Skip to main content

"தேர்தல் ஆணையம் சுதந்திரமாக இயங்கவில்லை"- தொல்.திருமாவளவன் பேட்டி!

Published on 28/02/2021 | Edited on 28/02/2021

 

thirumavalavan mp pressmeet at madurai airport

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் தொகுதியின் மக்களவை உறுப்பினருமான தொல்.திருமாவளவன் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை விமான நிலையம் வந்தார்.

 

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த தொல்.திருமாவளவன், "தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. தேர்தல் ஆணையம் சுதந்திரமாக இயங்கவில்லை; அரசியல் தலையீடு உள்ளது. பாரதிய ஜனதாவின் தலையீடு உள்ளது என்பதை இந்த அறிவிப்புகளில் இருந்து அறிய முடிகிறது. மேற்கு வங்கத்தில் தமிழ்நாட்டை விட 60 தொகுதிகள் தான் அதிகம். தமிழ்நாட்டில் ஒரே நாளில் தேர்தல்; ஆனால், மேற்கு வங்கத்தில் 8 கட்டமாக தேர்தலை நடத்த இருக்கிறார்கள். இதில் அரசியல் உள்நோக்கம் இருக்கிறது என்பதை அறிய முடிகிறது.

 

1931- ல் எடுத்த சென்சஸ் மட்டும்தான் சாதி அடிப்படையில் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகும். அதன்பிறகு. ஓபிசி சமூகத்தில் சாதி அடிப்படையில் கணக்கெடுப்பு நிகழவே இல்லை. ஒருவேளை 10.5% வன்னியர்கள் இருக்கிறார்கள் என்றால், 1931- ல் எடுக்கப்பட்டக் கணக்காக இருக்க முடியும். இப்போது நடப்பது 2021- ஆம் ஆண்டு, ஏறத்தாழ 70 ஆண்டுகளைக் கடந்து வந்திருக்கிறோம். ஆகவே 36- ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் அடிப்படையில் வழங்கப்பட்ட இட ஒதுக்கீடு மற்றும் 2001 மக்கள் தொகை அடிப்படையில் வழங்கப்பட்ட இட ஒதுக்கீட்டில் 20 சதவீதம் கேட்டவர் எப்படி 10.5 சதவீதத்திற்கு ஒத்துக்கொண்டார்.

 

அப்படி என்றால் மீதமுள்ள 9.5 சதவீத மக்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டாம் என்கிற முடிவுக்கு ராமதாஸ் வந்துவிட்டாரா, இது எந்த அடிப்படையில் ஒப்புக்கொள்ளப்பட்டது என்ற கேள்வி எழுகிறது. தேர்தலுக்காகச் செய்யப்பட்ட ஒன்றாக தான் தெரிகிறது. தேர்தல் நாடகமாகத் தான் தெரிகிறது. இந்த சட்ட மசோதாவை சட்டமன்றத்தில் நிறைவேறினாலும் கூட ஆளுநர் ஒப்புதல் அளித்த பிறகு தான் இது சட்டமாகும். கடன் தள்ளுபடி போன்ற அறிவிப்புகள் கூட அறிவிப்புகளாகவே இருக்கிறது. எனவே, அனைத்தும் தேர்தல் நாடகம் என்றே கருத வேண்டி இருக்கிறது. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால்தான், ஒவ்வொரு சமூகமும் எத்தனை சதவீதம் இருக்கிறார்கள் என்பதை ஆதாரப்பூர்வமாக நம்மால் அறிய முடியும்.

 

அந்த அடிப்படையில் வேண்டுமானால் ஒதுக்கீடுகளை வழங்கினால், அது சமூக நீதி அடிப்படையில் செய்யப்பட்ட ஒன்றாக இருக்கும். இல்லையென்றால் இது வெறும் தேர்தல் நாடகம்தான். குறிப்பாக, பார்ப்பனர்கள் நலன்களை அடிப்படையாகக் கொண்டுதான் பாரதிய ஜனதா ஓபிசி ஒற்றுமையைச் சீர்குலைக்கிறது. அப்படி சீர்குலைப்பதற்கு சாதி அடிப்படையில் உணர்வுகளைத் தூண்டிவிட்டு அவர்களுக்கான கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வராது. சமூகத்தை சாதி அடிப்படையில் பிரிப்பதே நினைவுப்படுத்துவதே பாரதிய ஜனதா, ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட சங்பரிவார் அமைப்புகளின் மிக முக்கியமான முதன்மையான நோக்கம். ஒவ்வொரு தேர்தலிலும் மூன்றாவது அணி உருவாகும். ஆனால் எப்போதுமே இரு துருவ தேர்தல்தான் நடக்கும்" எனத் தெரிவித்தார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நீடிக்கும் அரசியல் குழப்பம்? - திமுக தொகுதிப் பங்கீட்டுக் குழுவிடம் வருத்தம் தெரிவித்த திருமாவளவன்

Published on 02/03/2024 | Edited on 02/03/2024
Thirumavalavan said We have expressed our regret to the DMK Constituency Committee

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.

