Skip to main content

''ஒரு ரூமுக்குள் உன்னை உட்கார வைக்க பார்த்தார்கள் ஆனால்...''-கலைஞர் பேசியது பற்றி மனம் திறந்த மு.க.ஸ்டாலின்!

Published on 07/09/2021 | Edited on 07/09/2021

 

சிங்காரச் சென்னை 2.0 மற்றும் தூய்மை பணிகளுக்கான 36.52 கோடி ரூபாய் மதிப்பில் 1,684 பேட்டரியால் இயங்கும் மூன்று சக்கர வாகனங்கள் 15 காம்பாக்டர் இயந்திரங்களைத் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி சென்னை ரிப்பன் பில்டிங்கில் இன்று நடைபெற்றது. அதேபோல் கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு தொடங்கி வைத்தார்.

 

அப்பொழுது பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ''இந்த ரிப்பன் கட்டிடத்திற்குள் நுழையும் போது என்னுடைய நிறைவு 1996 க்கு போய்விட்டது. 1996 ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சியில் நடைபெற்ற தேர்தலில் மேயராக என்னைத்  தேர்ந்தெடுத்து பணியாற்றுவதற்குச் சென்னை மாநகர மக்கள் எனக்கு உத்தரவிட்டார்கள். அந்த உத்தரவை ஏற்றுக்கொண்டு பணியாற்றினேன். மேயர் என்றால் ஒரு பெரிய அங்கி, நூறு பவுன் செயின், செவர்லெட் கார் இதுதான் அவர்களின் பணியாக இருந்தது.  அந்த அங்கியைப் போட்டுக்கொண்டு நிகழ்ச்சிகளுக்குப் போவது, விழாக்களுக்குப் போவது, வெளிமாநிலங்களுக்குச் சுற்றுப்பயணம் செய்வது, வெளிநாடுகளுக்குப் போவது. இதுதான் மேயரின் வேலையாக இருந்தது. அதை மாற்றி மக்கள் பணியாற்றுவதுதான் மேயருடைய வேலை என்பதை  மேயராக பொறுப்பேற்ற நான் நிறைவேற்ற வேண்டும் என்ற அடிப்படையில் என்னுடைய கடமையைச் செய்தேன்.

 

இந்த சாலை வழியாகப் போகும்போதெல்லாம் ரிப்பன் பில்டிங்கை பார்த்துவிட்டுத் தான் போவேன். இந்த ரிப்பன் பில்டிங்கை பார்க்கும் போதெல்லாம் நான் 96ல் மேயராக வெற்றி பெற்றது நினைவுக்கு வரும். அப்பொழுது பொறுப்பேற்பதற்காக இதே ரிப்பன் பில்டிங்கில் ஒரு நிகழ்ச்சியை நடத்தினோம். அதற்கு அழைப்பிதழ்கள் தயாராகி, அதைக் கலைஞரிடம் கொண்டுபோய் கொடுத்தோம். கலைஞர் அந்த அழைப்பிதழை உத்து உத்து பார்த்துக் கொண்டிருந்தார். முதல் பக்கத்தில் கலைஞர் எனக்குப் பொன்னாடை  அணிவிப்பதைப் போன்ற புகைப்படமும் கடைசி பக்கத்தில் ரிப்பன் பில்டிங்கின் புகைப்படமும் இருந்தது. அதைப் பார்த்துக்கொண்டே இருந்தார் கலைஞர். 96ல்  வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த பொழுது என்னை அமைச்சராக்க வேண்டும் என்று எல்லாரும் கலைஞரிடம் போய் சொன்னார்கள். ஆனால் கலைஞர் என்னை அமைச்சராக்கவில்லை. நானும் அந்த நேரத்தில் அதை விரும்பவில்லை. ஆனால் நம்முடைய தோழர்கள் போய் கட்டாயப்படுத்தினார்கள். ஆனால் கலைஞர் முடியாது முடியாது எனத் தடுத்துவிட்டார், மறுத்துவிட்டார். ஆனால் அதற்குப் பிறகு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் சென்னையில் நடைபெற்ற மேயர் பொறுப்புக்கான தேர்தலில் நான் போட்டியிட்டு மக்களுடைய வாக்குகளை வாங்கி, மக்கள் வாக்கைப் பெற்ற முதல் மேயராக நான் அன்றைக்குப் பொறுப்பேற்றேன். அந்த பில்டிங்கை பார்த்து அப்போது கலைஞர் சொன்னார், எல்லாரும் சேர்ந்து சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் ஒரு ரூமுக்குள் உன்னை உட்கார வைக்கப் பார்த்தார்கள். ஆனால் நான் உன்னை எவ்வளவு பெரிய பில்டிங்கில் உட்கார வைத்திருக்கிறேன் என்று கலைஞர் பெருமையாகச் சொன்னார்.

