Skip to main content

''நேரம் கனித்துள்ளது; என் அரசியல் பிரவேசம் தொடக்கம்'' - சசிகலா பேச்சு

Published on 16/06/2024 | Edited on 16/06/2024
 ''The time is ripe; My political entry begins'' - Sasikala speech

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவிப்பதில் தீவிரம் காட்டி வரும் நிலையில் அதிமுக இந்த இடைத்தேர்தலை புறக்கணிக்க முடிவெடுத்துள்ளது. இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் 'அராஜகம் என்றால் திமுக... திமுக என்றால் அராஜகம்...' திமுக ஆட்சியில் சட்ட ஒழுங்கு கெட்டுள்ளது. விக்கிரவாண்டி தேர்தல் ஜனநாயக முறைப்படி முழு சுதந்திரமாக நடக்குமா எனக் கேள்வி எழுந்துள்ளது. எனவே இந்தத் தேர்தலைப் புறக்கணிக்கிறோம். 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் மக்களின் பேராதரவுடன் அதிமுக ஆட்சி மலர்வது உறுதி' எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த சசிகலா பேசுகையில், ''விக்கிரவாண்டி தொகுதியில் இடைத்தேர்தலில் அதிமுக புறக்கணித்திருப்பது சரியான முடிவு அல்ல. அதிமுகவில் தற்போது குறிப்பிட்ட ஜாதியினர் ஜாதி அரசியல் செய்கின்றனர். ஆனால் எனக்குக் குறிப்பிட்ட ஜாதியினர்தான் சொந்தம் என்றெல்லாம் கிடையாது. ஜெயலலிதாவும் ஜாதி பார்த்துப் பழகியவர் அல்ல. நான் ஜாதி பார்த்து இருந்தால் எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக ஆக்கி இருக்க மாட்டேன். சிலரது சுயநலத்தால் அதிமுக சரிவை சந்தித்துள்ளது. தற்போது அதிமுக மூன்றாவது இடத்திற்கும் நான்காவது இடத்துக்கும் சென்றுள்ளது. தானும் கெட்டு கட்சியையும் சிலர் கெடுத்து விட்டனர். அதிமுகவினர் ஒன்றிய வேண்டும் என நான் அடிக்கடி கூறி வந்ததற்கான நேரம் தற்பொழுது கனிந்துள்ளது. அதிமுகவில் தன்னுடைய அரசியல் பிரவேசம் தொடங்கியுள்ளதால் கட்சி அழிந்துவிடும் என்று கூற முடியாது. 2026 சட்டமன்றத் தேர்தல் அதிமுக தனித்து ஆட்சி அமைக்கும்'' என்றார்.

சார்ந்த செய்திகள்

 

Next Story

ஆளுநருடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!

Published on 25/06/2024 | Edited on 25/06/2024
Edappadi Palaniswami meeting with the Governor

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 5 பெண்கள் உட்பட 59 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. சிகிச்சையில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். இதனால் இறப்புகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதே சமயம் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு கள்ளக்குறிச்சி, சேலம் மற்றும் விழுப்புரம் அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதோடு கள்ளச்சாராய உயிரிழப்பு தொடர்புடைய சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்தது.

இத்தகைய சூழலில் இன்று (25.06.2024) காலை தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் தொடங்கியது. அப்போது கேள்வி நேரத்தை ஒத்திவைத்து விட்டு கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்த கோரி அதிமுக உறுப்பினர்கள் மூன்றாவது நாளாக அமளியில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து அவைக்கு குந்தகம் விளைவித்ததால் அதிமுக உறுப்பினர்களை வெளியேற்ற சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார். மேலும் இன்று ஒரு நாள் பேரவை நடவடிக்கைகளில் கலந்து கொள்ள அதிமுக உறுப்பினர்களுக்குத் தடை விதிக்கப்பட்டது. முன்னதாக கள்ளக்குறிச்சி சம்பவத்தைக் கண்டித்து முன்னதாக இன்றும் கருப்பு சட்டை அணிந்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவைக்கு வந்திருந்தனர். 

Edappadi Palaniswami meeting with the Governor

இந்நிலையில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக சென்னை ராஜ்பவனில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்து எடப்பாடி பழனிசாமி மனு அளித்தார். அப்போது அதிமுகவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள், மாநிலங்களவை உறுப்பினர்கள் உடன் இருந்தனர். ஆளுநரை சந்தித்து மனு அளித்த பின் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசுகையில், “கள்ளக்குறிச்சியின் நகரின் மையப்பகுதியில் விஷச்சாராய விற்பனை நடைபெற்றுள்ளது. எனவே இந்த விவகாரம் தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை” எனத் தெரிவித்தார். 

Next Story

அதிமுகவினர் சட்டப்பேரவையில் இருந்து வெளியேற்றம்! 

Published on 25/06/2024 | Edited on 25/06/2024
ADMK expelled from the Legislative Assembly

சென்னை தலைமைச் செயலகத்திலுள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் தமிழக சட்டசபை பேரவைக் கூட்டம் கடந்த 20 ஆம் தேதி (20.06.2024) தொடங்கியது. அப்போது மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சட்டப்பேரவை கூட்டத் தொடரின் இரண்டாம் நாளில் (21.06.2024) இருந்து பல்வேறு துறைகளின் மீதான மானியக் கோரிக்கைகளின் மீது விவாதமும், வாக்கெடுப்பும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இன்று (25.06.2024) காலை தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் தொடங்கியது. அப்போது கேள்வி நேரத்தை ஒத்திவைத்து விட்டு கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்த கோரி அதிமுக உறுப்பினர்கள் மூன்றாவது நாளாக அமளியில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து அவைக்கு குந்தகம் விளைவித்ததால் அதிமுக உறுப்பினர்களை வெளியேற்ற சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார். மேலும் இன்று ஒரு நாள் பேரவை நடவடிக்கைகளில் கலந்து கொள்ள அதிமுக உறுப்பினர்களுக்குத் தடை விதிக்கப்பட்டது. 

ADMK expelled from the Legislative Assembly

இது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டபேரவையில் பேசுகையில், “எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது, அவர் மீது போடப்பட்ட வழக்கில் சிபிஐ மீது நம்பிக்கை இல்லை எனக் காரணம் காட்டி, அதற்குத் தடை உத்தரவு வாங்கிய வீராதி வீரரான எதிர்க்கட்சித் தலைவர்தான் தற்போது கள்ளக்குறிச்சி விவகாரத்தில் சிபிஐ விசாரணை வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார். சட்டப்பேரவையில் திட்டமிட்டு கலவரத்தை ஏற்படுத்த அதிமுக உறுப்பினர்கள் முயற்சி செய்கின்றனர்.

நாடாளுமன்ற மக்களைவைத் தேர்தலில் திமுக கூட்டணி 40க்கு 40 தொகுதிகளில் பெற்ற வெற்றி அதிமுக கண்களை உறுத்துகிறது. அதைத் திட்டமிட்டு திசை திருப்ப இது போன்ற பிரச்சனைகளை அதிமுகவினர் கிளப்புகின்றனர்” எனத் தெரிவித்தார். முன்னதாக கள்ளக்குறிச்சி சம்பவத்தைக் கண்டித்து முன்னதாக இன்றும் கருப்பு சட்டை அணிந்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவைக்கு வந்திருந்தனர்.