Skip to main content

"கடந்த 8 ஆண்டுகளாக இந்த வாக்கிங் ஸ்டிக்கை அமித்ஷா கவனிக்காதது ஏன்" - திருவடிக்குடில் சுவாமிகள்

Published on 29/05/2023 | Edited on 29/05/2023

 

thiruvadikudil swamigal press meet at thanjavur for sceptre parliament related issue

 

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்திற்கு வந்திருந்த கும்பகோணம் ஜோதிமலை இறைப்பணி திருக்கூட்டம் நிறுவனர் தவத்திரு திருவடிக்குடில் சுவாமிகள் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் புதிதாகத் திறக்கப்பட்ட இந்திய நாடாளுமன்ற புதிய கட்டடத் திறப்பு விழாவில், 1947ல் திருவாவடுதுறை ஆதீனம்  மூலம் வழங்கப்பட்ட செங்கோலை வைப்பது மற்றும் மடாதிபதிகள் கலந்து கொண்டு சிறப்பு வழிபாடு செய்வது குறித்த தனது கருத்துக்களைத் தெரிவித்தார்.

 

அப்போது அவர் கூறுகையில் "சைவ சமயம் சார்ந்தவன் என்கின்ற பார்வையில் பார்க்கும்போது, ஆதீனம் வழங்கிய செங்கோலை வைப்பது, தேவாரம் பாடுவது போன்றவை மகிழ்ச்சி அளித்தாலும், மதச்சார்பற்ற ஜனநாயக நாட்டின் நாடாளுமன்றத்தில் தனிப்பட்ட ஒரு மதத்தின் அடையாளமான சின்னங்களை முதன்மைப்படுத்தி நிறுவுவதும் வழிபாடுகள் மேற்கொள்வதும் ஏற்புடையதல்ல. இது சகோதர சமயங்களைச் சார்ந்த மற்றவர்களின் மனதை பாதிக்கும். இதில் கலந்து கொள்ளும் மடாதிபதிகள் செங்கோலுடன் ஒரு புதிய வேலும் பிரதமருக்கு வழங்க இருப்பதாக அறிகிறோம். வேலன்று வென்றி தருவது மன்னவன் கோல்அதுவும் கோடாது எனின் (திருக்குறள்- 546). மன்னவனுக்கு வெற்றியளிப்பது அவன் கையிலுள்ள வேல் அல்ல; அவன் செங்கோன்மை கோணாமல் இருந்ததானால் அதுவே வெற்றி அளிப்பதாகும். செங்கோன்மை என்னும் அதிகாரத்தில் இந்த கருத்துக்களை பதிவு செய்கிறார் திருவள்ளுவர்.

 

நாம் வழங்கும் வேலும் கோலும் ஒரு மன்னனின் சிறப்பைச் சொல்லாது. அவன் செய்கின்ற நடுநிலையான ஆட்சியாகிய செங்கோன்மைதான் சிறப்பை தருவதாகும். இங்கு சிறுபான்மையினரை மதிக்காமல் ஒருதலைபட்சமாக நடக்கும் போது செங்கோன்மை தோல்வியடைகிறது. "அதுவும் கோடாது எனின்" என்றதன் மூலமாக, செங்கோல் என்கின்ற வடிவிலான குச்சிகளைப் புறந்தள்ளுகிறார் வள்ளுவர். திருவாவடுதுறை ஆதீனத்திலிருந்து செங்கோல் வழங்கியதை யாரும் மறுக்கவில்லை. ஆனால் அது மிகுந்த பரபரப்புக்கிடையே அந்த நேரத்தில் ஒரு வாழ்த்துக்களை தெரிவிக்கும் பரிசாகத்தான் இருந்ததே தவிர, இப்படித்தான் சுதந்திரம் வழங்கப்பட்டது என்பதற்கான ஆவணங்கள் இல்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

 

கடந்த காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் இந்த செங்கோலை ஒரு வாக்கிங் ஸ்டிக் போல வைத்திருந்தார்கள் என்று சொல்லும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கடந்த எட்டு ஆண்டுகளாக இந்த வாக்கிங் ஸ்டிக்கை கவனிக்காதது ஏன். தென்னகத்தில் அரசியலை வளர்க்கும் முகமாக இந்த முன்னெடுப்பை தீவிரப்படுத்தி இருக்கிறார்கள். எதுவும் மக்களிடையே எடுபடாது. அதிகாரம் கையில் இருக்கிறது என்பதற்காக, மதச்சார்பற்ற ஜனநாயக நாட்டில் ஒருதலைபட்சமாக இதுபோன்ற செயல்களை செய்வது வருத்தத்திற்குரியது. சமய, சமூக நல்லிணக்கத்தோடு மக்கள் வாழ்ந்து வரும் இந்திய நாட்டில் இதுபோன்ற நிகழ்ச்சிகள் மூலம் மதக் கலவரங்களுக்கு திட்டமிடுகிறார்களோ என்று தோன்றுகிறது. பரஸ்பரம் அன்பும் அமைதியும் ஒற்றுமையும் நின்று நிலைபெற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தித்து வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்" என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மும்முரமாக நடைபெற்று வரும் வாக்குப்பதிவு; பிரதமர் வைத்த வேண்டுக்கோள்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
PM Modi asks everyone to vote

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவு மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்துவருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்து வருகின்றனர்.  

