Skip to main content

சென்னை டூ விருத்தாசலம்; சிறுமி உட்பட மூன்று பெண்கள் மர்ம மரணம்!

Published on 01/12/2022 | Edited on 01/12/2022

 

Three chennai women passed away near virudhachalam
மிஸ்பசாந்தி

 

கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகேயுள்ள மலையனூர் கிராமத்தைச் சேர்ந்த வேல்முருகன் என்பவர் இன்று காலை தனது வயலுக்கு சென்றிருக்கிறார். அப்போது அவரது வயல் கிணற்றில் மூன்று சடலங்கள் மிதந்ததைக் கண்டு உடனடியாக சிறுபாக்கம் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தார். அதையடுத்து அங்கு விரைந்து சென்ற சிறுபாக்கம் காவல்துறையினர் தீயணைப்பு துறையினரை வரவழைத்து 3 சடலங்களையும் மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிறுமி உட்பட மூன்று பெண்கள் சடலமாக கிணற்றில் மிதந்தது குறித்து அப்பகுதியில் பரபரப்பு கிளம்பியுள்ளது.

 

இதுகுறித்து காவல்துறை வட்டாரத்தில் விசாரித்த போது, மலையனூர் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் மகன் சிவகுருநாதன் (39) என்பவருக்கு ஏற்கனவே சுமதி என்ற பெண்ணோடு காதல் திருமணமாகி இவர்களுக்கு 17, 8 ஆகிய வயதுகளில் இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர். மங்களூரில் வேலை பார்த்து வந்த சிவகுருநாதன் 2004-இல் சென்னையில் வேலை செய்வதற்காக சென்றுள்ளார். அங்கு அவருக்கு மிஸ்பசாந்தி என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. சிவகுருநாதனின் தவறான நடவடிக்கையால் ஏற்பட்ட பிரச்சினையில் சுமதி 2016-இல் தூக்கு போட்டு இறந்து விட்டார். அதன் பிறகு 2019-இல் ஊருக்கு வந்த சிவகுருநாதன் தனது பிள்ளைகள் மற்றும் அம்மாவுடன் வசித்து கொண்டு மங்களூரில் உள்ள பர்னிச்சர் கடையில் 2020-இல் இருந்து வேலை செய்து வருகிறார். 

 

Three chennai women passed away near virudhachalam
சிவகுருநாதன்

 

2004-இல் சென்னையில் வேலை பார்க்கும் போது மிஸ்பசாந்தி என்பவரது வீட்டில் தங்கி இருந்தபோது திருமணம் செய்து கொள்ளாமலேயே இருவரும் ஒன்றாக வாழ்ந்தனர். அதன் மூலம் அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. ஆனாலும் இருவரும் முறைப்படி திருமணம் செய்து கொள்ளவில்லை. சிவகுருநாதன் குடிப்பழக்கம் உடையவர் என்பதால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2019-இல் சிவகுருநாதன் சொந்த ஊரான மலையனூருக்கு வந்து விட்டார். மிஸ்பசாந்தி தனது மகளோடு சென்னையிலிருந்து அவ்வப்போது மலையனூர் வந்து சிவகுருநாதனை பார்த்து விட்டு சென்றுள்ளார்கள். கடந்த மூன்று வருடங்களாக இருவருக்குள் எந்த தொடர்பும் இல்லாமல் இருந்துள்ளார்கள். கடந்த 27.11.22 அன்று மிஸ்பசாந்தி (35) அவரது மகள் அருள் ஹெலன் கிரேஸ் (வயது 8), அவரது அம்மா தேபோரால் கல்யாணி (60) மூவரும் மலையனூர் சிவகுருநாதன் வீட்டிற்கு வந்து இங்கேயே இருக்கப் போவதாகவும், தனியாக வீடு பார்க்கவும் சொல்லி உள்ளார்கள். அவரும் மலையனூரில் தனியாக வீடு பார்த்து கடந்த மூன்று நாட்களாக இருந்துள்ளார்கள். நேற்று (30.11.22) இரவு 11.00 மணியளவில் சிவகுருநாதன் அவர்களுக்கு சாப்பாடு வாங்கி கொடுப்பதற்காக பார்க்கச் சென்றுள்ளார். அவர்கள் வீட்டில் இல்லை. அவர்களை தேடிப் பார்த்ததாகவும், ஆனால் அவர்கள் எங்கு சென்றார்கள் என்று தெரியவில்லை என்றும், அவர்களிடம் தொடர்பு கொள்ள செல்போன் எதுவும் இல்லை என்றும் கூறுகிறார். இதனிடையே இன்று (01.12.22) காலை 07.00 மணியளவில் வேல்முருகன் என்பவரது கிணற்றில் மூவரும் இறந்த நிலையில் மிதந்துள்ளார்கள் என்று அந்த வழியாகச் சென்றவர்கள் பார்த்து தகவல் சொன்னதின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடம் சென்று விசாரணை செய்து வருகின்றனர் என்றனர்.

 

8 வயது சிறுமி உட்பட 3 பெண்கள் கிணற்றில் சடலமாக மிதந்தது தற்கொலையா அல்லது கொலையா என்பது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.