Skip to main content

மத்திய அரசின் பல்வேறு சட்டங்களை எதிர்த்து தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்! 

Published on 27/11/2021 | Edited on 27/11/2021

 

Trade unions struggle  against various federal laws!

 

மத்திய அரசின் பல்வேறு சட்டங்களை எதிர்த்தும், அவற்றை ரத்து செய்யக் கோரியும் அனைத்து தொழிற் சங்கங்கள், மற்றும் விவசாய சங்கங்கள் சார்பில் 26ஆம் தேதி நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழ்நாட்டில் ஆளும் கட்சியான திமுக, காங்கிரஸ், கம்யூன்ஸ்ட் கட்சிகள் மற்றும் கூட்டணி கட்சிகள் என மொத்தம் 10 தொழிற்சங்க அமைப்புகள் இணைந்து இப்போராட்டத்தை நடத்தின.

 

அந்த வகையில், ஈரோட்டில் சூரம்பட்டி நால்ரோடு பகுதியில் ஐ.என்.டி.யூ.சி. மாவட்டத் தலைவர் தங்கராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டம் குறித்து நம்மிடம் பேசிய ஏ.ஐ.டி.யு.சி தொழிற்சங்க மாநிலச் செயலாளர் சின்னசாமி, “பல ஆண்டுகளாக இந்திய தொழிலாளர்கள், பல்வேறு தொழிற்சங்கங்கள் போராடி பெற்ற சட்டங்களைப் பாஜக மோடி அரசு வந்தவுடன் 44 தொழிலாளர் சட்டங்களை வெறும் நான்கு தொகுப்புகளாக மாற்றிவிட்டனர். அதை ரத்து செய்ய வேண்டும். மூன்று வேளாண் சட்டங்களோடு மின்சார திருத்தச் சட்டத்தையும் திரும்பப் பெற வேண்டும். தேசிய பணமாக்குதல் திட்டம் உள்ளிட்ட எந்தப் பெயராலும் பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார்மயமாக்க கூடாது.

 

வருமானவரி கட்டும் அளவுக்கு வருவாய் இல்லாத அனைத்து குடும்பங்களுக்கும் கரோனா கால நிவாரனமாக மாதம் ஒன்றுக்கு ரூ. 7,500 வழங்க வேண்டும். தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்துக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகப்படுத்துவதோடு, அதை நகரப் பகுதிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும். கட்டுமான, உடலுழைப்பு தொழிலாளர்கள் அனைவருக்கும் விரிவான சமூகப் பாதுகாப்பு திட்டங்களை அமலாக்க வேண்டும். ஏற்கனவே இயங்குகிற மாநில நலவாரியங்களை மத்திய அரசு சீர்குலைக்க கூடாது. பெட்ரோலியப் பொருட்கள் மீதான கலால் வரியைக் குறைத்து, அனைத்து பொருட்களின் விலையேற்றத்தையும் கட்டுப்படுத்த வேண்டும்.

 

விவசாயம், கல்வி, மருத்துவம், மற்றும் அத்தியாவசிய மக்கள் பயன்பாட்டுத் துறைகளில் பொது முதலீட்டை அதிகப்படுத்தி பணக்காரர்கள், செல்வவளம் மிக்கவர்களிடம் இருந்து சொத்து வரி வசூலித்து, இதற்கான நிதியைத் திரட்டி, தேசிய பொருளாதாரத்திற்குப் புத்துயிரூட்டி புனர்நிர்மாணம் செய்திடல் வேண்டும். கரோனா பெருந்தொற்று காலத்தில் அனைத்து முன்களப் பணியாளர்களுக்கும் உரிய பாதுகாப்பும், காப்பீடு வசதிகளும் வழங்கிட வேண்டும். அங்கன்வாடி, ஆஷா, சத்துணவு மற்றும் இதர திட்ட ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தையும், சமூகப் பாதுகாப்பையும் மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும். என 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்திதான் தேசிய அளவில் தொழிற்சங்கங்கள், விவசாய அமைப்புகள் ஒன்றிணைந்து பாஜக அரசுக்கு எதிராக தொடர் ஆர்ப்பாட்டம் நடத்திவருகிறோம்” என்றார்.

 

ஆர்ப்பாட்டம், தர்ணா, முற்றுகை என தொடர்ந்து நாடாளுமன்ற கூட்டத் தொடரின்போது மத்திய அரசுக்கு எதிராக இரண்டு நாட்கள் இந்திய அளவில் பொது வேலை நிறுத்தம் நடத்தப் போவதாகவும் அறிவித்துள்ளனர்.