மேலும் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள தி.மு.க., நாடாளுமன்றத் தேர்தலுக்கான பல்வேறு குழுக்களை உருவாக்கி அதற்கான அறிவிப்புகளை வெளியிட்டிருந்தது. அதன்படி தி.மு.க. சார்பில் வெளியிட்டிருந்த அறிவிப்பில் கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவும், தேர்தல் அறிக்கை உருவாக்கவும், தேர்தல் ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொள்ளவும் குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த குழுக்களில் தி.மு.க. மூத்த நிர்வாகிகள் இடம்பெற்றிருந்தனர்.

அந்த வகையில் கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திட நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு தலைமையில் அமைக்கப்பட்ட குழுவில் அமைச்சர் கே.என். நேரு, ஐ. பெரியசாமி, பொன்முடி, திருச்சி சிவா, ஆ. ராசா, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். மேலும் இந்த குழுவினர் தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

Thirumavalavan said We have expressed our regret to the DMK Constituency Committee

அதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகளை திமுக ஒதுக்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் திமுக நடத்திய பேச்சுவார்த்தையில் தொகுதி ஒதுக்கீடு குறித்த உடன்பாடு எட்டப்பட்டது. அதில், நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. முன்னதாக தி.மு.க. கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதியும், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சிக்கு நாமக்கல் தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

இதனிடையே, திமுக கூட்டணியில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, திமுக பேச்சுவார்த்தை குழுவிடம் நடத்திய முதற்கட்ட பேச்சுவார்த்தையில் 2 தனித் தொகுதிகளையும், ஒரு பொதுத் தொகுதியும் கேட்டிருந்தன. இந்நிலையில், திமுக மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இடையே இன்று இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என்று கூறப்பட்டது. மேலும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்த திமுக நேரம் ஒதுக்கியிருந்தும் விசிக நிர்வாகிகள் யாரும் கலந்துகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. 

Thirumavalavan said We have expressed our regret to the DMK Constituency Committee

இந்த பரபரப்பான சூழ்நிலையில், சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் உயர்மட்ட குழு கூட்டம் இன்று (02-03-24) நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “தேர்தல் நிதிக் குழு, தலைமையக ஒருங்கிணைப்பு குழு, தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு, பரப்புரை குழு என 4 குழுக்கள் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகள் சார்பில் அமைக்கப்பட்டுள்ளன. அதில், கவுதம சன்னா தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு அமைக்கப்படும். பாவரசு தலைமையில் தேர்தல் நிதிக் குழு அமைக்கப்படும். வன்னியரசு தலைமையில் தலைமையக ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்படும். ஆளூர் ஷா நவாஸ் தலைமையில் தேர்தல் பரப்புரை ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்படும். 

உயர்நிலைக் குழு கூட்டம் காரணமாக திமுக உடனான பேச்சுவார்த்தையில் இன்று பங்கேற்க இயலவில்லை. வர இயலாமைக்கு வருத்தம் தெரிவிப்பதாக திமுக தொகுதி பங்கீட்டு குழுவுக்கு தகவல் தெரிவித்துள்ளோம். அதனால், ஓரிரு நாளில் திமுகவுடனான தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையில் பங்கேற்போம். 2 தனித் தொகுதி, 1 பொதுத் தொகுதியை கேட்டுப் பெறுவது நலம் பயக்கும் என உயர்நிலைக் குழுவில் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. கொள்கை புரிதலோடு இயங்குகின்ற கட்சிகள் தான் திமுக கூட்டணியில் உள்ளன. அதனால், திமுக கூட்டணியில் உள்ளோம். திமுக கூட்டணியில் தான் தொடர்ந்து பயணிப்போம். அதில் எந்த ஊசலாட்டமும் இல்லை. 

