![Tear gas in the capital; Protest by climbing the cell phone tower in Ariyalur](http://image.nakkheeran.in/cdn/farfuture/TCLkTTuNsJXhxO3nLP0R4ij47oyGsGXMN9ayDfFw2_Q/1708579184/sites/default/files/inline-images/a4957_0.jpg)
தலைநகர் டெல்லியை நோக்கி, 12 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி, பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த விவசாயிகள் பேரணியாகச் செல்கின்றனர். விவசாயிகளுக்கும் ஹரியானா மாநில காவல்துறையினருக்கும் இடையே பஞ்சாப், ஹரியானா எல்லைப் பகுதிகளில் கடும் மோதல் நீடித்துவருகிறது.பஞ்சாப் ஹரியானா எல்லையான ஷாம்பு எல்லைப் பகுதியில், ஏற்கெனவே விவசாயிகள் மீது தொடர்ந்து காவல்துறையினர் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசி வருகின்றனர்.
பஞ்சாப் - ஹரியானாவின் மற்றொரு எல்லையான காணுரியில், நேற்று (21-ஆம் தேதி) காலை முதல் தொடர்ந்து கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசும் ஹரியானா போலீசார், விவசாயிகளைக் கலைத்து வருகின்றனர். காவல்துறையினரால் வீசப்பட்ட கண்ணீர் புகைக் குண்டு வெடித்து, பஞ்சாப் மாநிலம் பதிண்டாவைச் சேர்ந்த சுப்கரன் சிங் (வயது 24) என்னும் இளம் விவசாயி படுகாயமடைந்தார். அவரை சக விவசாயிகள் மருத்துவமனைக்கு தூக்கி சென்று பாட்டியாவிலுள்ள ராஜிந்திரா அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதனால், நடப்பாண்டில் விவசாயப் போராட்ட களத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது.
![Tear gas in the capital; Protest by climbing the cell phone tower in Ariyalur](http://image.nakkheeran.in/cdn/farfuture/T6szeZZh5jqihp_RGD8ofXDuE3mewnJKsVsm1UgCiCo/1708579356/sites/default/files/inline-images/A4970.jpg)
இந்நிலையில் இதனை கண்டித்து தமிழகத்தில் திருமானூரில் விவசாயிகள் செல்போன் டவர் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரியலூர் மாவட்டம் திருமானூர் அடுத்துள்ள சேனாபதி கிராமத்தில் அமைந்துள்ள செல்போன் டவர் ஏறிய விவசாயிகள் தங்க சண்முகசுந்தரம், வேலுமணி ஆகிய இருவர் செல்போன் கோபுரத்தின் மேல் ஏறி, விவசாயி சுடப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.