Skip to main content

கூடுதல் விலைக்கு விற்கும் டாஸ்மாக்!-கொடைக்கானல் குமுறல்!

Published on 07/07/2022 | Edited on 07/07/2022

 

TT

 

தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள், தலையைச் சுற்றி மூக்கைத் தொடும் வேலையை நன்றாகவே பார்க்கின்றன. எப்படி தெரியுமா? திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு பிரகாரம், மலைப்பிரதேசமான கொடைக்கானலில் மதுபாட்டில்களைத் திரும்பப்பெறும் நடைமுறை,  கடந்த ஜூன் 15-ஆம் தேதி முதல் அமுலுக்கு வந்துள்ளது. அதன்படி, மது வாங்குவோர் டாஸ்மாக்கில் அரசு நிர்ணயித்த விலையைக் காட்டிலும் பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாகத் தந்து, பின்னர் காலி பாட்டிலைத் திரும்ப ஒப்படைத்து, அந்த 10 ரூபாயைத் திரும்பப் பெற்றுக்கொள்ளவேண்டும்.  

 

இது நடைமுறைக்கு ஒத்துவராத விஷயம் எனக் குடிமகன்கள் ஏன் குமுறுகின்றனர்?

 

 Tasmac selling at an additional price!

 

அரசு நிர்ணயித்த ஒரு குவாட்டர் ரம் விலை குறைந்தபட்சம் ரூ.130 ஆகும். தமிழ்நாடு முழுவதும் ரூ.5 கூடுதலாக வைத்து ரூ.135-க்கு விற்கின்றனர். கொடைக்கானல் மலைப்பிரதேசம் என்பதால், இன்னும் கூடுதலாக ரூ.5 விலைவைத்து  குவாட்டர் ரம் ரூ.140-க்கு விற்றனர். மாவட்ட ஆட்சியரின் அறிவிப்புக்குப் பிறகு ரம் குவாட்டர் விலை ரூ.150-ஆக எகிறிவிட்டது. மது குடித்துவிட்டு ஸ்டிக்கர் ஒட்டிய பாட்டிலை ஒப்படைத்தால் மட்டுமே ரூ.10 திரும்பக் கிடைக்கும்.

 

சுற்றுலாப் பயணிகளில் அநேகம்பேர், டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்கள் வாங்கிக்கொண்டு, விடுதி அறைகளிலோ, வேறு எங்கோ வைத்துத்தான் குடிக்கின்றனர். உள்ளூர்வாசிகளும்கூட, மது பாட்டில்களை வாங்கி வீட்டுக்குப் போய்த்தான் குடிக்கின்றனர். ஒரு பாட்டிலுக்கு ரூ.10 திரும்பக் கிடைக்கும் என்பதற்காக, அந்த பாட்டிலை எடுத்துக்கொண்டு சுற்றுலாப் பயணிகளோ, உள்ளூர்வாசிகளோ திரும்பவும் அதே டாஸ்மாக் கடைக்குப் போவார்களா? ஆக, ஒவ்வொரு மது பாட்டிலுக்கும் அரசு நிர்ணயித்த விலையைக் காட்டிலும் கூடுதலாக ரூ.20-ஐ  கொடைக்கானலில் மதுப்பிரியர்கள் தந்தாக வேண்டியதிருக்கிறது.

 

‘இது அநியாயமல்லவா?’ என்று மதுப்பிரியர்கள் டாஸ்மாக் கடைகளில் வாதிடும்போது “கட்டிங் கொடுக்கணும். போலீஸ் வந்தால் சரக்கு கொடுக்கணும். நாங்க எத்தனை பேரைத்தான் சமாளிக்கமுடியும்? தமிழகத்தில் இரவு நேரத்தில் போலீஸ் ஏட்டையா வந்து மாமூல் வாங்காத டாஸ்மாக் கடை உண்டா? பார் உண்டா?” எனத் தங்கள் பங்கிற்குப் புலம்பித் தள்ளுகிறார்கள்.  

 

மது சம்பந்தப்பட்ட விஷயம் என்பதாலோ என்னவோ, அனைத்துத் தரப்பிடமிருந்தும் புலம்பல் சத்தம் கேட்கிறது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

“விதிமீறலில் ஈடுபட்ட டாஸ்மாக் பார்” - குரல் கொடுத்த குடிமகன்!