 


இந்தப் ஆர்ப்பாட்டத்தில், ஏ.ஐ.டி.யு.சி., சி.ஐ.டி.யு., எச்.எம்.எஸ்., எல்.பி.எப்., எம்.எல்.எப்., எல்.டி.யூ.சி., டி.டி.எஸ்.எப்., தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தற்சார்பு விவசாயிகள் சங்கம், திமுக விவசாய அணி ஆகிய அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்துகொண்டு கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விடுதி - திருமண மண்டபங்களில் போலீசார் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Hostel - Police intensive search in marriage halls

பாராளுமன்றத் தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இதையொட்டி கடந்த 20 நாட்களாக நடைபெற்று வந்த பிரச்சாரம் நேற்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. அதன் பிறகு தொகுதிக்கு சம்பந்தமில்லாத வெளி நபர்கள் உடனடியாக தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இதனையடுத்து நேற்று மாலை 6 மணி முடிந்தவுடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் உத்தரவின் பேரில் ஈரோடு மாவட்டம் முழுவதும் உள்ள நூற்றுக்கணக்கான விடுதிகள் மற்றும் திருமண மண்டபங்களில் அந்தந்த சர்க்கிள் உள்ளிட்ட டி.எஸ்.பி.க்கள் தலைமையில் போலீசார் விடுதி மட்டும் திருமண மண்டபங்களில் விடிய விடிய தீவிர சோதனை நடத்தினர். விடுதியில் தங்கி இருந்தவர்கள் விபரங்களைச் சேகரித்தனர்.

இதேபோல் திருமண மண்டபங்களில் வெளிநபர்கள் இருக்கிறார்களா? என்பது குறித்தும் ஆய்வு செய்தனர். சந்தேக நபர்களிடம் விசாரணை நடத்தினர். அனுமதி இன்றி கூட்டம் கூட்டக்கூடாது. பிரச்சாரத்தில் ஈடுபடக்கூடாது எனப் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் சமூக வலைத்தளங்களிலும் பிரச்சாரம் மேற்கொள்ளக் கூடாது எனவும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதை மீறி செய்பவர்களுக்கு இரண்டு ஆண்டு வரை தண்டனை விதிக்கப்படும் அல்லது அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

Next Story

இறந்தும் பிறரை வாழுவைக்கும் இளைஞர்! ஈரோட்டில் நடந்த இரு நெகிழ்ச்சி சம்பவம்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Two people underwent kidney transplant today in Erode
முகமது அனிஷ்

ஈரோடு அபிராமி கிட்னி கேர் மருத்துவமனையில் ஒரே நாளில் இரண்டு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த லோகராஜன் (21) என்ற வாலிபருக்கு, கடந்த 12ம் தேதி விபத்து ஏற்பட்டது.  அதில் படுகாயமடைந்த அவர் பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு, அங்கு கடந்த 15ஆம் தேதி மூளைச்சாவு அடைந்தார். இதையடுத்து, லோகராஜனின் பெற்றோர், லோகராஜனின் உடல் உறுப்புகள் தானம் செய்ய விருப்பம் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து, லோகராஜனின் ஒரு சிறுநீரகம் தானம் பெறப்பட்டு, ஈரோடு அபிராமி கிட்னி கேர் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் 15 நிமிடத்தில் கொண்டுவரப்பட்டு, கடந்த 5 வருடங்களாக சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டு டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வந்த முகமது அனிஷ்(29) என்பவருக்கு  சிறுநீரகம் பொருத்தப்பட்டது.  இதேபோல், தமிழ்நாடு காவல் துறையில் பணியாற்றும் தங்கராஜ்(58) என்பவர், கடந்த 4 ஆண்டுகளாக சிறுநீராக  செயலிழப்பு ஏற்பட்டு  ஈரோடு அபிராமி கிட்னி கேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.  தங்கராஜியின் மனைவி சரோஜா (52), சிறுநீரகத்தை அவரது கணவருக்கு தானம் செய்ய விருப்பம் தெரிவித்தார். இதன்பேரில், சரோஜாவிடம் இருந்து சிறுநீரகம் தானம் பெறப்பட்டு, தங்கராஜிக்கு சிறுநீரகம் லேப்ரோஸ்கோப்பி மூலம் சிறிய துளை போடப்பட்டு, சிறுநீரகம் அறுவை சிகிச்சை செய்து மாற்றப்பட்டது.

இந்தச் சிகிச்சைகள், தமிழ்நாடு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை அமைப்பின் ஆணைப்படி, ஒரே இரவில் இருவருக்கும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை சுமார் 12 மணி நேரம் அபிராமி கிட்னி கேர் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநரும், சிறுநீரக சிறப்பு மருத்துவர் டி.சரவணன் தலைமையில் அறுவை சிகிச்சை நடைபெற்றது. அறுவை சிகிச்சை நடைபெற்ற பின்பு நோயாளிகள் இருவரும் நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளனர் என டாக்டர் சரவணன் தெரிவித்தார்.