Skip to main content

இடி, மின்னல், அடை மழை.. தத்தளிக்கும் துத்துக்குடி! 

Published on 26/11/2021 | Edited on 26/11/2021

 

Thunder, lightning, torrential rain.

 

வடகிழக்குப் பருவமழை காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் கன மழை பெய்துவருகிறது. அதன்படி தென் மாவட்டத்தில் ஒரே நாளில் அதிகன மழை பெய்துள்ளது. குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தின் கடலோரப் பகுதியான, தூத்துக்குடி, திருச்செந்தூர், காயல்பட்டினம் மற்றும் நெல்லைப் பகுதியிலும் நேற்று காலையிலிருந்தே வெளுத்து வாங்கியிருக்கிறது. திருச்செந்தூரில் மட்டும் 3 மணி நேர கனமழையின் விளைவாய் வெள்ள நீர் நகரச் சாலைகளில் பெருக்கெடுத்திருக்கிறது. குறுகிய நேரத்தில் பெய்த கனமழையின் அளவு திருச்செந்தூரில் 24.06.செ.மீ., காயல்பட்டினத்தில் 30. செ.மீ., தூத்துக்குடியில் 26.04 செ.மீ. என பதிவாகியுள்ளது. கனமழையின் காரணமாக தூத்துக்குடியின் அரசு மருத்துவமனைக்குள்ளும் புகுந்த வெள்ள நீரால் பணியாளர்கள், நோயாளிகள், அவர்களின் உறவினர்கள் பாதிக்கப்பட்டதுடன் அருகிலுள்ள நீதிமன்றப் பகுதிகளிலும் வெள்ள நீர் புகுந்துள்ளது.

 

தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்ததால் அங்குள்ள மக்கள், அதிகாரிகளால் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டனர். வெள்ள நீர் பகுதிகளைப் பார்வையிட்ட அமைச்சர் கீதா ஜீவன், கலெக்டர் செந்தில்ராஜ், மாநகராட்சிக் கமிஷ்னர் சாருஸ்ரீ உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மீட்பு பணிகளை விரைவு படுத்தினர். 

 

Thunder, lightning, torrential rain.

 

திருச்செந்தூரின் செந்திலாண்டவர் ஆலயத்தைக் கிட்டத்தட்ட மழை வெள்ள நீர் முற்றுகையிட்டது. சண்முக விலாசம், ஆலயத்தின் வெளி மற்றும் உட்பிரகாரம் போன்றவைகளில் வெள்ள நீர் ஓடியது. கோயிலின் உட்பிரகாரப் பகுதியில் உள்ள மடை அடைப்பினால் வெள்ள நீர் வெளியே செல்ல முடியாமல் முழங்கால் அளவு தேங்கியதால், ஆலய செயற்பொறியாளர் அழகர்சாமி, மேலாளர் சிவநாதன், பி.ஆர்.ஓ. மாரிமுத்து ஆகியோர் உடனடியாக ஜே.சி.பி.யை வரவழைத்து அடைக்கப்பட்ட மடையைச் சீர் செய்து வெள்ள நீரை வெளியேற்றினர். இதன் காரணமாக ஆலயத்தரிசனத்திற்கு பக்தர்கள் வரமுடியாமல் சிரமப்பட்டனர். நகரின் தாழ்வான பகுதி, ஆலயச் சாலைகள் வெள்ளக் காடாயின.

 

மூன்று மணி நேரக் கனமழையால் கடற்கரைப் பகுதியான காயல்பட்டினம் சாலைகளில் வெள்ள நீர் சூழ்ந்தது. நகரை ஒட்டிய அருணாசலபுரம் செல்லும் பாதை வெள்ளம் காரணமாக அங்குள்ள தரைப்பாலம் அடைபட்டதால் திசைமாறிய வெள்ள நீர், அருகிலுள்ள 20 குடியிருப்பு வீடுகளில் புகுந்ததால் அந்த வீடுகளின் மக்கள் பல் நோக்குப் புகலிடம் கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாகத் தங்கவைக்கப்பட்டனர்.

 

Thunder, lightning, torrential rain.

 

இடியும் மின்னலுமாய் நெல்லை மாவட்டத்தில் கனமழை பெய்து கொண்டிருந்தது நேரத்தில் மாவட்டத்தின் நாங்குநேரிப் பகுதியின் முனைஞ்சிப்பட்டியைச் சேர்ந்த பண்டாரம் என்பவர் தன்னுடைய 100 செம்மறி ஆடுகளை அங்குள்ள காட்டுப் பகுதியில் மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். அது சமயம் கனமழை பெய்து கொண்டிருந்த நேரத்தில் திடீரென மின்னல் வெட்டுத் தாக்கியதின் காரணமாக மேய்ச்சலிலிருந்த 20 ஆடுகள் உயிரிழந்தன. இதன் மதிப்பு சுமார் இரண்டு லட்சம் ஆகும் என்கிறார்கள்.

 

திருச்செந்தூரில் வெள்ளச் சேதங்களைப் பார்வையிட்ட கனிமொழி எம்.பி. மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Chance of rain in 4 districts

தமிழகத்தின் 4 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் பல இடங்களில் வெயில் செஞ்சுரி அடித்து மக்களை கடுமையாக வாட்டி வதைத்து வருகிறது. இதனால் தண்ணீரின்றி வனப்பகுதிகள் வறண்டு இருப்பதால் வனவிலங்குகள் மக்கள் வசிக்கும் பகுதிக்கு தண்ணீர் தேடி வரும் நிகழ்வுகள் அடிக்கடி நடக்கிறது. குறிப்பாக மேற்குத்தொடர்ச்சி மலையின் வனப்பகுதிகளில் கடும் வறட்சியான சூழல் நிலவுகிறது. இதனால் கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

வெயிலின் கொடுமையில் மக்கள் அல்லல்படும் நிலையில் ஒரு சில இடங்களில் மழை பெய்து மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “திருநெல்வேலி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை ஆகிய 4 மாவட்டங்களில் இன்று (15.04.2024) காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்; நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Tuticorin incident Court action order

தூத்துக்குடியில் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில், 22-5-2018 அன்று ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக்கோரி போராட்டம் நடைபெற்றது. அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட உயிரிழப்புகள், காயங்கள் குறித்தும், பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விசாரிப்பதற்காக சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

இந்த ஆணையம் 18-5-2022 அன்று அளித்த அறிக்கையின்மீது, தமிழக அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்டன. மேலும் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த அறிக்கையின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விபரங்கள் தமிழக அரசால் வெளியிடப்பட்டது. இதற்கிடையே தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து எடுத்து விசாரித்த வழக்கு, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தால் முடித்து வைக்கப்பட்டதை எதிர்த்து மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று (27.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில், “இது குறித்த அறிக்கை தயாராகிவிட்டதால் அடுத்த விசாரணையின் போது சமர்ப்பிக்கப்படும்” என பதில் அளிக்கப்பட்டது. இதனையடுத்து தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக அதிகாரிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட துறை ரீதியான நடவடிக்கை குறித்த விவரங்களை மனுதாரருக்கு அறிக்கையாக தர தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் வழக்கு விசாரணையை ஏப்ரல் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.