Skip to main content

நெருங்கும் தேர்தல்.... சேலத்தில் கட்சி கொடி தயாரிப்பு தொழில் ஜரூர்!

Published on 19/02/2021 | Edited on 19/02/2021

 

tn assembly election political parties flags in salem district


தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி, சேலத்தில் அரசியல் கட்சிகளின் கொடிகள் தயாரிக்கும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.

 

தமிழக சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பு பிப். மாத இறுதியில் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் கடந்த சில நாள்களுக்கு முன்பு தமிழகத்தில் நேரில் ஆய்வு செய்துவிட்டுச் சென்றார். இந்நிலையில், முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்தமுறை தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரு திராவிடக் கட்சிகளும் ஜனவரி மாதமே தேர்தல் பரப்புரையைத் தொடங்கிவிட்டன.

 

காங்கிரஸ், மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் ஆகிய கட்சிகளும் தனித்தனியாக பரப்புரைகளில் ஈடுபட்டு வருகின்றன. தி.மு.க., அ.தி.மு.க. கூட்டணிகள் இன்னும் இறுதி செய்யப்படாத நிலையில், தனி ஆவர்த்தனமாக இரு முக்கிய கட்சிகளின் தலைவர்களும் பரப்புரையில் ஈடுபட்டு வருவதும் தமிழகத் தேர்தல் களம் இதுவரை காணாதது என்கிறார்கள் விமர்சகர்கள்.

 

இது ஒருபுறம் இருக்க, தேர்தல் என்றாலே திருவிழா போல அதைச் சார்ந்த சில தொழில்களுக்கும் பெரும் வரவேற்பு இருக்கும். அந்த வரிசையில், கட்சிக்கொடிகள் தயாரிக்கும் தொழில்கள் தேர்தல் காலத்தில் எப்போதும் பரபரப்பாக இருக்கும். சேலத்தில் குகை பகுதியில் பல்வேறு அரசியல் கட்சிகளின் கொடிகளையும் தயாரிக்கும் தொழிலில் காலங்காலமாக சிலர் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாகக் கட்சிக் கொடி தயாரிப்பாளர்கள் சிலர் நம்மிடம் பேசினர்.

 

''தமிழகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கட்சிக் கொடி தயாரிப்பாளர்கள் இருக்கிறார்கள். கொடி தயாரிப்புக்குத் தேவையான முக்கிய மூலப்பொருளான துணிகள் திருப்பூரில் உற்பத்தி செய்யப்படுகிறது. அங்கிருந்து நேரடி கொள்முதல் செய்து, கொடியாகத் தைத்துக் கொடுக்கிறோம். தேர்தல் காலத்தில் மட்டுமின்றி குடியரசு தினம், சுதந்திரதினம் போன்ற தேசிய பண்டிகைகளின்போதும் தேசியக் கொடிகளை அதிகளவில் தயாரித்து வருகிறோம். 

 

பொதுவாக மக்களவை தேர்தல், சட்டமன்றத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் காலங்களில் கட்சிக் கொடிகளுக்கான தேவை அதிகமாக இருக்கும். எங்களுக்கும் ஆர்டர்கள் குவியும். குறிப்பாக அதிமுக, திமுக கொடிகள்தான் அதிகளவில் தயாரித்துக் கொடுத்துவருகிறோம். 5 அடிக்கு 2 அடி, 3 அடிக்கு 2 அடி, முக்கால் அடிக்கு 15 செமீ முதல் 20 செமீ வரையிலான நீளமுள்ள கட்சிக் கொடிகளைத் தயாரிக்கிறோம். ஒரு கொடியை அதன் அளவைப் பொறுத்து 10 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை விற்பனை செய்கிறோம். நாங்கள் தயாரிக்கும் கொடிகள் உள்ளூர் மட்டுமின்றி நெல்லை, காஞ்சிபுரம், கோவை, திண்டுக்கல், மதுரை, கரூர், திருச்சி, சென்னை உள்ளிட்ட இடங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. 

