Skip to main content

டாஸ்மாக் கடை திறப்பு; பொதுமக்கள் எதிர்ப்பு!

Published on 27/02/2021 | Edited on 27/02/2021

 

Tasmac store opening Public  road block


கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே, மங்கலம்பேட்டை பேரூராட்சியில் உள்ளது புல்லூர் கிராமம். இந்த கிராமம் கடலூர் - கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களின் எல்லைப் பகுதியில் உள்ளது. இங்கு டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. பொதுமக்கள் அதிகம் வசிக்கும் பகுதியின் அருகில் டாஸ்மாக் திறக்கப்பட்டது. ஏற்கனவே, இப்பகுதியில் அதிகளவில் விபத்துகள் நடைபெற்றுள்ளன. இந்நிலையில், டாஸ்மாக் கடையின் மூலம் விபத்துகள் இன்னும் அதிகரித்து வருகின்றன என அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். மேலும், அப்பகுதி மக்கள் டாஸ்மாக் கடை நடத்துவதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். 


அடிக்கடி விபத்து நடக்கும் இடத்தில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டுள்ளது விபத்துகளை இன்னும் அதிகரிக்கும். எனவே, கடையை மூட வேண்டுமென்று டாஸ்மாக் அதிகாரிகளிடம் மனு கொடுத்துள்ளனர். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத் தெரிகிறது. இதனால், டாஸ்மாக் கடையை மூடக்கோரி நேற்று பொதுமக்கள் மற்றும் எஸ்.டி.பி.ஐ. பாப்புலர் பிரண்ட்ஸ் ஆஃப் இந்தியா ஆகிய கட்சிகளின் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதில் 50க்கும் மேற்பட்ட பெண்கள், 300க்கும் மேற்பட்ட ஆண்கள் கலந்துகொண்டனர். டாஸ்மாக் கடையை மூடக்கோரி டாஸ்மாக் கடை நோக்கி ஊர்வலமாகச் சென்றனர். 


அப்போது டாஸ்மாக் கடைக்குப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த உளுந்தூர்பேட்டை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் கடையின் நுழைவுவாயில் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தடுத்து நிறுத்தினார்கள். இதனால், அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அனைவரும் டாஸ்மாக் கடையை மூடக்கோரி சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், மங்கலம்பேட்டை - திருச்சி ரோடு இணைப்புச் சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உளுந்தூர்பேட்டை தாசில்தார் கோபாலகிருஷ்ணன், டி.எஸ்.பி. விஜயகுமார் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி டாஸ்மாக் கடையை மூடுவது குறித்து விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததின் பேரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

3 நாள்கள் விடுமுறை; மதுக்கடைகளில் குவிந்த மதுப்பிரியர்கள்!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Drinkers gathered in bars for holiday due to election

மக்களவைத் தேர்தலையொட்டி 3 நாள்கள் விடுமுறை அளிக்கப்பட்டதையொட்டி செவ்வாய்க்கிழமை (16-04-24) இரவு மதுக்கடையில் மதுப்பிரியர்களின் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது.

மக்களவைத் தேர்தலையொட்டி தமிழகத்தில் ஏப்ரல் 17, 18, 19 ஆகிய 3 நாட்கள் அரசு (டாஸ்மாக்) மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி டாஸ்மாக் கடையுடன் இணைந்து செயல்படும் மதுக்கூடங்கள், ஏப்ரல் 2 முதல் எப்ரல் 11 வரை (ஏப்ரல் 6 நீங்கலாக) அனைத்து மதுக்கூடங்களும் மூடப்படும். இந்த 3 நாள்களில் மதுபானங்களை விற்பனை செய்தாலோ அல்லது வேறு இடங்களுக்கு மதுபாட்டில்களை கொண்டு சென்றாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று (16-04-24) இரவுடன் மதுக்கடைகள் 3 நாள்களுக்கு மூடப்படும் என்பதால், திருச்சியில் மதுப்பிரியர்கள் தங்கள் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் குவிந்தனர். ஏராளமானோர் கடைகளை முற்றுகையிட்டு 3 நாள்களுக்குத் தேவையான மதுவகைகளை வாங்கிச்சென்றனர். இதனால் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது.

Next Story

மக்களவைத் தேர்தல்; மதுப்பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி!

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
Lok Sabha elections; Orders to close liquor shops!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. 

அதில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த நிலையில், மக்களவைத் தேர்தலை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளை மூட டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து டாஸ்மாக் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கிறது. 

இந்த நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி ஏப்ரல் 17,18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்த சுற்றறிக்கை, அனைத்து மண்டல மேலாளர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வாக்கு எண்ணிக்கை நாளான ஜூன் 4ஆம் தேதியும் மதுக்கடைகளை மூட டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.