Skip to main content

“திமுக இல்லாததால் கூட்டணியில் பிளவு என நம்ப வேண்டாம்” - திருமாவளவன் எம்.பி

Published on 27/12/2022 | Edited on 27/12/2022

 

thirumavalavan talk about nlc and dmk alliance

 

என்.எல்.சி விரிவாக்கத்துக்காக குடியிருப்புகள் மற்றும் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ள நிலையில், தற்போது கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கும் ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கும் உரிய இழப்பீடு, குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர வேலை, குடியிருக்க மாற்று இடம் உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நெய்வேலியில் மாபெரும் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்,  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்,  அகில இந்திய காங்கிரஸ் கட்சி விருத்தாச்சலம் சட்டமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் ஜாவாஹிருல்லா, திராவிடர் கழக பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகரன், மக்கள் அதிகாரம் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் சி.ராஜீ, ம.க.இ.க இயக்க பிரச்சாரப் பாடகர் கோவன் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள், நிலம் கொடுத்து பாதிக்கப்பட்டோர் சங்கங்களின் பிரதிநிதிகள், பல்வேறு சமூக அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டு என்.எல்.சி நிர்வாகத்திற்கு எதிராக கண்டனங்களைப் பதிவு செய்தனர். 

 

நெய்வேலி புதுக்குப்பம் ரவுண்டானாவில் இருந்து தொடங்கிய பேரணி முடிவில் மத்திய பேருந்து நிலையம் எதிரே பொதுக்கூட்டம் நடைபெற்றது. அங்கு நடைபெற்ற கண்டனக் கூட்டத்தில் தி.வேல்முருகன் பேசும்போது, “இந்த பகுதி மக்கள் மற்றும் விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற அனைத்து கட்சி மற்றும் விவசாய சங்க நிர்வாகிகளுடன் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து 17 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றித் தர வேண்டும் என்று மனு அளிக்க உள்ளோம். கடந்த காலங்களில் என்.எல்.சி நிர்வாகத்தோடு பிரச்சனை ஏற்பட்ட போது அப்போதைய முதலமைச்சர் கலைஞர் பிரச்சினைகளை பேசி தீர்த்து வைத்தார்.

 

தற்போது இங்கு ஏற்பட்டுள்ள சூழ்நிலை காரணமாக விவசாயிகள், தொழிலாளர்கள் மிகுந்த வேதனைக்கு உள்ளாகி உள்ளனர். இவர்களது பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன் வரவேண்டும். இதன் மூலம் விவசாயிகள் வாழ்வில், அவர்களது வயிற்றில் பால்வார்க்கும் வாய்ப்பு தமிழக அரசுக்கு கிடைக்கும். காவல்துறை மற்றும் வருவாய்த் துறையை வைத்துக்கொண்டு மக்களை மிரட்டி நிலத்தைக் கையகப்படுத்த என்.எல்.சி முயற்சிக்கிறது. இந்த நிலையை என்.எல்.சி நிர்வாகம் கைவிட வேண்டும். மக்களை மிரட்டினால் அங்கு அனைத்து கட்சி தலைவர்களும் வருவார்கள் என்று அச்சம் என்.எல்.சிக்கு ஏற்பட வேண்டும் என்ற காரணத்திற்காகவே இந்த பொதுக்கூட்ட பேரணி நடத்தினோம்" என்றார்.

 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசுகையில், “என்.எல்.சி நிறுவனம் தொடங்கப்பட்ட காலத்தில் இருந்து இந்த பகுதி மக்களுக்கு வழங்க வேண்டிய அடிப்படை உரிமைகளை வழங்குவதில்லை. என்.எல்.சி நிறுவனத்தை மூட வேண்டும் என்று பா.ம.க தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் போராட்டம் நடத்தப் போவதாகச் சொல்லி உள்ளார். அவ்வாறு போராட்டம் நடத்தினால் என்.எல்.சி நிறுவனம் தனியார் மயமாக்கப்படும். என்.எல்.சி நிறுவனத்திற்கு வீடு, நிலம் கொடுத்தவர்களைக் கணக்கெடுத்து அவர்களுக்கு இழப்பீட்டு தொகையும், வேலைவாய்ப்பும் வழங்க அனைத்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்றார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன் பேசுகையில், “என்.எல்.சி நிலம் கொடுத்த மக்களை வஞ்சித்து வருகிறது. தற்போது கூட்டணி அமைத்துள்ள இந்த அமைப்பு விவசாயிகளின் தொழிலாளர்களின் நலனைக் காக்க தொடர்ந்து போராடும்” என்றார்.

