Skip to main content

சில்லறை கொடுப்பதில் பெண்ணிடம் தகராறு! ஆம்புலன்ஸுக்கு வழிவிடாமல் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்!  

Published on 16/05/2022 | Edited on 16/05/2022

 

 Transport workers struggle not to give way to ambulances!

 

கடலூர் மாவட்டம், சிதம்பரத்திலிருந்து விருத்தாச்சலம் நோக்கி நேற்று மாலை அரசு பேருந்து ஒன்று வந்தது. ஓட்டுநர் கதிர்வேல் பேருந்தை ஓட்டி வர, சு.கீணனுாரை சேர்ந்த மணிகண்ணன்(29) என்பவர் நடத்துநர் பணியில் இருந்தார். அப்போது அந்த பேருந்தில் பயணம் செய்த பெண் ஒருவர் 500 ரூபாய் கொடுத்து டிக்கெட் எடுத்துள்ளார். அதற்கு நடத்துநர் மணிவண்ணன், சில்லரை இல்லை என்றதுடன் இறங்கும் போது வாங்கிக்கொள்ளுமாறு கூறியுள்ளார். பேருந்து விருத்தாசலம் வந்த நிலையில் அந்தப் பெண் நடத்துநர் மணிகண்டனிடம் சில்லறையை கேட்டுள்ளார். அதற்கு மணிகண்டன் தாறுமாறாக பேசியதால் இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. மேலும் மணிகண்டன் அந்த பெண்ணை ஆபாசமாக அருவருக்கத்தக்க வகையில் பேசியதாக கூறப்படுகிறது. 

 

இதனால் மனமுடைந்த அந்த பெண், விருத்தாச்சலம் பாலக்கரை பேருந்து நிறுத்தத்தில் இறங்கிய பிறகு பேருந்தில் நடத்துநர் நடந்து கொண்ட முறை குறித்து தனது உறவினர்களிடம் கூறி, கதறி அழுதுள்ளார். இதன்காரணமாக மாலை 5:30 மணியளவில் பேருந்து நிலையத்திற்கு ஆட்டோவில் வந்த மர்மநபர்கள் சிலர் நடத்துநர் மணிகண்டனை ஆபாசமாக திட்டி, தாக்கி அவரை ஆட்டோவில் ஏற்றிச் சென்றனர். 

 

இதையறிந்த அரசு பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள்  விருத்தாசலம் – உளுந்தூர்பேட்டை சாலையின் குறுக்கே பேருந்துகளை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேசமயம் ஆட்டோவில் அழைத்துச் செல்லப்பட்ட நடத்துநர் மணிகண்டன் விருத்தாசலம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு, சிறிது நேரத்தில் நடத்துநர் மணிகண்டன் மீண்டும் பேருந்து நிலையத்திற்கு வந்தார். அப்போது போக்குவரத்து நெரிசலில் ஆம்புலன்ஸ் சிக்கி நின்றது. இதில் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சிலர் போக்குவரத்து ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.


அப்போது பொதுமக்களுக்கும், போக்குவரத்து ஊழியர்களுக்கும்  இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு தாக்கி கொண்டனர். இதில் ஆத்திரமடைந்த போக்குவரத்து ஊழியர்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதையறிந்து வந்த உதவி காவல் கண்காணிப்பாளர் அங்கித் ஜெயின், காவல் ஆய்வாளர் முருகேசன் தலைமையிலான போலீசார், போக்குவரத்து ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, போலீசாரிடமும் போக்குவரத்து ஊழியர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 2 மணிநேரம் தொடர்ந்த போராட்டத்தின் இடையே இரவு 8:00 மணியளவில் அப்பகுதியில் திடீர் கனமழை பெய்தது.


