Skip to main content

கார் டிக்கியில் இறந்த நிலையில் சடலம்; கடன் கொடுத்தவருக்கு நேர்ந்த கொடூரம்

Published on 09/09/2023 | Edited on 09/09/2023

 

 'Dead body in car trunk' brutality of moneylender

 

தூத்துக்குடியில் கொடுத்த கடனை திரும்பக் கேட்டதால் கடன் வாங்கியவர் கூலிப்படையை வைத்து கடன் கொடுத்த நபரை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 

தூத்துக்குடி மாவட்டம் வைப்பார் பல்லாக்குளம் பகுதியில் உள்ள வனப்பகுதியை ஒட்டிய இடத்தில் நேற்று இரவு கார் ஒன்று தீப்பிடித்து எரிந்த நிலையில் இருந்தது. அந்த வழியாக வாகனத்தில் சென்ற சிலர் உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த காரை சோதித்ததில் காரின் டிக்கியில் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்தார். இறந்து கிடந்தவர் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர் சாயல்குடி பகுதியைச் சேர்ந்த நாகஜோதி என்பது தெரிய வந்தது. தொழிலதிபரான நாகஜோதியின் மரணம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டனர்.

 

போலீசாரின் தொடர் விசாரணையில் அதிர்ச்சி தரும் தகவல் வெளியானது. தொழிலதிபர் நாகஜோதி வெளியூர் செல்லும் போதெல்லாம் மைக்கேல் ராஜ் என்பவரை டிரைவராக உடன் அழைத்துச் செல்வதை வாடிக்கையாக வைத்திருந்துள்ளார். ஒருமுறை அப்படி காரில் அழைத்து சென்றபோது காரை ஒட்டிய மைக்கேல்ராஜ் அடமானம் வைத்த தன்னுடைய நகைகள் ஏலத்துக்கு வர இருப்பதால் 2 லட்சம் ரூபாய் தருமாறு நாகஜோதியிடம உதவி கேட்டுள்ளார். நாகஜோதியும் உதவி செய்துள்ளார். பின்னர் ஒருநாள் கொடுத்த பணத்தை டிரைவர் மைக்கேல்ராஜிடம் நாகஜோதி கேட்டுள்ளார். ஆனால் பணத்தை திருப்பி தர முடியாததால் மைக்கேல்ராஜ் நாகஜோதியை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளார்.

 

விளாத்திகுளத்தில் தனக்கு வேண்டியவர் எனக்கு இரண்டு லட்சம் தருவதாக கூறியிருக்கிறார். அதை வாங்கி உங்களுடைய கடனை அடைத்து விடுகிறேன் என மைக்கேல் தெரிவித்துள்ளார். அதை நம்பிய நாகஜோதி காலை 8:00 மணி அளவில் சாயல்குடியில் இருந்து காரில் புறப்பட்டார் மைக்கேல் ராஜ் காரை ஓட்டினார். சிறிது தூரம் கார் சென்றபோது வழியில் நின்ற கணபதிராஜன், மாரி, கனி ஆகிய 3 பேர் காரில் ஏறினர். இதனால் பதற்றமடைந்த நாகஜோதி யார் இவர்கள் என மைக்கேல்ராஜிடம் கேட்டுள்ளார். ஜாமீன் கையெழுத்து போடுவதற்காக இவர்கள் வந்துள்ளார்கள் என மைக்கேல் ராஜ் சமாளித்துள்ளார்.

 

தொடர்ந்து கார் சூரங்குடி அருகே உள்ள குமாரசக்கனாரபுரம் அருகே சென்றபோது நான்கு பேரும் சேர்ந்து நாகஜோதியிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். நாகஜோதி பணம் கொடுக்க மறுத்ததைத் தொடர்ந்து கழுத்தை நெரித்துக் கொலை செய்தனர். தொடர்ந்து காரை வைப்பார் பல்லாக்குளம் பகுதியை ஒட்டியுள்ள வனப்பகுதிக்கு செலுத்திய மைக்கேல்ராஜ், நாகஜோதியின் உடலை காரின் டிக்கியில் வைத்துள்ளார். அதன் பின்னர் சரக்கு ஆட்டோவில் சென்று பெட்ரோல், விறகு உள்ளிட்ட பொருட்களை வாங்கி வந்து காருக்குள் போட்டு காருக்கு தீ வைத்து விட்டு நான்கு பேரும் தப்பி சென்றனர். முக்கிய கொலையாளியான மைக்கேல்ராஜின் செல்போன் சம்பவ இடத்தில் தவறி விழுந்துள்ளது. சம்பவ இடத்தில் செல்போன் கிடைத்ததால் போலீசார் குற்றவாளிகளை இந்த சம்பவத்தில் எளிதாக கைது செய்தனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நம்பவைத்து மோசம் செய்த பொறியாளர்! இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்! 