 

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேசும்போது, “என்.எல்.சிக்கு 65 ஆண்டுகளுக்கு முன்பு நிலம் கொடுத்தவர்கள் கூட இன்னும் முழுமையாக நிவாரணத் தொகை, வேலைவாய்ப்பு பெறவில்லை. என்.எல்.சி ஒப்பந்ததாரர்கள், ஒப்பந்தத் தொழிலாளர்கள் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். என்.எல்.சியால் நிலம் கையகப்படுத்தப்படும் விவசாயிகளுக்கு அண்டை மாநிலங்களிலும் வேலைவாய்ப்பும், இலாபத்தில் பங்கும் தரவேண்டும. சிலர் இங்கு என்.எல்.சி நிறுவனம் வேண்டாம் என்கிறார்கள். வேண்டாம் என்றால் அது அதானிக்கு விற்கப்பட்டுவிடும். என்.எல்.சியை மூடுவதற்கு போராட்டம் தேவையில்லை. நாங்கள் அரசியல் காரணங்களுக்காக இந்த கூட்டணியை ஏற்படுத்தவில்லை. நாட்டு மக்களை காப்பாற்றுவதற்காக இந்த கூட்டணி அமைத்துள்ளோம். இந்த பேரணி இப்பகுதி மக்களின் உரிமைகளை மீட்க போர் அணியாக மாறும். இங்கு தி.மு.க இல்லை. இதனால் அரசியல் பிளவு ஏற்பட்டுள்ளது என்று சிலர் திரித்து பேசி மக்களை ஏமாற்றுகிறார்கள். யாரும் அதை நம்ப வேண்டாம். ஆளும் கட்சியான திமுக போராட்டத்திற்கு வர இயலாது. நம்மோடு ஒத்த கருத்துள்ள தி.மு.க நம்முடைய போராட்டத்துக்கு உறுதுணையாக இருக்கும்"  என்றார்.

 

இந்த ஆர்ப்பாட்டத்தில் சிந்தனைசெல்வன் எம்.எல்.ஏ, கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்டச் செயலாளர்கள் அறிவழகன், சிவக்குமார் மற்றும் தோழமை கட்சிகளின் அனைத்து அமைப்பின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை பொறுப்பாளர்கள் மற்றும் இடம் கொடுத்து பாதிக்கப்பட்ட, பாதிக்கப்பட உள்ள கிராமங்களின் மக்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“மோடி மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்க வேண்டும்” - தொல். திருமாவளவன் எம்.பி.!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
A case should be filed against Modi and investigated  Thirumavalavan MP

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று முன்தினம் (21.04.2024) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும். அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார்.

இதனையடுத்து பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது. மேலும் பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. வெறுப்புப் பிரசாரத்தில் ஈடுபடும் பிரதமர் நரேந்திர மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கு வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்புப் பிரச்சாரத்தில் ஈடுபடும் நரேந்திர மோடி மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியத் தேர்தல் ஆணையத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம். 

A case should be filed against Modi and investigated  Thirumavalavan MP

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா என்ற இடத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட போது நரேந்திர மோடி இஸ்லாமியர்களுக்கு எதிரான நச்சுக் கருத்துக்களை தெரிவித்துள்ளார். மேனாள் பிரதமர் மன்மோகன் சிங் பல ஆண்டுகளுக்கு முன்பு கூறிய கருத்துகளை  விஷமத்தனமாகத் திரித்து இஸ்லாமியர்கள் மீது வெறுப்பு வரும் விதமாகவும் அவர்களது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமாகவும் மோடி பேசியிருக்கிறார். மோடியின் பேச்சு தேர்தல் விதிமுறைகளை மீறுவதாகவும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்துக்கு எதிரானதாகவும் உள்ளது.

