மீதமுள்ள 14 தேர்வுகளின் முடிவுகள் ஜூன் 8ஆம் தேதி வெளியிடப்படும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அறிவித்துள்ளது.
இது தொடர்பாக டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் 2020ஆம் ஆண்டு டிசம்பர் திங்களில் நடத்தப்பட்ட துறைத் தேர்வுகளில் 129 தேர்வுகளின் முடிவுகளும், எந்தெந்த தேர்வுகளின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன என்ற பட்டியலும் 08/05/2021 அன்று தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டன. அப்பட்டியலில் 14 தேர்வுகளைத் தவிர மற்ற அனைத்துத் துறைத் தேர்வுகளும் இடம்பெற்றுள்ளன.
கரோனா பெருந்தொற்று காரணத்தால் தமிழக அரசால் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 14 தேர்வுகளின் முடிவுகள் 08/06/2021 அன்று வெளியிடப்படும்.
மேலும், இத்தேர்வுகள் எழுத விழையும் தேர்வர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, மே 2021 துறைத் தேர்வுகளுக்கு இணைய வழியில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 15/06/2021 வரை நீட்டிக்கப்படுகிறது." இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.