Skip to main content

மு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழக அமைச்சரவை பதவியேற்பு! (படங்கள்)

Published on 07/05/2021 | Edited on 07/05/2021

 

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று (07/05/2021) காலை 09.00 மணிக்கு நடைபெற்ற பதவியேற்பு விழாவில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தமிழகத்தின் முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்டார். அவருக்குத் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவிப் பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்துவைத்தார். மேலும், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.

 

முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை தொடர்ந்து, அவரது தலைமையிலான அமைச்சரவையும் பதவியேற்றது. அதன்படி, புதிதாக உருவாக்கப்பட்ட நீர்வளத்துறை அமைச்சராக துரைமுருகன் பதவியேற்றுக்கொண்டார். அதேபோல், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக கே.என். நேரு; மருத்துவம், மக்கள் நல்வாழ்த்துறை அமைச்சராக மா. சுப்பிரமணியன்; வணிக வரி, பதிவுத்துறை அமைச்சராக பி.மூர்த்தி; பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக எஸ்.எஸ்.சிவசங்கர்; இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சராக பி.கே.சேகர் பாபு; நிதித்துறை மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சராக பி.டி.ஆர்.தியாகராஜன் ஆகியோர் பதவியேற்றுக்கொண்டனர்.

 

பால் வளத்துறை அமைச்சராக சா.மு.நாசரும், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக கே.எஸ்.மஸ்தானும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக அன்பில் மகேஷ் பொய்யாமொழியும், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை அமைச்சராக சிவ.வீ.மெய்யநாதனும், தொழிலாளர் நலத்துறை மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சராக சி.வி.கணேசனும், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக மனோ தங்கராஜும், சுற்றுலாத்துறை மற்றும் சுற்றுலா வளர்ச்சிக் கழகம் அமைச்சராக மதிவேந்தனும், ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சராக கயல்விழி செல்வராஜும் பதவியேற்றுக்கொண்டனர்.

 

கூட்டுறவுத்துறை அமைச்சராக ஐ. பெரியசாமியும், உயர்கல்வித்துறை அமைச்சராக பொன்முடியும், பொதுப்பணித்துறை அமைச்சராக எ.வ. வேலுவும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சராக எம்.ஆர்.கே. பன்னீர்செல்வமும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சராக கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனும், தொழிற்துறை, தமிழ்ப்பண்பாட்டுத் துறை அமைச்சராக தங்கம் தென்னரசுவும், சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சராக எஸ். ரகுபதி, வீட்டு வசதித்துறை அமைச்சராக முத்துசாமியும், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சராக பெரியகருப்பனும், ஊரக தொழில்துறை தா.மோ. அன்பரசனும், செய்தித்துறை அமைச்சராக சாமிநாதனும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துரை அமைச்சராக கீதா ஜீவனும், மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சராக அனிதா ராதாகிருஷ்ணனும், போக்குவரத்துத்துறை அமைச்சராக ராஜ கண்ணப்பனும், வனத்துறை அமைச்சராக கா. ராமச்சந்திரனும், உணவுத்துறை அமைச்சராக சக்ரபாணியும், மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சராக செந்தில் பாலாஜியும், கைத்தறித்துறை அமைச்சராக ஆர். காந்தியும் பதவியேற்றுக்கொண்டனர்.

 

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் முதலமைச்சருடன் சேர்த்து மொத்தம் 34 அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர். 

 

பதவியேற்பு விழாவில் வைகோ, திருமாவளவன், ப. சிதம்பரம், முத்தரசன், கி. வீரமணி, வேல்முருகன், ஈஸ்வரன், காதர் மொய்தீன், கே.எஸ். அழகிரி, திருநாவுக்கரசர், சரத்குமார், கமல்ஹாசன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். அதேபோல், அதிமுக சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், நவநீதகிருஷ்ணன், தனபால் மற்றும் பாஜக சார்பில் இல. கணேசன் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர். மேலும், மு.க. அழகிரி மகன் தயாநிதி அழகிரி, ஐ- பேக்கின் பிரசாந்த் கிஷோர் மற்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் குடும்ப உறுப்பினர்கள் உதயநிதி ஸ்டாலின், அவரது மனைவி கிருத்திகா ஸ்டாலின், சபரீசன் மற்றும் செந்தாமரை, துர்கா ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

 

அமைச்சர்களாக பதவியேற்ற அனைவரும் ஆளுநருடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர். 