 

தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படாமல் இருக்கலாம். ஆனால், எங்களுக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே கொடிகள் கேட்டு ஆர்டர்கள் வந்தவண்ணம் உள்ளன. மார்ச், ஏப்ரல் மாதங்களில் இன்னும் அதிகளவில் ஆர்டர்கள் வரும் என எதிர்பார்க்கிறோம். அதற்கேற்ப தொழிலாளர்களும் ஆர்வமாகவும், போதிய அளவிலும் உள்ளனர்'' என்றனர்.


 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“2026ல் மக்களுக்கான பிரதிநிகள் நிறைய பேர் இருப்பாங்க” - விஷால் கணிப்பு

Published on 10/02/2024 | Edited on 10/02/2024
vishal about 2024 and 2026 election, his political party, and vijay tvk entry

விஷால் புது அரசியல் கட்சி தொடங்குவதாக சமீபத்தில் தகவல் வெளியானது. ஆனால் அதை திட்டவட்டமாக மறுத்து, “வரும் காலகட்டத்தில் இயற்கை வேறு ஏதேனும் முடிவு எடுக்க வைத்தால் அப்போது மக்களுக்காக மக்களின் ஒருவனாக குரல் கொடுக்க தயங்க மாட்டேன்” என அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் சென்னையில் உள்ள ஒரு பள்ளி விழாவில் கலந்து கொண்ட விஷால், பின்பு செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவரது இயக்கம் குறித்த கேள்விக்கு, “நற்பணி இயக்கம், குறிப்பிட்ட நாட்கள், பண்டிகை நாட்கள் மட்டும் இல்லாமல் எல்லா நாட்களிலும் செயல்படும். எங்கே பிரச்சனைகள் வந்தாலும் அந்தந்த மாவட்ட நிர்வாகிகள் தலைமைக்கு சொல்லிவிடுவார்கள். உடனே நாங்கள் சரி செய்வோம். படப்பிடிப்பிற்கு போகும் போது, அங்குள்ள மக்களுக்கு தேவையான உதவிகளை செய்வோம். அங்கு சின்ன சின்ன அடிப்படை வசதி கூட இல்லாமல் இருப்பது தர்மசங்கடமாக இருக்கிறது. அதனால் உதவிகளைப் பூர்த்தி செய்தால் மனசு சந்தோஷமாக இருக்கும். அந்த வகையில் நற்பணி இயக்கம் சார்பாக தொடர்ந்து பண்ணிக்கிட்டே இருப்போம்” என்றார்.

விஜய்யின் அரசியல் வருகை குறித்த கேள்விக்கு, “உண்மையிலேயே ஒரு ரசிகனா, தமிழ்நாட்டில் இருக்கும் குடிமகனா அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இப்போதே என்னுடைய கட்சி பெயர் என்ன, அவருடன் கூட்டணியா, என்பதெல்லாம் தேவையில்லை. என்னை பொறுத்தவரையில் மக்கள் சேவை செய்ய இத்தனை கட்சி தேவையில்லை. எல்லாருக்குமே ஒரே குறிக்கோள் தான். மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வது தான். அதற்கு இப்போது இருக்கிற கட்சிகளே அதிகம். அதைத் தாண்டி ஒருவர் நல்லது செய்ய வேண்டும் என நினைக்கிறார் என்றால், அவருடைய நம்பிக்கையில் தான் வருகிறார்” என்றார்.

மேலும், “அரசியல் என்பது பொதுப்பணி மற்றும் சமூக சேவை. அது ஒரு துறை கிடையாது. பொழுதுபோக்கிற்காக வந்துட்டு போகிற இடமும் கிடையாது. எல்லாரும் ஏதோ ஒரு விதத்தில் உதவி செய்திருப்போம். அந்த வகையில் அனைவரும் அரசியல்வாதி தான். இதில் மறைப்பதற்கு எதுவும் இல்லை. நான் அரசியலுக்கு வரமாட்டேன் என சொல்வது, அல்லது வரப்போறன்னு சொல்லிட்டு வராமல் இருப்பது...அப்படி எதுவும் இல்லை. அந்தந்த நேரத்தில், அதற்கான காலகட்டத்தில் முடிவெடுக்கப்படும். நடிகர் சங்கத்தில் நான் பொதுச்செயலாளராக ஆவேன் என எனக்கே தெரியாது. ஒரு நடிகனாக 2004ல் இருந்து செயல்பட்டு வருகிறேன். எனக்கு கார்டு கொடுத்த ராதாரவி அண்ணனை எதிர்த்து நிற்பேன் என கனவில் கூட நினைத்து பார்த்ததில்லை. அதே போல் தான் தயாரிப்பாளர்கள் சங்கத்திலும். அதனால் எல்லாமே அந்த காலம் எடுக்கக் கூடிய முடிவு தான்” என்றார்.