Published on 09/12/2023 | Edited on 09/12/2023
Engineer arrested by police who cheated girl

தர்மபுரி மாவட்டம், அரூரைச் சேர்ந்தவர் வனிதா (26, பெயர் மாற்றப்பட்டுள்ளது). பட்டதாரி பெண். பெங்களூருவில் உள்ள ஒரு ஐ.டி., நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்குத் திருமணம் செய்ய பெற்றோர் தீர்மானித்து இருந்தனர். இதற்காக மாப்பிள்ளை பார்த்து வந்தனர். இந்நிலையில், சேலம் மாவட்டம் ஆத்தூர் காட்டுக்கொட்டகை பகுதியைச் சேர்ந்த மென்பொருள் பொறியியல் பட்டதாரி யோகேஷ் (28) என்பவர், தரகர்கள் மூலம் விவரங்களை அறிந்து, வனிதாவை பெண் கேட்டுச் சென்றார். 

கடந்த ஜூலை மாதம் யோகேஷ் பெண் பார்க்கச் சென்றபோது, தன்னுடன் தாயார் ஜீவா (52), சின்ன சேலத்தைச் சேர்ந்த அவருடைய மாமா தமிழரசன் (39), அக்கா ஜெயஸ்ரீ (34) ஆகியோரையும் அழைத்துச் சென்றிருந்தார். இருதரப்புக்கும் பிடித்துப்போன நிலையில், செப்டம்பர் மாதம் நிச்சயதார்த்தம் செய்து கொள்வது என முடிவு செய்தனர். பெண் பார்க்கும் படலத்தின்போதே வனிதாவுக்கும், யோகேஷூக்கும் ஒருவரையொருவர் பிடித்துப் போனது. நிச்சயதார்த்த தேதியும் முடிவு செய்ததால், இருவரும் அப்போது முதல் சகஜமாக அலைபேசியில் பேசி வந்துள்ளனர். 

அலைபேசிவழி பேச்சு, சில நாள்களிலேயே நேரடி சந்திப்பு வரை சென்றது. பின்னர் இருவரும் வார இறுதி நாட்களில் ஒன்றாக பல இடங்களுக்கும் ஒரே வாகனத்தில் சென்று வரும் அளவுக்கு நெருங்கிப் பழகத் தொடங்கினர். இந்த நெருக்கம் அவர்களை திருமணத்திற்கு முன்பே தனிமையில் இருக்கும் அளவுக்கு அழைத்துச் சென்றுள்ளது. வார விடுமுறை நாட்களில் வெளியே செல்லும் இவர்கள் சொகுசு விடுதிகளில் அறை எடுத்துத் தங்கியுள்ளனர். இது மட்டுமின்றி யோகேஷ், புதிய உடைகள், மோதிரம் வாங்க வேண்டும் எனக்கூறி வனிதாவிடம் இருந்து 30 ஆயிரம் ரூபாய் வாங்கியுள்ளார். 

தன்னுடனான நெருக்கத்தை திடீரென்று யோகேஷ் குறைத்துக் கொண்டதால், இதுபற்றி விசாரித்தபோதுதான் வனிதாவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமண ஏற்பாடுகள் நடந்து வந்தது தெரியவந்தது. இதுகுறித்து வனிதா, யோகேஷின் வீட்டிற்கே சென்று சட்டையைப் பிடித்து கேள்வி எழுப்பினார். அப்போது அவர், வனிதாவை திருமணம் செய்து கொள்ள மறுத்துள்ளார். அவருடைய தாயார், மாமா, அக்கா ஆகியோர் வீட்டுக்கு வந்து பிரச்சனை செய்தால் தீர்த்துக்கட்டி விடுவோம் என மிரட்டியுள்ளனர்.

யோகேஷ்தான் எதிர்காலத்தில் தனது கணவராக வரப்போகிறான் என்று எண்ணியிருந்த வனிதாவால், தான் ஏமாற்றப்பட்டதை தாங்க முடியாமல், அரூர் மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் காவல்துறையினர் யோகேஷ், அவருடைய தாயார், அக்கா, மாமா ஆகிய நான்கு பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். இதையறிந்த அவர்கள் திடீரென்று தலைமறைவாகிவிட்டனர். 

