Skip to main content

தி.மு.க. உட்கட்சி மோதல்; நிர்வாகியை அடித்த கவுன்சிலர்!  

Published on 26/09/2023 | Edited on 26/09/2023

 

Tiruvannamalai district councillor beat the DMK executive

 

திருவண்ணாமலை மாவட்டம், புதுப்பாளையம் பேரூராட்சி திமுக செயலாளராக இருப்பவர் சீனுவாசன். துணைச் செயலாளர்களாக கவுன்சிலர் ரஞ்ஜித்குமார், பெண் பிரதிநிதித்துவத்தில் தவமணி ஆகியோர் உள்ளனர். கடந்த செப்டம்பர் 21ஆம் தேதி மாலை நகர துணை செயலாளர் தவமணியின் கணவரும், நகர விவசாய அணி அமைப்பாளருமான வெங்கட்ராமன் செங்கம் அரசு மருத்துவமனையில் அட்மிட்டாகியுள்ளார்.

 

இதுபற்றி நம்மிடம் பேசிய வெங்கட்ராமன், “30 வருடங்களாக கட்சியில் இருக்கிறேன். கிளை செயலாளராக பல ஆண்டுகள் கட்சிப்பணி செய்தே, இந்த அளவுக்கு வந்துள்ளேன். இப்போ இங்கே கோஷ்டி பூசலில் கட்சியிருக்கு. தொகுதி எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்கள் என்று சொல்லும் சிலர், நான் நகர செயலாளர் ஆதரவாளர் என்று என்னை மிரட்டறாங்க. ஒரு மாதத்துக்கு முன்பு என்னை பேரூராட்சி கவுன்சிலர் ரஞ்ஜித்குமார் மிரட்டினார். அப்போதே காவல்நிலையத்தில் புகார் தந்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

 

கடந்த 21ஆம் தேதி டீ கடை அருகே என் நிலத்தில் வேலை செய்தவங்களுக்கு கூலி பணம் தந்துக்கிட்டு இருந்தேன். அங்கே வந்து, ‘புகார் தந்தியே என்னை என்ன பண்ணமுடியும் என்று கேட்டு வீணா பிரச்சனை செய்து, என்னை தாக்கி அடிச்சி உதைத்தார். இதுக்கு அங்கயிருந்த பொதுமக்களே சாட்சி. இப்போ புகார் கொடுத்தும் போலீஸ் நடவடிக்கை எடுக்கவில்லை. கட்சி நிர்வாகிகள் கேட்டதற்கு எம்.எல்.ஏ எதுவும் நடவடிக்கை எடுக்கவேண்டாம் என்று சொல்லிட்டதாக போலீஸ் தரப்பில் இருந்து சொல்லப்படுது. எம்.எல்.ஏ இப்படி ஒருதலைப்பட்சமாக நடந்துகிறது நியாயமா?” எனக்கேள்வி எழுப்பினார்.

 

இதுகுறித்து விளக்கம் பெற கவுன்சிலர் ரஞ்ஜித்குமாரை தொடர்புகொண்டபோது அவரது எண் தொடர்பு எல்லைக்கு வெளியே இருந்தது. 

 

இதுக்குறித்து நாம் விசாரித்தபோது, “புதுப்பாளையம் பேரூராட்சி கலசப்பாக்கம் தொகுதிக்குள் வருகிறது. தொகுதி எம்.எல்.ஏ சரவணனுக்கும் – புதுப்பாளையம் ஒன்றியக்குழு தலைவரும், ஒன்றிய செயலாளருமான சுந்தரபாண்டியனுக்கும் இடையே உட்கட்சி மோதல் நடைபெற்றுவருகிறது. இதில் எம்.எல்.ஏ கோஷ்டியினர் சேர்மன் தரப்பினர் மீது தாக்குதல் நடத்துகிறார்கள். கடந்த இரண்டு வருடங்களில் பலப்பல பிரச்சனைகள். கட்சியின் அடிமட்ட நிர்வாகிகளுக்குள் சாதாரண வாய் சண்டையாக ஆரம்பித்த பிரச்சனை இப்போது அடித்துக்கொள்ளும் அளவுக்கு வந்து நிற்கிறது. அடுத்த என்னவாகும் எனத்தெரியவில்லை.

 

மாவட்டச் செயலாளர் உட்பட நிர்வாகிகள் இதில் யார் மீது தவறு என விசாரித்து அறிவுரை சொல்வதோ, நடவடிக்கை எடுப்பதோ இல்லை. கட்சியினர் வந்து புகார் சொன்னாலும் கண்டுகொள்ளாமல் கடந்து செல்வதாலே இங்கு கட்சிக்குள் பிரச்சனை வளர்ந்து கொண்டே இருக்கிறது” என்கிறார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்கப்படும்' - அமைச்சர் முத்துசாமி

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் தண்ணீர் வேகமாகக் குறைந்து வருகிறது. இருப்பினும் மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று வீட்டு வசதி துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி கூறியுள்ளார்.

அவர் ஈரோடு காந்திஜி சாலையில் திமுக சார்பில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 'பவானி சாகர் அணையில் மட்டுமல்லாமல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மின் உற்பத்தி அணைகளிலும் தண்ணீர் மிக குறைவாக உள்ளது. எங்களுக்கு கீழ் பவானி பாசனப்பகுதியில் உள்ள புஞ்சை பயிர்களுக்கு ஐந்தாவது நினைப்பிற்கு தண்ணீர் விட வேண்டும் என்பது ஆசைதான். ஆனால் நீர் இருப்பு அணையில் இல்லை. தமிழக முதலமைச்சர் 22 மாவட்டங்களுக்கு குடி தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க ரூபாய் 150 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். ஈரோடு மாவட்டத்திலும் எந்தக் குடிதண்ணீர் பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார். ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டு அதிக உஷ்ணம் நிலவுகிறது. சாலை விரிவாக்கத்திற்காக பல இடங்களில் மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. அவ்விடங்களில் மரக்கன்றுகள் நட நடவடிக்கை எடுக்கப்படும். நீலகிரி மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் 26 நிமிடங்கள் பழுது அடைந்தது குறித்து திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது'' என்றார்.

ஈரோடு மாநகர மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியம் பகுதிச் செயலாளர் அக்னி சந்துரு மூன்றாம் மண்டல தலைவர் சசிகுமார் உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.