Skip to main content

இரண்டாவது கணவரை கொலைச் செய்து வீட்டில் புதைத்த மனைவி உட்பட மூன்று பேர் கைது!

Published on 18/04/2021 | Edited on 18/04/2021

 

tenkasi district husband incident wife including three persons arrested police

 

தென்காசியை அடுத்த குத்துக்கல் வலசைப் பகுதியைச் சேர்ந்தவர் தங்கராஜ். இவரின் மனைவி அபிராமி. இவர் அதே பகுதியில் ப்யூட்டி பார்லர் நடத்தி வருகிறார். கணவர் தங்கராஜ் நான்கு வருடங்களுக்கு முன்பு சில பிரச்சினை காரணமாக விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டதால், தன் இரண்டு பிள்ளைகளுடன் அபிராமி தனியாக வசித்து வந்தார். இதனிடையே, மதுரைச் சாலையிலுள்ள ஒர்க் ஷாப் ஒன்றில் பணிபுரிந்த தென்காசியைச் சேர்ந்த காளிராஜ் என்பவருடன் அபிராமிக்குப் பழக்கம் ஏற்பட்டது. 

 

இதனையறிந்த காளிராஜியின் பெற்றோர் அவரை கண்டித்ததில், காளிராஜூவிற்கு அபிராமியுடனான தொடர்பை விட மனமில்லை. இதன் பின் 2017- ஆம் ஆண்டு அபிராமியைத் திருமணம் செய்து மனைவியாக்கிக் கொண்ட காளிராஜ், அவரோடு வாழ்ந்து வந்தார். இந்தச் சூழலில் காளிராஜ் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகக் காணவில்லை. அது குறித்த புகாரும் அப்போதைய நிலையில் காவல்நிலையம் வரை போகவில்லை. ஆனாலும் இந்தத் தகவல் அரசல் புரசலாகப் காவல்துறை வரை போகவே, அவர்கள் அபிராமியிடம் விசாரித்த போது அவர் வெளியூருக்கு வேலைக்குச் சென்றிருக்கிறார் என்று கூறியுள்ளார். இதனால் காவல்துறையினருக்கும், அக்கம் பக்கத்தினருக்கும் சந்தேகம் வரவில்லை.

tenkasi district husband incident wife including three persons arrested police

 

வெள்ளரிக்காய் பழுக்காமலிருக்க பூன் போட்டாலும் முடிகிற காரியமா? இயல்பாக வெடித்துக் கிளம்பத்தானே செய்யும். அதுதான் அபிராமி விஷயத்திலும். இந்நிலையில் அபிராமிக்கும் குத்துக்கல் வலசையிலுள்ள மாரிமுத்து என்பவருக்கும் தொடர்பு ஏற்பட்டு, தகாத உறவாக மாறியது பற்றிய தகவல்கள் அந்தப் பகுதியிலிருந்தே காவல்துறையின் தனிப்பிரிவு காவல்துறையினருக்கு கிடைத்தது. அதே சமயம் காளிராஜின் தாய் உமாவும் தன்மகனைக் கண்டுபிடித்துத் தரும்படி காவல்துறையினரிடம் புகார் அளித்தார். அதைத் தொடர்ந்து, அபிராமி, மாரிமுத்து ஆகிய இருவரையும் அழைத்துச் சென்ற காவல்துறையினர், தீவிர விசாரணை நடத்தினர்.

 

விசாரணையில், தன்னை விட 10 வயது குறைந்த காளிராஜூடன் அபிராமி வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்த போதே அது கசந்திருக்கிறது. அதன்பின் அபிராமிக்கு மாரிமுத்துவுடன் பழக்கம் ஏற்பட்டு தகாத உறவாக மாறியது. இது காளிராஜூக்குத் தெரியவர, பிரச்சினையானது. அவர் இருந்தால் தனக்கு இடையூறு எனத் திட்டமிட்ட அபிராமி, கடந்த 2018- ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் காளிராஜூவுக்கு மயக்க மருந்து கொடுக்க, அவர் தூங்கியபோது மாரிமுத்துவை அபிராமி அழைத்து வந்துருக்கிறார். பின்பு மாரிமுத்து, அபிராமி ஆகிய இருவரும் காளிராஜின் கழுத்தை நெறித்தும், கத்தியால் நெஞ்சைக் குத்தியும் கொலை செய்திருக்கிறார்கள்.

tenkasi district husband incident wife including three persons arrested police

 

இந்த விஷயம் அபிராமியின் வீட்டில் அன்றாடம் பால் ஊற்றி வரும் பால்காரர் முருகேசன் என்பவருக்குத் தெரிந்திருக்கிறது. அவரிடம் உடலை மறைக்க உதவிக் கேட்டதில் மறுத்த அவரோ வீட்டில் புதையுங்கள் என்று சொல்லிவிட்டுக் கிளம்பியிருக்கிறார். அபிராமியும், மாரிமுத்துவும் சேர்ந்தே காளிராஜுவின் உடலை வீட்டில் புதைத்துவிட்டு ஒன்று மறியாதவர்கள் போல் நாடகமாடியுள்ளனர். பிணத்தின் மீதே இரண்டரை வருடம் வாழ்க்கை நடத்தியுள்ளனர்.

 

இதையடுத்து, அவர்கள் குறிப்பிட்ட இடத்தைத் தாசில்தார் முன்னிலையில் தோண்டப்பட்டபோது மண்டை ஓடு மற்றும் எழும்புக்கூடுகள் கிடைத்துள்ளன. அதன் பின்னர் அபிராமி, மாரிமுத்து மற்றும் கொலைச் சம்பவம் என்று தெரிந்தும் தகவலை மறைத்த பால்காரர் முருகேசன் ஆகிய மூன்று பேரையும் தென்காசி காவல்துறையினர் கைது செய்து, அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

இந்த சம்பவம் தென்காசி மாவட்டத்தையே அதிர வைத்திருக்கிறது. 


 

சார்ந்த செய்திகள்

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

18 மாவோயிஸ்டுகள் பலி; சத்தீஸ்கரில் பரபரப்பு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
nn

சத்தீஸ்கர் மாநிலத்தில் 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சத்தீஸ்கர் மாநிலம் கன்கர் மாவட்டத்தில் நக்சலைட்டுகள் மற்றும் பாதுகாப்பு படைகளுக்கு இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இதில் மொத்தமாக 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்தத் தாக்குதலில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த மூன்று வீரர்கள் படுகாயம் அடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

மொத்தமாக 18 மாவோயிஸ்டுகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அவர்கள் பயன்படுத்திய துப்பாக்கிகள், மெஷின் கன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒரே ஒரு எல்லை பாதுகாப்பு வீரரின் காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து இருப்பதாகவும் ஆனால் உயிருக்கு எந்தவிதமான சேதம் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் நேரத்திற்கு முன்பாக நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தில் 18 மாவோயிஸ்டுகள் கொலை செய்யப்பட்டிருப்பது முக்கிய சம்பவமாக பார்க்கப்படுகிறது.  நக்சலைட்டுகள் ஆதிக்கம்  அதிகம் இருக்கும் சத்தீஸ்கரில் இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.