 

இது வரலாற்றுச் சிறப்புமிக்க ரிப்பன் மாளிகை கட்டிடம் என்பது உங்கள் எல்லோருக்கும் தெரியும். சட்டமன்ற கூட்டத்தொடர் செப்டம்பர் 13ஆம் தேதி நிறைவடைகிறது. எப்பொழுதுமே சட்டமன்ற கூட்டத்தொடர் நடக்கும் பொழுது எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள நான் ஒத்துக்கொள்வதில்லை. ஏனெனில் சட்டமன்ற பணிகளைத் தொடர வேண்டும் என்பதற்காக அமைச்சராக இருந்த போதிலும் சரி இப்போதும் சரி அதைத்தான் செய்து கொண்டிருக்கிறேன். ஆனால் அமைச்சர் நேரு  சட்டமன்ற கூட்டத்தொடர் நடக்கும் இந்த சமயத்திலேயே இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கிறார். வரவேண்டியது கொடியசைத்து விட்டுப் போக வேண்டியது என்று சொல்லித் தான் அழைத்து வந்தார்கள். ஆனால் இங்கு வந்து பார்த்த பொழுது தான் தெரிகிறது இங்கு ஒரு நிகழ்ச்சியையே  ஏற்பாடு செய்து, மேடை போட்டு என்னைப் பேசவும் வைத்திருக்கிறார். எப்பொழுதுமே நேரு ரொம்ப ஸ்பீடா இருப்பார். அதனால்தான் நான் இருந்த நகராட்சி நிர்வாக பொறுப்பை அவரிடம் கொடுத்து இருக்கிறோம்'' என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திமுக பிரமுகரின் வீடு சூறை; மோட்டார் சைக்கிள் எரிப்பு - திருச்சியில் பரபரப்பு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
beaten on DMK executive house in Trichy

திருச்சி சின்னக்கடை வீதி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(45). இவரது வீட்டில் நேற்று இரவு மர்ம நபர்கள் ஐந்துக்கும் மேற்பட்டோர் நுழைந்து அவரது வீட்டை அடித்து நொறுக்கியதுடன் வெளியில் நின்று இருந்த இவரது மோட்டார் சைக்கிளை தீயிட்டு கொளுத்தினர். நள்ளிரவில் திடீரென   அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததை கண்டதும் மர்ம நபர்கள்  அங்கிருந்து தப்பி சென்றனர். பிறகு அக்கம் பக்கத்தினர்  தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து  எரிந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளின் தீயை அணைத்தனர்.

