திருப்பத்தூர் மாவட்டத்தின், பல இடங்களில் திடீரென ஏப்ரல் 5ந்தேதி மாலை ஆலங்கட்டி மழை பெய்தது. வாணியம்பாடி, வளையாம்பட்டு, மின்னூர், கிரிசமுத்திரம் உட்பட பலயிடங்களில் 30 நிமிடம் விடாமல் பெய்த இந்த பலத்த மழையின்போது, சூறைக்காற்றும் வீசியது.
இதில் வாணியம்பாடி நகரின், சில இடங்களில் மரங்கள் வேரோடு கீழே சாய்ந்தன. பல கடைகளின் தகர மற்றும் பிளாஸ்டிக் மேற்கூரைகள் கீழே விழுந்தன. இதனால் பல பகுதிகளில் மின்சாரத்தை மின்வாரியம் துண்டித்து வைத்துள்ளது.
கரோனா வைரஸ் பரவலுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்ததால் அந்த நேரத்தில் பொதுமக்கள் யாரும் சாலைகளில் இல்லை, வாகனங்களும் இல்லை. இதனால் சேதம் எதுவும் பெரியதாக ஏற்படவில்லை. கீழே விழுந்த மரத்தினை அப்புறப்படுத்தும் பணியில் நகராட்சி துப்புரவு பணியாளர்கள், நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.