Skip to main content

இருப்பது இரண்டு வாரங்கள்... தேவையோ ரூ. 4 கோடி... குழந்தையின் உயிர்காக்க பெற்றோரின் பாசப்போராட்டம்...

Published on 21/10/2021 | Edited on 21/10/2021

 

thanjavur couple raising funds to save save their daughter bharathi from Spinal muscular atrophy

 

முதுகு தண்டுவட தசை நார் சிதைவு (SMA) நோயால் பாதிக்கப்பட்டுள்ள தங்களது 23 மாத பச்சிளம் குழந்தையின் உயிரைக் காக்கப் போராடி வருகின்றனர் தஞ்சாவூரைச் சேர்ந்த ஜெகதீஷ், எழிலரசி தம்பதியினர். 

 

தஞ்சாவூர், நாஞ்சிக்கோட்டை சாலை சீராஜ்பூர் நகரைச் சேர்ந்த ஜெகதீஷ், எழிலரசி ஆகியோரின் மகள் பாரதி. பிறந்து இரண்டு ஆண்டுகள் கூட ஆகாத இப்பச்சிளம் குழந்தையின் உயிரை மெல்லக் குடித்து வருகிறது SMA எனும் கொடிய நோய். 

 

பேசுவது, நடப்பது, மூச்சு விடுவது மற்றும் விழுங்குதல் போன்ற அடிப்படை மனித இயக்கங்களை, மூளை மற்றும் முதுகெலும்பு பகுதிகளில் அமைந்திருக்கும்  நரம்பு செல்களே கட்டுப்படுத்துகின்றன. இந்த நரம்பு செல்களின் செயல்பாடுகளைப் பாதித்து மனிதனின் அடிப்படை இயக்கங்களையே மேற்கொள்ள முடியாமல் செய்து, உயிரிழப்பு வரை கொண்டுவிட்டுவிடக் கூடியது இந்த நோய். 

 

இப்படிப்பட்ட இந்த கொடிய நோயினால் பாதிக்கப்பட்டுள்ள தங்களது குழந்தையைக் காப்பாற்ற பண உதவிக்காகப் பொதுமக்களை நாடியுள்ளனர் ஜெகதீஷ், எழிலரசி தம்பதியினர். பிறந்தபோது ஆரோக்கியமாகக் காணப்பட்ட இவர்களது குழந்தை பாரதி, இரண்டு வயதை நெருங்கும்போது தானாக எழுந்து நிற்க முடியாமல் இருந்துள்ளது. இதனையடுத்து குழந்தைக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டதில், முதுகு தண்டுவட தசை நார் சிதைவு நோயால் குழந்தை பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. 'ZOLGENSMA', என்ற ஊசி மருந்து செலுத்தினால் மட்டுமே இந்நோயின் பிடியிலிருந்து சிறுமியைக் காக்க முடியும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஆனால், இந்த ஒற்றை மருந்தின் விலை 16 கோடி ரூபாய் என அறிந்து, அதிர்ச்சியடைந்த குழந்தை பாரதியின் பெற்றோர், சிகிச்சைக்குத் தேவையான போதிய பணத்தைத் திரட்ட முடியாமல் கடைசி நம்பிக்கையாகப் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். 

 

06.11.2021 அன்று தனது இரண்டாவது பிறந்தநாளைக் கொண்டாடவேண்டிய குழந்தை பாரதிக்கு, அதற்குள்ளாக அந்த ஊசியைச் செலுத்த வேண்டும் என்றார் நம்முடன் பேசிய குழந்தையின் தாய் எழிலரசி. மேலும், "சிறுதுளி பெருவெள்ளம் என்ற உதவியவர்களால் இதுவரை (20.10.2021) 12 கோடி கிடைத்துள்ளது. மீதமுள்ள 4 கோடியை அடைய நீங்களும் உங்களின் நண்பர்களும் சிறு உதவி செய்தால் கூட ( 4 லட்சம் பேர் x 100 ரூபாய்) அவளின் இரண்டாவது பிறந்தநாள் 06.11.2021க்குள் இந்த ஊசியைச் செலுத்தி அவளின் உயிரைக் காப்பாற்றி விடலாம்" எனக் கூறி மக்கள் மீதான நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள் குழந்தையின் பெற்றோர் ஜெகதீஷ் மற்றும் எழிலரசி.

 

பெற்றோரின் தொடர்பு எண்கள்...
ஜெகதீஷ் - 9791793435
எழிலரசி - 9597584987

நேரடியாக பண உதவி செய்ய வங்கி கணக்கு விவரம்..
R. Jagadeesh
Account No. 1147155000168550
IFSC. KVBL0001147
Bank. Karur vysya bank

G pay, phone pe & paytm 9791793435

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார். 

Next Story

சிகிச்சையின் போது இளைஞர் பலி; விசாரணைக் குழு அமைக்க முடிவு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Youth treatment incident decision to set up an investigation team

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு நேற்று (24.04.2024) ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணமடைந்ததை தமிழக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உறுதி செய்துள்ளார். மேலும் இளைஞர் உயிரிழந்தது குறித்து குழு அமைத்து விசாரணை செய்யப்படும் என இளைஞரின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன் உறுதியளித்துள்ளார். அதே சமயம் மகனை இழந்த பெற்றோருக்கு தனது ஆறுதலை அமைச்சர்  மா. சுப்ரமணியன் தெரிவித்தார். இந்த விசாரணைக் குழு விரைவில் இளைஞரின் மரணம் குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.