இந்த நிலையில் பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “2024 மக்களவைத் தேர்தல் இன்று தொடங்குகிறது!  21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், இந்தத் தொகுதிகளில் வாக்களிக்கும் அனைவரும் சாதனை அளவை எட்டும் வகையில் தங்களது வாக்குரிமையை  பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

மசூதி நோக்கி வில் அம்பு; சர்ச்சையில் சிக்கிய பா.ஜ.க வேட்பாளர்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Controversial BJP candidate and Bow arrow towards the mosque in telangana

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது.

அந்த வகையில், மொத்தம் 17 மக்களவைத் தொகுதிகள் கொண்ட தெலுங்கானா மாநிலத்தில் நான்காம் கட்டமாக மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ், பாரத ராஷ்டிர சமிதி கட்சி, பா.ஜ.க ஆகிய கட்சிகள் களம் இறங்குகிறது. இங்கு பெரு நகரமாக பார்க்கப்படும் ஹைதராபாத் மக்களவைத் தொகுதி, கடந்த 1984ஆம் ஆண்டு முதல் இன்று வரை ஏஐஎம்ஐஎம் கட்சி வசம் உள்ளது. தனது தந்தைக்கு பிறகு, ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவராக இருக்கும் அசாதுதீன் ஒவைசி ஹைதராபாத் மக்களவை தொகுதியில் எம்.பியாக உள்ளார். இவரை எதிர்த்து பா.ஜ.க சார்பில், உள்ளூர் பிரபலமான மாதவி லதா என்ற பெண் மருத்துவர் ஹைதராபாத் தொகுதியில் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில், நேற்று (17-04-24) நாடு முழுவதும் ராம நவமி விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இந்த விழாவை முன்னிட்டு அனைத்து மாநிலங்களில் உள்ள ராமர் ஆலயத்தில் சிறப்பு பூஜைகளும், அதனையொட்டி ஊர்வலங்களும் நடத்தப்பட்டன. அந்த வகையில், தெலுங்கானா பா.ஜ.க எம்.எல்.ஏ ராஜா சிங் தலைமையில் ராம நவமி ஷோபா யாத்திரை, காவல்துறையின் தடையை மீறி நடத்தப்பட்டது. அந்த விழாவில் ஹைதராபாத் பா.ஜ.க வேட்பாளர் மாதவி லதா பங்கேற்றார். அது தொடர்பாக ஊர்வலம் ஒன்றில் மாதவி லதா வலம் வந்த போது, அவரது செயல் தற்போது சர்ச்சையாகியுள்ளது.

இது தொடர்பான வீடியோவில், மாதவி லதா தனது கைகளில் வில், அம்பு பிடித்திருப்பது போல் பாவனை செய்து தொலைவிலிருக்கும் இலக்கை நோக்கி எய்கிறார். அதனைப் பதிவு செய்யும் கேமரா, அம்பின் திசை மற்றும் இலக்காக அருகில் இருக்கும் மசூதி ஒன்றை சுட்டிக்காட்டுகிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானதை தொடர்ந்து, பா.ஜ.க வேட்பாளர் மாதவி லதாவுக்கு எதிராக கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

இதனையடுத்து, இந்த வைரல் வீடியோ குறித்து விளக்கமளித்த மாதவி லதா, இந்தச் சம்பவத்திற்கு மன்னிப்பு கூறியுள்ளார். இது குறித்து பா.ஜ.க வேட்பாளர் மாதவி லதா தனது ட்விட்டர் (எக்ஸ்) தள பக்கத்தில் கூறியிருப்பதாவது, “என்னுடைய வீடியோ ஒன்று ஊடகங்களில் பரவி எதிர்மறையை ஏற்படுத்துவது எனது கவனத்திற்கு வந்துள்ளது. இது முழுமையடையாத காணொளி என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். மேலும் இதுபோன்ற காணொளியால் யாருடைய உணர்வும் புண்பட்டிருந்தால், எல்லா நபர்களையும் மதிப்பதால் மன்னிப்புக் கேட்க விரும்புகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்