இதனால் மறியலில் ஈடுபட்டவர்கள் அருகே இருந்த கடைகளில் ஒதுங்கி நின்றனர். நீண்ட நேரம் மழை பெய்ததால் இதனை பயன்படுத்தி போலீசார் போக்குவரத்தை சரி செய்தனர். இரண்டரை மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற போராட்டத்தால் இருசக்கர வாகனம் மற்றும் கார்களில் சென்ற பொதுமக்களும், பேருந்துக்காக காத்திருந்த பயணிகளும் பெரும் அவதிக்குள்ளாகினர். 


இதுகுறித்த புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். மேலும், நடத்துனரை தாக்கிய சம்பவத்தால் அரசு போக்குவரத்து ஊழியர்கள் பேருந்துகளை இயக்காமல் மீண்டும் விருத்தாச்சலம் பணிமனை 1, 2க்கு கொண்டு சென்று பேருந்துகளை நிறுத்தி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அதிகாரிகளும், காவல் துறையினரும் சமரசம் செய்ததை அடுத்து போராட்டத்தை கைவிட்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய வேண்டும்” - எடப்பாடி பழனிசாமி

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Edappadi Palaniswami said Safe travel of passengers should be ensured

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து ஸ்ரீரங்கம் நோக்கி ஒரு அரசு டவுன் பேருந்து புறப்பட்டது. இதில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்தப் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு கலையரங்கம் தாண்டி வளைவில் திரும்பியது. அப்போது எதிர்பாராத விதமாக அந்தப் பேருந்தின் நடத்துநரின் இருக்கை கழன்று, அதில் அமர்ந்திருந்த நடத்துநர் பஸ்சுக்கு வெளியே தூக்கி வீசப்பட்டார்.

இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைப் பார்த்து பயணிகள் கூச்சலிட உடனே டிரைவர் பேருந்தை நிறுத்தினார். பின்னர் காயத்துடன் கிடந்த நடத்துநரை மீட்டு அருகாமையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அந்தப் பேருந்தில் வந்த பயணிகளை பின்னால் வந்த வேறொரு பேருந்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர். ஓடும்பேருந்தில் இருக்கை கழன்று நடத்துநர் வெளியே தூக்கி வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்த நிலையில், பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “நேற்று திருச்சி நகரப் பேருந்து சென்று கொண்டிருக்கையில் ஒரு வளைவில் நடத்துநர் இருக்கையுடன் தூக்கி வெளியே விழுந்த சம்பவம் தமிழக மக்களிடம், குறிப்பாக அரசுப் பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே, ஒரு சில மாதங்களுக்கு முன்பு சென்னை மாநகரப் பேருந்தில் பயணம் செய்த பெண் பயணி ஒருவர் கீழே விழுந்து விபத்துக்குள்ளான நிகழ்வின்போதே இனியாவது அரசு பேருந்துகளை உரிய முறையில் பராமரிப்பு செய்து, அரசு பேருந்துகளில் பயணம் செய்பவர்களுக்கு பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்த நான் இந்த தி.மு.க அரசை வலியுறுத்தியிருந்தேன். ஆனால், மீண்டும் மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் பொதுமக்களிடம் அரசு பேருந்து பற்றிய நம்பிக்கையை கேள்விக்குறியாக்கியுள்ளன.

எனவே, இனியாவது இந்தத் திமுக அரசு விழித்துக் கொண்டு, அரசு பேருந்துகளின் ஆயுட்காலத்தை முன்பிருந்தது போல் குறைத்து புதிய பேருந்துகள் வாங்கவும், இயங்கிக் கொண்டிருக்கும் பேருந்துகளை முறையாக பராமரிப்பு செய்து, பொதுமக்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யுமாறும் வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

“புதிய பேருந்துகளை அரசு வாங்க வேண்டும்” - அன்புமணி ராமதாஸ்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Anbumani Ramadoss says Government should buy new buses

