Skip to main content

ஓ.பி.எஸ் மகன் எம்.பி. ரவீந்திரநாத்தை கைது செய்ய கோரி போராட்டம்!

Published on 04/10/2022 | Edited on 04/10/2022

 

Teni People demand to arrest OPS son   Rabindranath M.P.

 

பெரியகுளம் அருகே உள்ள சொர்க்கம் கோம்பை வனப்பகுதியில் ஓ.பி.எஸ் மகனான எம்.பி. ரவீந்திரநாத்க்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இத்தோட்டத்தின் சோலார் மின்வெளியில் சிக்கி சிறுத்தை ஒன்று சில தினங்களுக்கு முன்பு உயிர் இழந்தது. இந்தச் சம்பவம் தற்போது சர்ச்சையாகி உள்ளது. சம்பவம் தொடர்பாக வனத்துறை அலுவலர்கள், ரவீந்திரநாத் தோட்டத்தில் ஆட்டுக்கிடை அமைத்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த அலெக்ஸ் பாண்டியன் என்பவரை கடுமையாக தாக்கி அவரை கைது செய்துள்ளனர். மேலும் ரவீந்திரநாத் தோட்டத்தில் பணியாற்றும் மேலாளர்களான ராஜவேல், தங்கவேல் ஆகிய இருவரையும் வனத்துறையினர் கைது செய்துள்ளனர். 

 

இந்த நிலையில், வனத்துறையினர் தோட்டத்தின் உரிமையாளரான ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத் எம்.பி. மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் அவரின் தோட்ட தொழிலாளர்களை கைது செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதை கண்டித்து தமிழ்நாடு கால்நடை வளர்ப்பவர்கள் சங்கத்தின் சார்பாக தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வனத்துறையினர்  தேனி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் மீதும் வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்றும், ஆட்டுக்கிடை அமைத்த அலெக்ஸ் பாண்டியன் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெறக்கூறியும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

Teni People demand to arrest OPS son  Rabindranath M.P.

 

இது சம்பந்தமாக பத்திரிகையாளர்களிடம் வழக்கறிஞர் சரவணன் பேசும்போது, “வனத் துறையினர் தங்களை தற்காத்துக் கொள்வதற்காக அலெக்ஸ் பாண்டியன் மீது பொய் வழக்கு போட்டுள்ளனர். சம்பந்தப்பட்ட தோட்டத்தின் உரிமையாளரான ஓ.பி.எஸ் மகன் எம்.பி. ரவீந்திரநாத் மீது வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்ய வேண்டும். பொய் வழக்கு போட்ட வனத்துறை அலுவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அ.தி.மு.க. கூட்டணி; தே.மு.தி.க.வுக்கு கூடுதல் தொகுதி ஒதுக்கீடு? 

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
ADMK Alliance; Allotment of additional seats for DMDk

பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று முன்தினம் (16.03.2024) நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உள்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தன. அதன்படி, அ.தி.மு.க.வுடன், தே.மு.தி.க. இரண்டு கட்டங்களாகப் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், அ.தி.மு.க, தேமுதிக இடையே மார்ச் 16 ஆம் தேதி 3 ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையின் போது, அ.தி.மு.க. கூட்டணியில் 7 மக்களவைத் தொகுதிகளிலும் ஒரு மாநிலங்களவை இடத்துக்கும் போட்டியிட தேமுதிக விருப்பம் தெரிவித்ததாகக் கூறப்பட்டது. அப்போது 4 தொகுதிகள் வரை ஒதுக்க அ.தி.மு.க. சம்மதம் தெரிவித்திருந்திருந்தது.

அதே சமயம் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது தொடர்பாக பா.ம.க. தலைமை நிர்வாகக் குழு கூட்டம், உயர்மட்டக் குழு கூட்டம் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் தைலாபுரத்தில் இன்று (18.03.2024) நடைபெற்றது. அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க பா.ம.க. நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், கூட்டணி விவகாரத்தில் திடீர் திருப்பமாக இந்த கூட்டத்தில் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வுடன் பா.ம.க. கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