இந்நிலையில் அரூர் பேருந்து நிலையத்தில் சுற்றித்திரிந்த யோகேஷை, காவல்துறையினர் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். மற்ற மூவரையும் தேடி வருகின்றனர். நீதிமன்ற உத்தரவின் பேரில் யோகேஷை அரூர் சிறையில் அடைத்தனர். 

Next Story

பெண்ணை ஏமாற்றிய மேனஜர்! கொல்கத்தாவில் வளைத்து பிடித்த தமிழ்நாடு போலீஸ்

Published on 09/12/2023 | Edited on 09/12/2023
The manager who cheated on the woman! Tamil Nadu police arrested in Kolkata

வெளிநாடுகளில் இருந்து கப்பல் மூலம் சுண்ணாம்புக்கல் சரக்குகளை இந்தியாவிற்குக் கொண்டு வர, 42 லட்சம் ரூபாய் சரக்கு புக்கிங் கட்டணம் வசூலித்துக்கொண்டு மோசடி செய்த இந்தோனேசிய நிறுவன ஊழியரை சேலம் காவல்துறையினர் கைது செய்தனர்.

சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே உள்ள மேச்சேரி இந்திரா நகரைச் சேர்ந்தவர் ஐயப்பன். இவருடைய மனைவி பூவிழி (40). இவர், வெளிநாடுகளில் இருந்து சுண்ணாம்புக்கல் இறக்குமதி செய்து வியாபாரம் செய்து வருகிறார். கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் மாதம், துபாய், பிலிப்பைன்ஸ் நாடுகளில் இருந்து சுண்ணாம்புக்கல் இறக்குமதி செய்ய ஏற்பாடு செய்தார். அங்கிருந்து கப்பலில் சரக்குகளைக் கொண்டு வருவதற்காக ஆன்லைன் மூலம் இந்தோனேசியா நாட்டைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்தைத் தொடர்பு கொண்டார். 

அந்த நிறுவனத்தினரும், சுண்ணாம்புக்கல் சரக்குகளை காரைக்கால் துறைமுகத்திற்குக் கப்பலில் கொண்டு வந்து இறக்கிவிட ஒப்புக்கொண்டு, 42.42 லட்சம் ரூபாய் கட்டணம் வசூலித்தனர். இந்தக் கட்டணத்தை ஆன்லைன் மூலம் கடந்த ஜனவரி மாதம் பூவிழி செலுத்தினார். சரக்கு புக்கிங் செய்த நிறுவனம், அதன்பிறகு பூவிழியை தொடர்பு கொள்ளவே இல்லை. சரக்கும் குறிப்பிட்ட நாளில் வந்து சேரவில்லை. இதுகுறித்து பூவிழி தரப்பில் விசாரித்தபோது, இந்தோனேசியாவைச் சேர்ந்த அந்த நிறுவனத்தார் திட்டமிட்டு மோசடி செய்திருப்பது தெரியவந்தது. 

இதையடுத்து அவர், சேலம் மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையில் புகார் அளித்தார். சரக்கு புக்கிங் செய்த இந்தோனேசிய நிறுவனத்தின் கிளை கொல்கத்தாவில் இயங்குகிறது. அங்கு மேலாளராக பணியாற்றி வந்த எஸ்.சி.ஜனா (45), ஊழியர்கள் எம்.சி.குண்டு, ஆர்.கே.நாக், தீபக் ஆகியோர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, அவர்களைத் தேடி வந்தனர். 

இவர்களில் எஸ்.சி.ஜனா கொல்கத்தாவில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. அங்கு விரைந்த சேலம் மாவட்டக் காவல்துறையினர் அவரை சுற்றி வளைத்துக் கைது செய்தனர். விசாரணையில், பூவிழியிடம் மோசடியாக பெற்ற பணம், இந்தோனேசியாவில் உள்ள தீபக்கிடம் கொடுத்து வைத்திருப்பது தெரியவந்தது. ஜனாவை காவல்துறையினர் சேலம் மூன்றாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் ஆஜர்படுத்திய பிறகு, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். வழக்கில் தொடர்புடைய தீபக் உள்ளிட்ட மூவரை தேடி வருகின்றனர்.