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
Tasmac Bar Irregular  Citizen Speaks Out

டாஸ்மாக் பாரில் மது அருந்தியபடியே நம்மைத் தொடர்புகொண்ட ஒருவர், “அண்ணே.. போதையெல்லாம் இறங்கிப்போச்சு..” என்று பேசினார். ‘கலப்படச் சரக்கா? என்ன விஷயம்?’ என்று கேட்டோம். “அதெல்லாம் இல்ல. டாஸ்மாக்ல 21 வயசுக்கு குறைவா உள்ளவங்களுக்கு சரக்கு விற்கக் கூடாதுன்னு சட்டம் சொல்லுது. ஆனா இந்த விருதுநகர் பார்ல (கடை எண் 11881) டவுசர் போட்ட சின்னப் பையனை வேலைக்கு வச்சிருக்காங்க. சிறுவன் தான் டேபிள் டேபிளா போயி பாட்டில வச்சிக்கிட்டிருக்கான். அவன் சின்னப் பையன்ங்கிறதுனால சரக்கடிக்க வந்தவங்க ஆளாளுக்கு அவனை விரட்டி வேலை வாங்குறாங்க. கண்டபடி திட்டுறாங்க.

பாக்குறதுக்கு பரிதாபமா இருக்கு. குழந்தைத் தொழிலாளர் முறையைத் தடுக்க சட்டம் இருக்கு. டாஸ்மாக் சட்டம் வேற இருக்கு. ஆனா பாருங்க சட்டமீறலா இங்கே அநியாயம் நடக்குது. மனசு பொறுக்காமத்தான் ஒருத்தர்கிட்ட நக்கீரன் நம்பரை வாங்கி உங்ககிட்ட பேசுறேன். நான் ஒரு குடிமகன்தான். ஆனாலும் எனக்கும் மனசாட்சி இருக்குல்ல. அந்தப் பையனோட எதிர்காலத்த நெனச்சா ரொம்ப வேதனையா இருக்கு. உங்க வாட்ஸ்-ஆப் நம்பருக்கு போட்டோ எடுத்து அனுப்பிருக்கேன் சார்.” என்று நா தழுதழுக்கப் பேசினார்.

Tasmac Bar Irregular  Citizen Speaks Out

மது அருந்தினாலும் ஒரு பொறுப்புள்ள இந்தியக் குடிமகனாக நடந்துகொண்ட அந்த நபர், நம்மிடம் தன் பெயரைச் சொல்ல விரும்பவில்லை. விருதுநகர் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் ரவிச்சந்திரனை தொடர்புகொண்டு விஷயத்தைச் சொன்னோம். “உடனே அங்கே போய் பார்த்து விசாரிச்சு நடவடிக்கை எடுக்கிறேன்.” என்று உறுதியளித்தார். 

Next Story

பேருந்து நிலையத்தில் மது கடத்தல்; மூன்று பெண்கள் கைது

Published on 05/03/2024 | Edited on 05/03/2024
Liquor smuggling at bus station; Three women were arrested

மதுபான பாட்டில்களை கடத்திய பெண்கள் 3 பேர் கைது செய்யப்பட்டது நாகையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் புதிய பேருந்து நிலையம் பகுதியில் மூன்று பெண்கள் சந்தேகத்திற்கிடமாக மூன்று பைகளுடன் நின்றுகொண்டிருந்தனர். அப்போது  அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போலீசாரை பார்த்த அப்பெண்கள் அவசர அவசரமாக ஆட்டோ ஒன்றில் ஏறி தப்பிக்க முயன்றனர்.

இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்கள் மூன்று பேரையும் பிடித்து அவர்கள் கொண்டு வந்த பையை சோதனை செய்ததில் அந்த பைகளில் மது பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. உடனடியாக மூன்று பேரையும் கைது செய்த போலீசார் முழுமையாக சோதனை செய்ததில் 300க்கும் மேற்பட்ட மதுபாட்டில்களும், சாராயமும் இருந்தது தெரியவந்தது. கைப்பற்றப்பட்ட மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் மூன்று பெண்களையும் கைது செய்ததோடு, இந்த மதுபாட்டில் கடத்தல் தொடர்பாக அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நாகையில் மூன்று பெண்கள் பேருந்து நிலையம் வழியாக மதுபாட்டில் கடத்தலில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.