமாறு கூறியுள்ளார். பேருந்து விருத்தாசலம் வந்த நிலையில் அந்தப் பெண் நடத்துநர் மணிகண்டனிடம் சில்லறையை கேட்டுள்ளார். அதற்கு மணிகண்டன் தாறுமாறாக பேசியதால் இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. மேலும் மணிகண்டன் அந்த பெண்ணை ஆபாசமாக அருவருக்கத்தக்க வகையில் பேசியதாக கூறப்படுகிறது. 

 

இதனால் மனமுடைந்த அந்த பெண், விருத்தாச்சலம் பாலக்கரை பேருந்து நிறுத்தத்தில் இறங்கிய பிறகு பேருந்தில் நடத்துநர் நடந்து கொண்ட முறை குறித்து தனது உறவினர்களிடம் கூறி, கதறி அழுதுள்ளார். இதன்காரணமாக மாலை 5:30 மணியளவில் பேருந்து நிலையத்திற்கு ஆட்டோவில் வந்த மர்மநபர்கள் சிலர் நடத்துநர் மணிகண்டனை ஆபாசமாக திட்டி, தாக்கி அவரை ஆட்டோவில் ஏற்றிச் சென்றனர். 

 

இதையறிந்த அரசு பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள்  விருத்தாசலம் – உளுந்தூர்பேட்டை சாலையின் குறுக்கே பேருந்துகளை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேசமயம் ஆட்டோவில் அழைத்துச் செல்லப்பட்ட நடத்துநர் மணிகண்டன் விருத்தாசலம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு, சிறிது நேரத்தில் நடத்துநர் மணிகண்டன் மீண்டும் பேருந்து நிலையத்திற்கு வந்தார். அப்போது போக்குவரத்து நெரிசலில் ஆம்புலன்ஸ் சிக்கி நின்றது. இதில் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சிலர் போக்குவரத்து ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.


அப்போது பொதுமக்களுக்கும், போக்குவரத்து ஊழியர்களுக்கும்  இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு தாக்கி கொண்டனர். இதில் ஆத்திரமடைந்த போக்குவரத்து ஊழியர்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதையறிந்து வந்த உதவி காவல் கண்காணிப்பாளர் அங்கித் ஜெயின், காவல் ஆய்வாளர் முருகேசன் தலைமையிலான போலீசார், போக்குவரத்து ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, போலீசாரிடமும் போக்குவரத்து ஊழியர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 2 மணிநேரம் தொடர்ந்த போராட்டத்தின் இடையே இரவு 8:00 மணியளவில் அப்பகுதியில் திடீர் கனமழை பெய்தது.


இதனால் மறியலில் ஈடுபட்டவர்கள் அருகே இருந்த கடைகளில் ஒதுங்கி நின்றனர். நீண்ட நேரம் மழை பெய்ததால் இதனை பயன்படுத்தி போலீசார் போக்குவரத்தை சரி செய்தனர். இரண்டரை மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற போராட்டத்தால் இருசக்கர வாகனம் மற்றும் கார்களில் சென்ற பொதுமக்களும், பேருந்துக்காக காத்திருந்த பயணிகளும் பெரும் அவதிக்குள்ளாகினர். 


இதுகுறித்த புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். மேலும், நடத்துனரை தாக்கிய சம்பவத்தால் அரசு போக்குவரத்து ஊழியர்கள் பேருந்துகளை இயக்காமல் மீண்டும் விருத்தாச்சலம் பணிமனை 1, 2க்கு கொண்டு சென்று பேருந்துகளை நிறுத்தி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அதிகாரிகளும், காவல் துறையினரும் சமரசம் செய்ததை அடுத்து போராட்டத்தை கைவிட்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்கு இயந்திரத்தில் கோளாறு; இன்னும் தொடங்கப்படாத வாக்குப்பதிவு!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Voting machines malfunction in 10 polling stations in Cuddalore
கோப்புப்படம்

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடலூரில்  உள்ள 10  வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  அதனால் கடந்த ஒரு மணி நேரத்திக்கும் மேலாக அப்பகுதியில் வாக்குப் பதிவு  தொடங்கப்படாமல் இருக்கிறது. தேர்தல் அதிகாரிகள் மாற்று வாக்குப் பதிவு எந்திரம் மூலம் வாக்குப் பதிவு தொடங்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தாமதமாகும் வாக்குச்சாவடியில் மக்கள் தங்களது ஜனநாயக கடமையாற்ற நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். காலை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு தொடங்கப்படாமல் இருப்பதால் மாலை ஒரு மணி நேரம் கூடுதலாக ஒதுக்கப்படுமா என்பது குறித்து தேர்தல் தலைமை அதிகாரி தெரிவிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.