சென்னை பெரம்பூரில் ரயில் மீது கல்லூரி இளைஞர்கள் கற்களை கொண்டு தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சென்ட்ரலில் இருந்து திருப்பதி சென்று கொண்டிருந்த ரயிலில் மாநில கல்லூரி மாணவர்கள் பயணம் செய்து கொண்டிருந்தனர். அதேபோல் சென்னை சென்ட்ரலில் இருந்து அரக்கோணம் செல்லும் ரயிலில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பயணம் செய்துகொண்டிருந்தனர். இந்நிலையில் ரயில் பெரம்பூர் அருகே சென்றுகொண்டிருந்த பொழுது மாநில கல்லூரி மாணவர்களுக்கும் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. மாநில கல்லூரி மாணவர்கள் அவர்கள் பயணித்த ரயிலில் மற்ற பயணிகளுக்கு இடையூறு செய்தனர். இதனை பொறுக்க முடியாத பயணிகள் அபாய சங்கலியை பிடித்து ரயிலை நிறுத்தினர்.
அதனைத்தொடர்ந்து திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து இறங்கி பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பயணித்த ரயில் மீது கற்களை வீசினர். அதனைத்தொடர்ந்து பச்சையப்பன் கல்லூரி மாணவர்களும் பதிலுக்கு தாக்கத் தொடங்கினர். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியான நிலையில் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த செம்பியம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மாநில கல்லூரி மாணவர்கள் 12 பேரைப் பிடித்து காவல்நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.