
அரசுப் பள்ளி வளாகத்தில் ஆசிரியை ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தவர் ரமணி (வயது 26). இவரை சின்னமணி என்ற கிராமத்தைச் சேர்ந்த மதன்குமார் என்பவர் குத்தி கொலை செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது. மதன்குமார் தனது கையில் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஆசிரியை ரமணியின் கழுத்தில் குத்தி கொலை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆசிரியை ரமணியை மதன் குமார் ஒரு தலையாக காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. ரமணியின் பெற்றோர் பெண் தர மறுத்ததால் ஆத்திரத்தில் மதன் இத்தகைய வெறிச்செயலில் ஈடுபட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. ரத்த வெள்ளத்தில் கிடந்த ரமணியை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் மதன்குமாரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.