திமுக கூட்டணியில் தான் விடுதலைச் சிறுத்தைகள் இந்த தேர்தலை சந்திக்கும். இதில் எந்த மாற்றமும் இல்லை. பரஸ்பர புரிதலில் திமுகவுடன் தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தம் ஏற்படும். கூட்டணி கட்சிகளுக்கு இடையே எந்த இடைவெளியும் ஏற்படாது. அகில இந்திய அளவில் இந்தியா கூட்டணி என்பது காங்கிரஸ் தலைமையில் தான் உள்ளது. திமுக - காங்கிரஸ் கூட்டணியில் ஏதேனும் இடைவெளி ஏற்படும் என நினைத்து அதில் நுழையலாம் என யாரும் காத்திருக்க வேண்டாம். பா.ஜ.க - அதிமுக கூட்டணியில் எந்த செயல்பாடும் இல்லாமல் இருப்பதால் திமுக கூட்டணி பற்றி பேசுகிறார்கள். திமுக கூட்டணியில் சிறிய சிராய்ப்பு கூட ஏற்படாது. 

Next Story

“சங்பரிவார்களுக்கு துணை போகிற வகையில் சீமான் பேசுகிறார்” - தொல். திருமாவளவன் எம்.பி

Published on 05/08/2023 | Edited on 05/08/2023

 

Seeman speaks in a way that supports the Sangparivalavalas Tol Thirumavalavan mp

 

மணிப்பூர் வன்முறைச் சம்பவங்களைக் கண்டித்து, நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய சீமான், “பாதிக்கப்பட்ட மக்களுக்காக நாம் பேசுகிறோம். இதில் நமக்கு ஒரு லாபமும் இல்லை. மணிப்பூரிலிருந்து யாரும் நமக்கு ஓட்டு போடப் போவதில்லை. இங்கே இருக்கிற கிறிஸ்தவர்களும் ஓட்டு போடப் போவதில்லை. நாம் நினைச்சுக்கிட்டு இருக்கோம், கிறிஸ்துவத்தையும், இஸ்லாத்தையும் ஏற்றுக் கொண்டவர்கள் தேவனின் பிள்ளைகள் என்று, அது சாத்தானின் பிள்ளைகளாக மாறி பல ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த நாட்டில் நடந்த அநீதி அக்கிரமத்துக்கு பெரிய பொறுப்பேற்க வேண்டியது இஸ்லாமிய கிறித்துவ மக்கள் தான்" என்று கூறியிருந்தார். இது விவாதப் பொருளாக மாற நடிகர் ராஜ்கிரண் தனது கண்டனத்தை தெரிவித்திருந்தார்.

 

நடிகர் ராஜ்கிரண் கருத்து குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “சிஐஏ போராட்டத்துக்கு என்னுடன் உடன் வந்தாரா. முத்தலாக் தடை சட்டத்திற்கு வீதியில் நின்றாரா. அவர் வயதில் பெரியவர், நான் மதத்தைப் பற்றி பேசிவிட்டதாக நினைக்கிறார்” என்று கூறினார். அதனைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய சீமான், “மதத்தின் அடிப்படையில் மனிதனுடைய எண்ணிக்கையை கணக்கிடுவதே தவறு. மதம் மாற்றிக்கொள்ள கூடியது. ஆனால் மொழி மற்றும் இனம் மாற்றிக் கொள்ள முடியாது. இளையராஜா பெரும்பான்மை. யுவன் ஷங்கர் ராஜா சிறுபான்மை. இது மாதிரி உலக பைத்தியக்காரத்தனம் எங்கயாவது இருக்கா. என் கட்சியில் சிறுபான்மை பிரிவு என்பது கிடையாது. இனிமேல் சிறுபான்மை என்று யாராவது கூறினால் செருப்பால் அடிப்பேன்” என்று ஆவேசமாகப் பேசினார். இது தொடர்பான வீடியோ வெளியாகி சமூக வலைத்தளங்களில் சர்ச்சையைக் கிளப்பியது.

 

இந்நிலையில், கடலூர் மாவட்டம் வேப்பூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அலுவலகத்தைத் திறந்து வைத்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “மொழி உணர்வு, இன உணர்வு வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், இந்தியா முழுவதும் இஸ்லாமியர்கள் என்ற உணர்வும், கிறிஸ்தவர்கள் என்ற உணர்வும் மட்டுமே அவர்களுக்கு பாதுகாப்பைத் தரக்கூடியது. அந்த உணர்வை சிதைக்க வேண்டும் என்பது தான் சங்பரிவார்களின் நோக்கம். அதே கருத்தை சீமான் போன்றவர்கள் தமிழ் தேசியம் என்ற பெயரில் சங்பரிவார்களுக்குத் துணை போகிற வகையில் பேசி வருவது அதிர்ச்சியளிக்கிறது. சங்பரிவார்கள் என்ன வெறுப்பு பிரச்சாரத்தை பரப்புகிறார்களோ அதே வெறுப்பு பிரச்சாரத்தை இவர்கள் முன்மொழிகிறார்கள். இது மிகவும் ஆபத்தானது. அவர் தமது நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என்று கூறினார்.