பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை மற்றும் ஜிஎஸ்டி வரி அதிகரிப்பை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு முழுவதும் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. டெல்லியில் காங்கிரஸ் கட்சியினர் குடியரசுத் தலைவர் மாளிகையை நோக்கி பேரணி நடத்தத் திட்டமிட்டிருந்த நிலையில், ராகுல் காந்தி தலைமையில் அந்தப் பேரணி நடந்தது. அதேபோல் தமிழகத்திலும் பல இடங்களில் போராட்டம் நடைபெற்றது.
இந்நிலையில் சென்னை சைதாப்பேட்டை, சின்னமலை ராஜீவ் காந்தி சிலை அருகே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் தலைவர்கள் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், கே.வீ.தங்கபாலு மற்றும் மாவட்ட தலைவர் எம்.ஏ.முத்தழகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ்.அழகிரி, 'பாலுக்கு, அரிசிக்கு, கோதுமைக்கு வரியை அரசாங்கம் நியமித்திருக்கிறது. எங்கள் ஆட்சி காலத்தில் இந்தியா முழுவதும் இலவசமாக அரிசி வழங்கினோம். ஒரு ரூபாய், இரண்டு ரூபாய்க்கு அரிசி, கோதுமை கொடுத்தோம். ஆனால் இந்த அரசாங்கம் அரிசிக்கு வரி விதித்திருப்பதால் கிலோவிற்கு 3 ரூபாய் அதிகமாகும். இது ஏழை மக்களை வஞ்சிக்கிற ஒரு மோசமான வரி எனவே இதை எதிர்க்கிறோம். நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் பேசும்பொழுது எங்களது ஜிஎஸ்டி வரியால் ஏழைகள் பாதிக்கப்படமாட்டார்கள் என்று சொன்னார். அந்தக்காலத்தில் கொடுங்கோல் ஆட்சி என்று சொல்வார்கள் அவர்கள் கூட இப்படியெல்லாம் வரி விதிக்கவில்லை. காலப்போக்கில் இந்த பாலுக்கு மட்டுமல்ல தாய் பாலுக்கும் வரி விதிக்கும் ஒரு மோசமான சூழலை உருவாக்கி வருகிறார்கள். எனவே இதனை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்'' என்றார்.