Skip to main content

ஆசிரியையின் கணவர் திடீர் மரணம் - கொலையா? தற்கொலையா? மாறுபட்ட தகவல்களால் போலீசார் குழப்பம்!

Published on 17/08/2022 | Edited on 17/08/2022

 

teacher husband incident police investigation in salem district police investigation

 

 

கெங்கவல்லி அருகே தனியார் பள்ளி ஆசிரியையின் கணவர் சந்தேகத்திற்குரிய வகையில் இறந்து கிடந்தார். அவரை மர்ம நபர்கள் கொலை செய்திருக்கலாம் என்றும், அவரே கை, கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றும் மாறுபட்ட தகவல்கள் கிடைத்ததால் காவல்துறையினர் குழப்பம் அடைந்துள்ளனர்.

 

சேலம் மாவட்டம், கெங்கவல்லி தெற்கு வீதியைச் சேர்ந்தவர் மோகன். ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலரான இவருடைய மகன் முருகன் என்கிற சதீஷ் (வயது 42). இவருடைய மனைவி வனிதா (வயது 30). இவர்களுக்கு 8 வயதில் ஒரு மகன் இருக்கிறான். 

 

வனிதா, தனியார் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். அதே பள்ளியில்தான் அவர்களின் மகனும் படிக்கின்றான். திருமணம் ஆன நாளில் இருந்தே முருகன் எங்கேயும் வேலைக்குச் செல்லாமல் ஊர் சுற்றி வந்துள்ளார். இதனால் வனிதாதான் குடும்பச் செலவுகளை கவனித்து வந்துள்ளார். 

 

முருகனுக்கு கஞ்சா மற்றும் மதுப்பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் ஊரில் பலரிடம் கடன் வாங்கியுள்ளார். நாளடைவில் கடன் கொடுத்தவர்கள் பணத்தைத் திருப்பிக் கேட்டு அவருக்கு நெருக்கடி கொடுத்துள்ளனர். 

 

இதனால் அவர் தற்போது குடியிருந்து வரும் வீட்டை விற்று, அதன்மூலம் கிடைக்கும் பணத்தைக் கொண்டு கடனை அடைத்து விடலாம் என முடிவு செய்துள்ளார். இதற்காக அவர், அமுதா என்பவரிடம் வீட்டை விற்க முடிவு செய்துள்ளார். 

 

இதற்காக அமுதா, அவருக்கு வங்கி கணக்கு மூலம் 7 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார். முருகன், வங்கியில் 3 லட்சம் ரூபாய் கடன் பெற்றிருந்ததால், அதற்கான தொகையையும் கொடுத்திருந்தார். இந்தப் பணத்தைக் கொண்டு அவர் யார் யாரிடம் கடன் வாங்கியிருந்தாரோ அவர்களுக்கு திருப்பிக் கொடுத்து வந்தார். 

 

இந்நிலையில், செவ்வாய் கிழமை (ஆக. 16), வழக்கம்போல் பள்ளிக்குச் சென்றிருந்த வனிதாவும், அவருடைய மகனும் மாலையில் வீடு திரும்பினர். வீட்டிற்கு வந்து பார்த்தபோது அங்கு, முருகன் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்தார். 

 

கை, கால்களில் கத்தியால் வெட்டப்பட்டதற்கான காயங்கள் இருந்தன. சடலத்தைப் பார்த்து வனிதாவும், மகனும் கதறி அழுதனர். இதுகுறித்து கெங்கவல்லி காவல்நிலையத்தில் வனிதா புகார் அளித்தார். 

 

காவல்துறையினர் சடலத்தைக் கைப்பற்றி, உடற்கூராய்வுக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

 

வீடு விற்பது தொடர்பாக அமுதா என்பவர் வங்கி கணக்கு மூலம் செலுத்தியிருந்த பணத்தை, கடன்காரர்களுக்கு கொடுப்பதற்காக முருகன் பணத்தை எடுத்து வந்துள்ளார். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் அவரை வீடு வரை பின்தொடர்ந்து வந்து, கொலை செய்துவிட்டு, வீட்டிலிருந்த பணத்தை திருடிச் சென்றிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகித்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

யோகா மாஸ்டர் அடித்து கொலை; விசாரணையில் பகீர்!

