Skip to main content

கட்டடப்பணியில் நடந்த சோகம்; இருவர் பலி

Published on 29/11/2022 | Edited on 29/11/2022

 

Tragedy in construction; Two people passed away

 

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகில் கோண்டூர் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர். இவர் அப்பகுதியில் புதிதாக இரண்டு கடைகள் கட்டி வருகிறார். கட்டுமான பணிக்கு தண்ணீர் அதிக அளவில் தேவைப்பட்டது. பொதுக்குழாயில் இருந்து வரும் தண்ணீரை சேமித்து வைப்பதற்காகக் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 10 அடி ஆழம், பத்தடி நீளம் உள்ள ஒரு தண்ணீர் தொட்டியை கட்டி அதில் தண்ணீரை தேக்கி வைத்திருந்தார். அந்த தண்ணீர் தொட்டியில் தேங்கி இருந்த தண்ணீர் அகற்றப்படாமல் இருந்துள்ளது.

 

தற்போது சுற்றுச்சுவர் பூசும் பணிக்காக சென்ட்ரிங் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த கட்டட மேஸ்திரி மணிகண்டன் அவரது உதவியாளர் ஐயப்பன் ஆகியோர் சென்ட்ரிங் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஐயப்பன் அந்த தண்ணீர் தொட்டிக்குள் இறங்கி உள்ளார். அதிலிருந்து விஷவாயு தாக்கி ஐய்யப்பன் அதன் உள்ளேயே மயங்கி விழுந்தார். இதைக்கண்டு திடுக்கிட்ட மேஸ்திரி மணிகண்டன் ஐயப்பனை காப்பாற்றும் நோக்கில் இவரும் அந்த தண்ணீர் தொட்டிக்குள் இறங்கி உள்ளனர். அவரும் விஷவாயு தாக்கி மயங்கி உள்ளேயே விழுந்துள்ளார்.

 

அவர்களது அருகில் இருந்த ஐயப்பனின் மைத்துனர் அறிவழகன் அவர்கள் இருவரையும் காப்பாற்றுவதற்காக தொட்டியில் இறங்க முயற்சித்தபோது அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. அவர் தொட்டிக்குள் இறங்காமல் வெளியில் வந்து மயங்கி விழுந்தார். அருகில் இருந்தவர்கள் அறிவழகனை மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற நிலையில் அறிவழகன் மட்டும் உயிர் பிழைத்துள்ளார். மேற்படி ஐயப்பன் மணிகண்டன் ஆகிய இருவரும் தண்ணீர் தொட்டி உள்ளேயே உயிரிழந்தனர்.

 

இது குறித்து கண்டமங்கலம் காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தண்ணீர் தொட்டியில் இறந்து கிடந்த ஐயப்பன், மணிகண்டன் ஆகிய இருவரது உடலையும் மீட்டனர். உடல்களை பிரேதப் பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தண்ணீர் தொட்டியில் இறங்கி விஷவாயு தாக்கி இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ புகழேந்தி காலமானார்!

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
Vikravandi DMK MLA Pugalenthi passed away!

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க சார்பில் எம்.எல்.ஏ வாக பொறுப்பு வகித்து வந்தவர் புகழேந்தி (71). இந்த நிலையில், விழுப்புரம் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் துரை. ரவிக்குமார், கடலூர் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் ஆகியோரை ஆதரித்து விழுப்புரம் விக்கிரவாண்டி வி.சாலையில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று (05-04-24) இரவு வந்திருந்தார். 

இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக நேற்று முன் தினம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ புகழேந்தி வந்திருந்தார். அப்போது, புகழேந்திக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால் அவர் உடனடியாக, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், இன்று (06-04-24) காலை, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தி.மு.க எம்.எல்.ஏ புகழேந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏவான புகழேந்தி, விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்தவர். புகழேந்தி மறைந்த செய்தியை அறிந்து மருத்துவமனை முன்பு திமுக தொண்டர்கள் பெரும் திரளாக கூடியுள்ளனர். மேலும், அமைச்சர் பொன்முடி மருத்துவமனைக்கு வந்து, மறைந்த புகழேந்திக்கு அஞ்சலி செலுத்தினார். 

Next Story

இளம் பெண்ணிற்குத் தாலி கட்டிவிட்டு இளைஞர் தற்கொலை; சிக்கிய உருக்கமான கடிதம்!

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
young man lost their life by tying a thali to a woman

விழுப்புரம் திருவெண்ணெய்நல்லூர் அருகே வசிப்பவர் ராதாகிருஷ்ணன். இவர் விழுப்புரத்தில் உள்ள ஒரு வங்கியில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வருகிறார். இதனிடையே 26 வயது இளம்பெண் ஒருவரும் ராதாகிருஷ்ணனும் 10 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அவர் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ராதாகிருஷ்ணனிடம் கூறி இருக்கிறார். அதற்கு ராதாகிருஷ்ணன் தனது தாயார் இறந்து சில மாதங்களே ஆகிறது. அதனால் ஒரு வருடம் கழித்து திருமணம் செய்து கொள்ளலாம் என கூறி இருக்கிறார்.

இந்த நிலையில்தான் அந்த பெண் நேற்று முன் தினம் விழுப்புரம் மகளிர் காவல்நிலையத்தில் ராதாகிருஷ்ணனை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு புகார் கொடுத்துள்ளார்.அதன் பெயரில் போலீசார் ராதாகிருஷ்ணன் மற்றும் இளம்பெண் இருவர் வீட்டாரிடம் பேசி  சமாதானம் செய்துள்ளனர். அதனை தொடர்ந்து மாலை போலீஸ் நிலையம் அருகே உள்ள கோவிலில் ராதாகிருஷ்ணனுக்கும் அந்த பெண்ணுக்கும் திருமணம் நடந்துள்ளது. இதையடுத்து, இருவரும் பெண் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இரவு சிறிது நேரம் தங்கியிருந்த ராதாகிருஷ்ணன் பெண்ணிடம்  தனது வீட்டிற்கு சென்று விட்டு காலையில் வந்து உன்னை கூட்டிச்செல்கிறேன் என்று தெரிவித்துவிட்டு சென்றிருக்கிறார். இந்த நிலையில்தான் ராதாகிருஷ்ணன் காலையில் தனது விட்டில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ராதாகிருஷ்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அதன்  பிறகு விசாரணை செய்த போலீசாரிடம் ராதாகிருஷ்ணன் எழுதிய கடிதம் ஒன்று கிடைத்துள்ளது. அந்த கடிதத்தில், “என்னை மன்னித்து விடுங்கள் என்னை வற்புறுத்தி எனக்கு விருப்பம் இல்லாமல் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று இந்த திருமணத்தை செய்து வைத்துள்ளார்கள். இது எனக்கு பிடிக்கவில்லை. என்னையும் என் குடும்பத்தாரையும் கொன்று விடுவேன் என மிரட்டினார்கள். எனது மரணத்திற்கு அவர்கள் தான் காரணம் எனக்கு விருப்பம் இல்லாத வாழ்கையை  எப்படி வாழ முடியும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து தனது மகனின்  மரணத்திற்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸில் புகார் அளிக்க, 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.