இருப்பினும் மோட்டார் சைக்கிள் முழுவதும் எரிந்து எலும்பு கூடானது. பின்னர் இது குறித்து சுரேஷ்குமார் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் அவருக்கும் தாராநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஒரு சில நபர்களுக்கும் கோவில் சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. எனவே அவர்கள் தான் செய்திருக்கலாம் என புகாரில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். நள்ளிரவில் மர்ம நபர்கள் வீடு புகுந்து, வீட்டை  அடித்து நொறுக்கி மோட்டார் சைக்கிளை எரித்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியது. சுரேஷ்குமாருக்கும் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் பழக்கடை நடத்தி வரும் நபர் ஒருவருக்கும் கோவில் திருவிழா சம்பந்தமான பிரச்சனை ஒன்று ஏற்கெனவே உள்ளது. அதுமட்டுமின்றி தேர்தல் வேலைகளில் சுரேஷ்குமார் தீவிரமாக ஈடுபட்டதும், சுரேஷ்குமார் திமுக பிரமுகர் என்பதும் குறிப்பிடத்தக்கது

Next Story

மேகதாது விவகாரத்தில் முதல்வர் வாய் திறக்காதது ஏன்? - அன்புமணி

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Anbumani question Why is cm stalin not talking about the Mekedatu issue?

மோசடி செய்தாவது மேகதாது அணையை கட்டுவோம் என சிவக்குமார் கொக்கரிக்கிறார்; ஆனால் மு.க. ஸ்டாலின் வாயை திறக்காதது ஏன்? என பாமக தலைவர் அன்புமணி ராம்தாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணையை நல்ல வழியிலோ, மோசடி செய்தோ கட்டியே தீருவோம்; அதன் மூலம் பெங்களூரு நகரத்திற்கு காவிரி நீரை வழங்குவோம் என்று கர்நாடக துணை முதலமைச்சரும், அம்மாநில காங்கிரஸ் தலைவருமான டி.கே.சிவக்குமார் கூறியிருக்கிறார். ஆனால், அதைக் கண்டிக்கக் கூட முன்வராமல் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைதி காப்பது, காங்கிரஸ் கூட்டணிக்காக தமிழ்நாட்டின் காவிரி ஆற்று உரிமையை அடகு வைத்து விட்டாரோ என்ற ஐயத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

பெங்களூரு (ஊரகம்) மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் தமது சகோதரர் டி.கே.சுரேஷை ஆதரித்து அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்புவாசிகளிடம் பரப்புரை மேற்கொண்ட கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார்,‘‘உங்களுடன் நான் பிசினஸ் டீல் பேச வந்திருக்கிறேன். நீங்கள் எனது சகோதரர் சுரேஷை வெற்றி பெறச் செய்தால், அவர் உங்களுக்கு காவிரியிலிருந்து குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்வார்’’ என்று பேசியிருக்கிறார்.

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து  செய்தியாளர்களிடம் பேசிய டி.கே.சிவக்குமார்,‘‘நல்ல வழியிலோ அல்லது மோசடி செய்தோ மேகதாது அணையைக் கட்டி, அங்கிருந்து பெங்களூரு நகருக்கு குடிநீர் கொண்டு வருவோம் என்பதை அங்குள்ள மக்களுக்கு தெரிவிப்பதற்காகவே அவ்வாறு கூறினேன்’’ என்று விளக்கமளித்துள்ளார். மேகதாது அணை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் சூழலில், மோசடி செய்தாவது  மேகதாது அணையைக் கட்டியே தீருவோம் என்று கர்நாடக துணை முதலமைச்சர் சிவக்குமார் கொக்கரிக்கிறார் என்றால், அணையை கட்டும் விஷயத்தில் எந்த அளவுக்கு தீவிரமாக இருக்கிறார் என்பதை புரிந்து கொள்ளலாம்.

தமிழ்நாடு அனுமதிக்காமல் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது உள்ளிட்ட எந்த அணையையும் கர்நாடகம் கட்ட முடியாது. அதைக் காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பும், உச்சநீதிமன்றமும் அனுமதிக்காது என்பது அனைவரும் அறிந்த செய்தி. ஆனாலும் கூட மேகதாது அணையை கட்டியே தீருவோம் என்று கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவும், துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமாரும் மாறி மாறி கூறி வருகின்றனர். இது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது மட்டுமின்றி, தமிழ்நாட்டிற்கும், கர்நாடகத்திற்கும் இடையிலான நல்லுறவுக்கு வேட்டு வைக்கும் செயலாகும். இதை தமிழர்களால் சகித்துக் கொள்ள முடியாது.