புதிய அரசு பேருந்துகளையும், தமிழக அரசு வாங்க வேண்டும் என்றும், பழைய பேருந்துகளைப் பராமரிக்க, உதிரி பாகங்களை வாங்க அரசு போதிய நிதியை ஒதுக்க வேண்டும் என்றும் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்சி திருவரங்கத்தில் இருந்து கே.கே. நகருக்கு சென்று கொண்டிருந்த அரசு நகரப் பேருந்து, வளைவு ஒன்றில் திரும்பும் போது, நடத்துனர் அமர்ந்திருந்த கடைசியில் இருந்து மூன்றாவது இருக்கை கழன்று வெளியில் விழுந்துள்ளது. இருக்கையுடன் நடத்துனரும் வெளியில் தூக்கி வீசப் பட்டுள்ளார். நல்வாய்ப்பாக பேருந்துக்கு பின்னால் வேறு வாகனங்கள் வரவில்லை என்பதால், நடத்துனர் லேசான காயங்களுடன் உயிர்த் தப்பியுள்ளார். காயமடைந்த ஓட்டுநர் விரைவில் நலம் பெற எனது விருப்பங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை அமைந்தகரை பகுதியில் கடந்த பிப்ரவரி  6-ஆம்  தேதி  மாநகரப் பேருந்தின் தளம் உடைந்து  ஏற்பட்ட ஓட்டை வழியாக பெண் பயணி ஒருவர் சாலையில் விழுந்து காயமடைந்தார். அதனால் ஏற்பட்ட அதிர்ச்சி விலகும் முன்பாகவே திருச்சியில் பேருந்தின் இருக்கை கழன்று நடத்துநர் தூக்கி வீசப்பட்டுள்ளார். பேருந்தின் டயர் தனியாக கழன்று ஓடுவது, பேருந்தின் மேற்கூறை தனியாக கழன்று காற்றில் பறப்பது போன்ற நிகழ்வுகளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. தினமும் 2 கோடி மக்கள் பயணிக்கும் அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளை திமுக அரசு எவ்வளவு மோசமாக பராமரிக்கிறது என்பதற்கு இதை விட மோசமான எடுத்துக் காட்டு இருக்க முடியாது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 20,926 பேருந்துகளில் 1500 பேருந்துகள் 15 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன என்பதைத்  தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கரே ஒப்புக் கொண்டிருக்கிறார். 15 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகளை இயக்குவதே சட்ட விரோதம் ஆகும். இதைத் தவிர 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் 12 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில்தான் புதிய பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளன.

புதிய பேருந்துகள் வாங்கப்படாததால், காலாவதியான பேருந்துகள் அதிக எண்ணிக்கையில் இயக்கப்படுவதும், அவற்றைப் பராமரிப்பதற்கும், உதிரி பாகங்கள் வாங்குவதற்கும் கூட போதிய நிதி ஒதுக்கப்படாதது தான் இத்தகைய அவல நிலை ஏற்படுவதற்கு காரணம் ஆகும். இத்தகைய அவல நிலைக்கு தி.மு.க தலைமையிலான திராவிட மாடல் அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கான மகிழுந்துகள் அவர்கள் விரும்பும் நேரத்தில் மாற்றப்படுகிறது. முதலமைச்சரின் வாகன அணிவகுப்பில் வரும் மகிழுந்துகள் கருப்பு வண்ணத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக, ஏற்கெனவே வாங்கப்பட்டு சில மாதங்கள் மட்டுமே ஆன மகிழுந்துகள் ஓரங்கட்டப்பட்டு, கோடிக்கணக்கில் செலவு செய்து 6 புதிய மகிழுந்துகள் வாங்கப்படுகின்றன. ஆனால், பொதுமக்கள் பணம் கொடுத்து பயணம் செய்யும் பேருந்துகள் மட்டும் 15 ஆண்டுகளைக் கடந்து இயக்கப்படுகின்றன. இது என்ன கொடுமை?

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 6 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகள் அனைத்தும் உடனடியாக மாற்றப்பட்டு அவற்றுக்கு மாற்றாக புதிய பேருந்துகள் வாங்கி இயக்கப்பட வேண்டும். பழைய பேருந்துகளைப் பராமரிக்கவும், உதிரி பாகங்கள் வாங்கவும் அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.