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
Transgressive yoga master beaten to ; Body recovery in a ruined well

கராத்தே மாஸ்டர் காணாமல் போன சம்பவத்தில், கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டது  சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னை கிழக்கு கடற்கரை சாலை பகுதியிலுள்ள கானத்தூர் ரெட்டி குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் லோகநாதன். இவர் அந்த பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு கராத்தே மாஸ்டராகவும், யோகா மாஸ்டராகவும் பணியாற்றி வந்தார். இவரிடம் பல்வேறு குழந்தைகள் கராத்தே மற்றும் யோகா பயிற்சிகள் எடுத்து வந்த நிலையில் கராத்தே மாஸ்டர் லோகநாதனை கடந்த 13ஆம் தேதியிலிருந்து காணவில்லை என அவரது மகன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வந்ததோடு காணாமல்போன லோகநாதன் தேடி வந்தனர். லோகநாதன் வைத்திருந்த செல்போனில் அவருடன் இறுதியாக பேசியது யார் என்பது தொடர்பாக போலீசார் விசாரணை செய்தனர். விசாரணையில் ஓஎம்ஆர் சாலையில் உள்ள நாவலூர் காரனை பகுதியைச் சேர்ந்த சுரேஷ் -கஸ்தூரி தம்பதியிடம் செல்போனில் பேசியது தெரியவந்தது.

சந்தேகத்தின் அடிப்படையில் இரண்டு பேரையும் காவல் நிலையத்திற்கு வரவழைத்து விசாரித்த விசாரித்தபோது யோகா மாஸ்டர் லோகநாதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட பகீர் தகவல் வெளிவந்தது. செம்மஞ்சேரி பூங்காவில் வைத்து லோகநாதன் பள்ளி மாணவ மாணவிகளுக்கு கராத்தே, யோகா பயிற்சிகளை  கொடுத்து வந்த நிலையில் சுரேஷ்-கஸ்தூரி தம்பதியின் 11 வயது மகன் லோகநாதனிடம் பயிற்சிக்காக சேர்க்கப்பட்டு பயிற்சி எடுத்து வந்தான். அதே நேரம் கஸ்தூரியும் அவரிடம் யோகா பயிற்சி மேற்கொண்டு வந்துள்ளார்.

Transgressive yoga master beaten to ; Body recovery in a ruined well

இந்நிலையில் கஸ்தூரியிடம் லோகநாதன் பாலியல் ரீதியாக தொல்லையில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனால் லோகநாதனின் பயிற்சி வகுப்புக்கு செல்வதை கஸ்தூரி தவிர்த்து வந்துள்ளார். ஆனால் இருப்பினும் மொபைல் மூலம் கஸ்தூரியை தொடர்பு கொண்ட லோகநாதன் யோகா வகுப்புக்கு வரும்படி தொடர்ந்து வற்புறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கஸ்தூரி இதுகுறித்து கணவரிடம் தெரிவிக்க இருவரும் சேர்ந்து கராத்தே மாஸ்டர் லோகநாதன் கொலை செய்ய திட்டமிட்டனர்.

அவரை மொபைல் மூலம் தொடர்புகொண்டு காரனை பகுதிக்கு வரவழைத்து அடித்து கொலை செய்ததோடு அங்குள்ள பாழடைந்த கிணற்றில் உடலை வீசிவிட்டுச் சென்றது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் கிணற்றில் இருந்த லோகநாதனின் உடலை கயிறு மூலம் கட்டி வெளியே கொண்டு வந்தனர். யோகா மாஸ்டர் அடித்து கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு; 70 பேர் உயிரிழப்பு

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
 Indiscriminate shooting; 70 people lost their lives

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 70 பேர் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த தாக்குதல் சம்பவத்திற்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு  பொறுப்பேற்றுள்ளது. உலக அளவில் பல்வேறு நாடுகளில் இருந்து இந்த தாக்குதல் சம்பவத்திற்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள இசை நிகழ்ச்சி அரங்கில் எதிர்பாராதவிதமாக பயங்கர ஆயுதங்களுடன் நுழைந்த கும்பல் அங்கிருந்த மக்களை நோக்கி துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டது. இந்த கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 70 பேர் உயிரிழந்துள்ளனர். 140க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இதற்கு உலக தலைவர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில், பிரதமர் மோடி எக்ஸ் சமூக வலைதளத்தின் வாயிலாக இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். 'இந்த துயரமான நேரத்தில் ரஷ்ய கூட்டமைப்பின் அரசாங்கத்திற்கு இந்திய அரசும், இந்திய மக்களும் துணை நிற்போம்' எனத் தெரிவித்துள்ளார்.