கர்நாடக முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சரின் பேச்சுகள் தமிழ்நாட்டின் நலனுக்கு எதிரானவை என்பது தமிழகத்தின் கடைக்கோடியில் இருக்கும் விவசாயிக்குக் கூட தெரிகிறது. ஆனால், தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இது குறித்து எதுவுமே தெரியாதது தான் வியப்பாகவும், வேதனையாகவும் இருக்கிறது. உலகில் நடக்கும் சாதாரண நிகழ்வுகளுக்கு எல்லாம் கருத்து தெரிவிக்கும் அவர், தமிழ்நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் வராமல் தடுக்கும் வகையில் மேகதாது அணையை கட்டுவோம் என்று கர்நாடக முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் தொடர்ந்து கூறி வரும் நிலையில், அதுகுறித்து எதுவுமே கருத்து தெரிவிக்காமல் வாய் மூடி மவுனியாக இருப்பதன் மர்மம் என்னவென்று தெரியவில்லை.

மேகதாது அணை விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் கனத்த அமைதியை வைத்துப் பார்க்கும் போது, தமிழ்நாடு அரசை அமைதிப் படுத்தி விட்டு, மேகதாது அணையை கட்டுவதைத் தான், மோசடி வழியிலாவது பெங்களூருக்கு தண்ணீர் கொண்டு செல்வது என்று டி.கே.சிவக்குமார் கூறுகிறாரோ? என்ற ஐயம் எழுகிறது. திமுக அரசோ, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களோ இந்த ஐயத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல என்பது தான் வருத்தமளிக்கும் உண்மை.

1970-ஆம் ஆண்டுகளில் கலைஞர் முதலமைச்சராக இருந்த காலத்தில் தான் காவிரி மற்றும் அதன் துணை ஆறுகளின் குறுக்கே 4 அணைகள் கட்டப்பட்டன. ஆனாலும், அவரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக  தமிழகத்தின் உரிமைகளை தாரைவார்த்து காவிரியின் குறுக்கே அணைகள் கட்டப்படுவதை கண்டுகொள்ளாமல் இருந்தார். 2008-ஆம் ஆண்டு கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரசுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக  ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகளை அப்போதைய முதலமைச்சர் கலைஞர்  நிறுத்தி வைத்தார். அவர் வழியில் வந்த மு.க.ஸ்டாலின், இப்போது மேகதாது அணை கட்டும் விவகாரத்தில், கர்நாடகத்துக்கு ஆதரவாக தமிழகத்தின் உரிமைக்காக குரல் கொடுக்காமல் அமைதியாக இருக்கிறார்.

எப்போதெல்லாம் மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கிறதோ, எப்போதெல்லாம் காங்கிரஸ் கட்சியுடன்  கூட்டணியில் இருக்கிறதோ, அப்போதெல்லாம் தமிழ்நாட்டின் காவிரி உரிமைகளை கர்நாடகத்திற்கு தாரை வார்ப்பது திமுகவின் வழக்கம். இப்போதும் காங்கிரஸ் கட்சியுடனான உறவுக்காக மேகதாது அணை கட்டும் விவகாரத்தில்  தமிழ்நாட்டின் உரிமைகளை திமுக அரசு அடகு வைத்து விடக் கூடாது.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டப்பட்டால், அதன்பிறகு காவிரி பாசன மாவட்டங்கள் பாலைவனமாகி விடும். அதை உணர்ந்து மேகதாது விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமைகளைக் காக்க வேண்டும். நல்ல வழியிலோ, மோசடி வழியிலோ மேகதாது அணையை கட்டியே தீருவோம் என்று கூறி வரும் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், முதலமைச்சர் சித்தராமையா ஆகியோரை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையாக கண்டிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.