 

இதனிடையே, மு.க. ஸ்டாலின் முதலமைச்சராகப் பதவியேற்றதைக் கண்டு அவரது மனைவி துர்கா ஸ்டாலின் ஆனந்த கண்ணீர் சிந்தினார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

Next Story

குடியைக் கெடுக்கும் குடிக்கு முடிவு கட்டப்படுவது எப்போது? - ராமதாஸ்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Ramdoss has questioned when liquor will be abolished in Tamil Nadu

குடிப்பழக்கம் உள்ள பெற்றோரின் பிள்ளைகளுக்கு சுயமரியாதை குறைவு என ஆய்வில் வெளியாகியுள்ளது; குடியைக் கெடுக்கும் குடிக்கு முடிவு கட்டப்படுவது எப்போது? என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான  பெற்றோர்களின் பிள்ளைகள் சுயமரியாதைக் குறைவு, தாழ்வு மனப்பான்மை உள்ளிட்ட மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்படுகின்றனர் என்று சென்னை மருத்துவக் கல்லூரியின் சமூக மருத்துவ நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. குடிக்கும் பெற்றோரின் பிள்ளைகள் இளம் வயதிலேயே மதுப்பழக்கம் மற்றும் புகையிலைப் பழக்கத்திற்கு அடிமையாகுதல், தீய செயல்களில் அடிக்கடி ஈடுபடுதல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கும் ஆளாவதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.  இந்த ஆய்வு முடிவுகள் சிறிதும் அதிர்ச்சியோ, ஆச்சரியமோ அளிக்கவில்லை. மாறாக, மதுப்பழக்கத்தின் தீமைகள் குறித்து பல பத்தாண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி கூறி வரும் குற்றச்சாட்டுகளை உறுதி செய்திருக்கிறது.

அனைத்து சமூகக் கேடுகளுக்கும் ஆணிவேர் மதுப்பழக்கம் தான்.  தினமும் குடித்து விட்டு வந்து வீட்டில் உள்ளவர்களை கொடுமைப் படுத்தும் தந்தை உள்ள வீட்டில், அவர்களின் பிள்ளைகளால் நிம்மதியாக படிக்க முடியாது; சமூகத்தில் தலை நிமிர்ந்து நடக்க முடியாது என்பது நடைமுறையில் நாம் கண்டு வரும் உண்மை ஆகும். தந்தை குடிப்பதைப் பார்க்கும் பிள்ளைகளும் மது எளிதாக கிடைக்கும் போது அந்தப் பழக்கத்திற்கு அடிமையாவது வழக்கம் தான். 

இந்த உண்மைகளைத் தான்  சென்னை மருத்துவக் கல்லூரியின் ஆய்வு உறுதி செய்திருக்கிறது. அதனால் தான் குடி குடியைக் கெடுக்கும், குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும் என்ற எச்சரிக்கை வாசகங்கள் மதுப்புட்டிகள் மீது எழுதப்பட்டன. மதுவே முற்றிலுமாக ஒழிக்கப்பட  வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், தமிழ்நாட்டை மாறி மாறி ஆட்சி செய்து வரும் திமுகவும், அதிமுகவும் மதுவின் தீமைகளை கருத்தில் கொள்ளாமல் சட்டப்படியாக அரசுக்கு கிடைக்கும் வருமானத்தையும், சட்டவிரோதமாக தங்களுக்கு கிடைக்கும் லாபத்தையும் மட்டுமே கருத்தில் கொண்டு  தமிழகத்தின் அனைத்து வீதிகளிலும் மதுவை வெள்ளம் போல ஓட விடுகின்றன.

அதுமட்டுமின்றி, மதுப்புட்டிகளில் மதுவின் தீமைகளை குறிக்கும் வகையிலான, 'குடி, குடியை கெடுக்கும்; குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும்; மது நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்குக் கேடு' என்ற, விழிப்புணர்வு வாசகங்களை நீக்கி விட்டு, 'மது அருந்துதல் உடல் நலத்திற்கு கேடு; பாதுகாப்பாக இருப்பீர். மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டாதீர்' என்ற மென்மையான வாசகங்களை அச்சிட்டது தான் திமுக, அதிமுக அரசின் சாதனைகள் ஆகும்.

எந்த வகையில் பார்த்தாலும் மது மிகப்பெரிய சமூகக் கேடு என்பதில் மாற்றமில்லை.  மது இல்லாத தமிழகத்தில் குடும்பங்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள்; குழந்தைகள் சுயமரியாதையுடன் நல்லவர்களாக வளர்வார்கள். எனவே, குடியைக் கெடுக்கும் குடிப்பழக்கத்திற்கு முடிவு கட்டும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள மதுக்கடைகளை மூடிவிட்டு முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.