ADMK Alliance; Allotment of additional seats for DMDk

இந்நிலையில் அ.தி.மு.க. கூட்டணியில் பாமக இடம் பெறாததால், தே.மு.தி.க.விற்கு கூடுதல் தொகுதிகளை ஒதுக்க அ.தி.மு.க. முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக கூட்டணியில் பா.ம.க. இல்லாததால் தற்போது 6 முதல் 7 மக்களவைத் தொகுதிகளைக் கேட்க உள்ளதாகவும் தேமுதிக சார்பாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாகத் தமிழகத்தின் வட மாவட்டங்களில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. சார்பில் போட்டியிட ஒதுக்கக் கோரும் சில தொகுதிகளில் தே.மு.தி.க.வும் போட்டியிட விருப்பம் தெரிவித்து இருந்ததால் அ.தி.மு.க. - பா.ம.க. - பா.ஜ.க. கூட்டணியை இறுதி செய்வதில் தாமதம் ஏற்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story

திடீர் திருப்பம்; கூட்டணிக்கான ரூட்டை மாற்றிய பா.ம.க.?

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
sudden turn pmk has changed the route for the alliance

தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உள்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர்கள் அறிவிப்பு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இதற்கிடையே விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்துள்ள தைலாபுரத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் உடன் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் சந்தித்துப் பேசியதாகக் கூறப்பட்டது. இந்த சந்திப்பின் போது அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. சார்பில் 10 மக்களவைத் தொகுதிகள் கேட்கப்பட்டதாகவும், அதற்கு ஆரணி, சிதம்பரம், கடலூர், தருமபுரி உள்ளிட்ட 6 மக்களவைத் தொகுதிகளை பா.ம.க.வுக்கு ஒதுக்கீடு செய்ய அ.தி.மு.க. முன்வந்துள்ளதாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இதனையடுத்து தமிழகத்தின் வட மாவட்டங்களில் பா.ம.க. சார்பில் போட்டியிட ஒதுக்கக் கோரும் சில தொகுதிகளை வழங்க அ.தி.மு.க. மறுத்ததாகவும் தகவல் வெளியாகி இருந்தது. இதனால் அ.தி.மு.க. கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வந்ததால் பா.ஜ.க.வுடன் பா.ம.க. பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் கூறப்பட்டது. அதே சமயம் கூட்டணி குறித்து முடிவெடுக்க தைலாபுரத்தில் பா.ம.க. மாவட்டச் செயலாளர்கள் அவசர கூட்டம் கடந்த 15 ஆம் தேதி (15.03.2024) நடைபெற இருந்த நிலையில், மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. மேலும் அ.தி.மு.க.வுடன் பா.ம.க. கூட்டணி குறித்து பேச்சுவார்த்தையை வெற்றிகரமாக முடித்துவிட்டதாகக் கூறப்பட்டது. அதன்படி மயிலாடுதுறை, கடலூர், தென் சென்னை, சிதம்பரம், தர்மபுரி மற்றும் சேலம் என முக்கிய தொகுதிகளுடன் ஏழு பிளஸ் ஒன் (மாநிலங்களவை பதவி) என முடிவாக உள்ளதாகச் சொல்லப்பட்டது.

அதனைத் தொடர்ந்து பா.ம.க. விரும்பும் 7 மக்களவைத் தொகுதிகளையும் ஒரு ராஜ்ய சபா பதவியையும் ஒதுக்க அ.தி.மு.க. முன்வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் முகாம் இல்லத்தில் பா.ம.க. எம்.எல்..ஏ அருள் இ.பி.எஸ்சை திடீரென்று நேற்று சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின் போது தேர்தல் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது எனத் தகவல் வெளியாகி இருந்தது. முன்னதாக கூட்டணி குறித்து எடப்பாடி பழனிசாமியை பாமக எம்.எல்.ஏ.க்கள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி இருந்தனர்.

sudden turn pmk has changed the route for the alliance

இத்தகைய சூழலில், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது தொடர்பாக பா.ம.க. தலைமை நிர்வாகக் குழு கூட்டம், உயர்மட்டக் குழு கூட்டம் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் தைலாபுரத்தில் இன்று (18.03.2024) நடைபெற்றது. அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க பா.ம.க. நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், கூட்டணி விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வுடன் பாமக கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கூட்டத்தின் போது பிரதமர் மோடியை மீண்டும் பிரதமராக்க பா.ம.க. முக்கிய பங்காற்றும் என்று அன்புமணி பேசியதாகவும் கூறப்படுகிறது.