‘காங்கிரஸ் கட்சி பொதுமக்களிடம் உள்ள தங்கம் வெள்ளி முதலான சொத்துக்களை எல்லாம் பறிமுதல் செய்து அவற்றை இஸ்லாமியர்களுக்கு விநியோகம் செய்யத் திட்டமிட்டு இருக்கிறது’ என அப்பட்டமான ஒரு பொய்யை மோடி பேசி இருக்கிறார். ‘உங்கள் தேர்தல் அறிக்கையில் நீங்கள் என்ன சொல்லி இருக்கிறீர்கள்?. பொதுமக்களிடம் உள்ள தங்கத்தையெல்லாம் கைப்பற்றி எல்லோருக்கும் கொடுக்கப் போவதாக சொல்லி இருக்கிறார்கள். இதே காங்கிரஸ் ஆட்சி இருந்த போது நாட்டின் வளங்களில் இஸ்லாமியர்களுக்குத்தான் முதல் உரிமை இருக்கிறது என்று சொன்னார்கள்.

அப்படியென்றால் இப்போது பறிமுதல் செய்யும் சொத்துக்களை யாருக்கு கொடுக்கப் போகிறார்கள்? நாட்டில் அதிகமாகக் குழந்தைகளைப் பெற்றுக் கொள்கிறவர்களுக்கு,  நீங்கள் உழைத்து சம்பாதித்த வளத்தையெல்லாம் ஊடுருவல் காரர்களுக்குக் கொடுப்பதாகச் சொன்னார்கள். இதை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா? நம்முடைய தாய்மார்கள் சகோதரிகள் வைத்திருக்கும் தங்கத்தை எல்லாம் தேடி கணக்கெடுப்பு செய்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்கப் போகிறார்கள். அவர்களுக்குத்தான் சொத்துக்களில் முதல் உரிமை இருக்கிறது என்று மன்மோகன் சிங் சொன்னார். இது நகர்ப்புற நக்சலைட்டின் மனோபாவம். எனது தாய்மார்களே! சகோதரிகளே! காங்கிரஸ் கட்சி உங்களுடைய தாலியைக் கூட விட்டு வைக்காது’என பிரதமர் மோடி பேசியிருக்கிறார். 

A case should be filed against Modi and investigated  Thirumavalavan MP

நமது அரசமைப்புச் சட்டத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள ஒற்றுமை மதச் சார்பின்மை ஆகிய கோட்பாடுகளுக்கு நேர் எதிரான பேச்சாக மோடியின் பேச்சு அமைந்துள்ளது. அரசியல் ஆதாயத்திற்காக மத ரீதியான வன்முறையைத் தூண்டுவதுதான் அவர்களது நோக்கம் என்பது தெளிவாகத் தெரிகிறது. பிரதமர் மோடியின் பேச்சு மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் பிரிவு 123 (3a) இன் கீழ் குற்றமாகும். இந்தப் பேச்சு தேர்தல் விதிமுறைகள் தொடர்பாக கடந்த மார்ச் மாதம் ஒன்றிய அரசால் வெளியிடப்பட்ட அறிவிக்கைக்கும் எதிரானதாகும். இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 153 ஏ, 154 பி, 298,504, 505 ஆகியவற்றின்படி இது தண்டிக்கப்பட வேண்டிய குற்றமாகும். இந்திய நாட்டில் நேர்மையாகத் தேர்தல் நடத்த வேண்டுமென்றால் தேர்தல் ஆணையம் நரேந்திர மோடி மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும். தேர்தல் நடத்தை விதிமுறைகளை எவரும் மீறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறோம்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.