Skip to main content

40 பேரை ஏமாற்றிய ஆசிரியர்; இளம்பெண் கொடுத்த புகாரில் கைது! 

Published on 25/10/2022 | Edited on 25/10/2022

 

Teacher arrested by police who fraudulent 95 lakhs

 

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூரைச் சேர்ந்த தங்கமயில் என்பவரின் தந்தை கலியமூர்த்தி. இவர் திருவெண்ணைநல்லூரில் உள்ள மின்சார வாரிய அலுவலகத்தில் முகவராக பணிபுரிந்து கடந்த 2009 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றுள்ளார். அதன் பின் அதே பணியில் ஒப்பந்த ஊழியராக 2017ம் ஆண்டு வரை பணிபுரிந்துள்ளார். அந்த காலகட்டத்தில் அப்பகுதியில் உள்ள டி. புதுப்பாளையத்தைச் சேர்ந்த ஆசிரியர் சங்கரன்(51) என்பவர் கலியமூர்த்திக்கு அறிமுகம் ஆகியுள்ளார். 

 

சங்கரன் சித்தலிங்கமடம் என்ற ஊரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 2019ம் ஆண்டு மின்வாரியத்தில் பல பணிகள் காலியாக உள்ளன என்றும், அந்தப் பணி கிடைக்க ஒரு நபருக்கு மூன்று லட்ச ரூபாய் கொடுத்தால் விரைவில் வேலை வாங்கித் தருவதாகவும் கலியமூர்த்தியிடம் கூறியுள்ளார். இதை நம்பிய கலியமூர்த்தி, தனக்கு தெரிந்தவர்கள் சுமார் 40 பேரிடம் மின்வாரியத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி  தலா 2 லட்சம் ரூபாய் வீதம் வசூல் செய்து மொத்தம் சுமார் 95 லட்சத்தை ஆசிரியர் சங்கரனிடம் கொடுத்துள்ளார். ஆனால் அவர்கள் யாருக்கும் வேலை கிடைக்கவில்லை. 

 

இந்த நிலையில், கடந்த 2020ம் ஆண்டு கலியமூர்த்தி திடீரென இறந்துவிட்டார். அதேசமயம், கலியமூர்த்தியிடம் பணம் கொடுத்தவர்கள் அவரின் மகளான தங்கமயிலிடம் வேலையும் வரவில்லை; பணமும் வரவில்லை. வேலைகூட வேண்டாம் பணம் மட்டும் திருப்பி கொடுங்கள் என கேட்டுள்ளனர். இதையடுத்து தங்கமயில், ஆசிரியர் சங்கரனை சந்தித்து வேலை கேட்டு பணம் கொடுத்தவர்கள் பணம் கேட்டு தொந்தரவு செய்வதாகவும் உடனே சம்பந்தப்பட்டவர்களுக்கு பணத்தை திருப்பித் தர வேண்டும் என்றும் கேட்டுள்ளார். 

 

அப்போது சங்கரன், பணம் கொடுத்த அனைவருக்கும் விரைவில் வேலை கிடைத்துவிடும் என்று கூறியுள்ளார். ஆனால் அவர் கூறியபடி வேலை வாங்கித் தரவில்லை. இதையடுத்து தங்கமயில், பணம் கொடுத்தவர்கள் அனைவருக்கும் பணத்தை திருப்பிக் கொடுக்குமாறு கேட்டுள்ளார். அதன்பின் சங்கரன், சுமார் 24 லட்சம் ரூபாய் பணத்தை மட்டும் தங்கமயிலிடம் கொடுத்துள்ளார். மீதி ரூ 70 லட்சத்தை திருப்பித் தரவில்லை. பலமுறை கேட்டுப் பார்த்தும் சங்கரன் பணம் தராமல் ஏமாற்றி வந்துள்ளார். சங்கரன் ஏமாற்றும் நோக்கத்தில் இருப்பதை அறிந்த தங்கமயில், விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையிடம் சங்கரன் மீது மோசடி புகார் அளித்துள்ளார். அவரது புகாரின் பேரில் விசாரணை செய்து வழக்குப் பதிவு செய்த போலீசார், சங்கரனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.