நாடாளுமன்ற தேர்தல் குறித்த கேள்விக்கு, “கண்டிப்பாக ஒரு பெரிய வெற்றியாக இருக்கும். நான் யாருக்கு ஓட்டு போட்டேன் என்பதை நேரம் வந்தால் சொல்லுவேன். இதற்கு முன்னாடி ஒரு முறை கேப்டன் அண்ணனுக்கு தான் ஓட்டு போட்டேன் என சொல்லியிருக்கிறேன். அதில் ஒளிவு மறைவு ஒன்னும் கிடையாது. சொன்னாலும் ஜெயிலில் பிடித்து போடமாட்டார்கள்” என்றார். 2026 தேர்தல் குறித்த கேள்விக்கு, “என்னுடைய கணிப்பின்படி 2026ல் மக்களுக்கான பிரதிநிகள் நிறைய பேர் இருப்பாங்க” என்றார்

Next Story

“காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சொந்த ஊரில் 50 வாக்குகள் கூட வாங்காதது எப்படி?” - கமல்நாத் கேள்வி

Published on 06/12/2023 | Edited on 06/12/2023

 

KamalNath Questioned on How come Congress MLAs don't even get 50 votes in their hometown?

 

தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் பல கட்டங்களாக தேர்தல்கள் நடந்து முடிந்தது. தொடர்ந்து தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியாகி இருந்தது. இதனையடுத்து, மிசோரத்தை தவிர்த்து மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, சத்தீஸ்கர் ஆகிய நான்கு மாநிலங்களில் சட்டசபைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை கடந்த 3ஆம் தேதி நடைபெற்றது.

 

அதில், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பா.ஜ.க தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. மேலும், தெலங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று முதன் முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளது. அதே போல், மிசோரமில் ஸோரம் மக்கள் இயக்கம் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. அதில், 230 தொகுதிகளை கொண்ட மத்திய பிரதேசத்தில் 163 தொகுதிகளில் பா.ஜ.க.வும், 66 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் அம்மாநிலத்தில் இரு கட்சிகளுக்கும் இடையே நெருக்கமான போட்டி இருக்கும் என கணித்த நிலையில், காங்கிரஸ் பெரும் பின்னடைவை சந்தித்தது அக்கட்சியினருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

இதனிடையே, இந்த தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரத்தில் சந்தேகம் இருப்பதாகவும், சிப் பொருத்தப்பட்ட இயந்திரத்தை ஹேக் செய்து தேர்தல் முடிவை மாற்ற முடியும் என்றும் மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் திக்விஜய் சிங் குற்றம் சாட்டியிருந்தார். அதே போல், மத்திய பிரதேச காங்கிரஸ் தலைவர் கமல்நாத், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சொந்த ஊரில் 50 வாக்குகள் கூட வாங்காதது எப்படி? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

 

மத்திய பிரதேசத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய கமல்நாத், “காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அவர்களது சொந்த கிராமத்தில் 50 வாக்குகள் கூட பெறவில்லை என்று சொல்கிறார்கள். அது எப்படி சாத்தியம்?. இதுபற்றி ஆலோசனை நடத்தாமல் ஒரு முடிவுக்கு வருவது சரியாக இருக்காது. முதலில் இது பற்றி அனைவரிடமும் பேசுவேன். மக்களின் மனநிலை காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக தான் இருந்தது. உங்களுக்கு கூட தெரியும் என்ன மனநிலை என்று. ஏன் என்னிடம் கேட்கிறீர்கள்?. மக்களிடம் கேளுங்கள்” என்று கூறினார்.