Skip to main content

தஞ்சை தேர் விபத்து : இறந்தவர்கள் குடும்பங்களுக்கு நேரில் ஆறுதல் சொன்ன முதலமைச்சர் (படங்கள்)

Published on 28/04/2022 | Edited on 28/04/2022

 

தஞ்சாவூரிலிருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது களிமேடு கிராமம். இங்குள்ள அப்பர் மடத்தின் கோயிலில் ஆண்டுதோறும் அப்பர் பிறந்த சதய நட்சத்திர தினத்தன்று சித்திரை திருவிழா நடைபெறும். அந்த வகையில் நேற்று முன் தினம் இரவு சுமார் 10 மணியளவில் தேரோட்டம் நடைபெற்றது. மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட 10 அடி உயரம் கொண்ட பல்லக்கு தேரை, திருவிழாவில் கலந்துகொண்ட சிறுவர்கள், பெரியவர்கள் ஏன ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். 

 

இந்நிலையில், அதிகாலை சுமார் 3.30 மணியளவில் தேரின் ராட்சத சக்கரம் திடீரென பள்ளத்தில் இறங்கியுள்ளது. அதேசமயம் அந்த இடத்தின் மேல் சென்ற உயர் அழுத்த மின் கம்பியானது தேரில் உரசியுள்ளது. இதனால் தேரில் பாய்ந்த மின்சாரம் அதனை பிடித்திருந்த பக்தர்களை தாக்கியதோடு, தேர் முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. 


இந்த கோர விபத்தில் சந்தோஷ், ராஜ்குமார் என்ற இரு சிறுவர்கள் உட்பட  11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். காயமடைந்த 20 பேர் கவலைக்கிடமான நிலையில் தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கின்றனர்.


இந்த விபத்து குறித்து தகவலறிந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகாலையிலேயே இரங்கல் தெரிவித்ததோடு, தஞ்சை தேர் திருவிழாவில் உயிரிழந்த 11 பேரின் குடும்பங்களுக்கும் அரசு சார்பாக தலா ரூ.5 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் என அறிவித்தார். காயமடைந்தவர்களுக்கு உயர்தர சிகிச்சையளிக்கவும் ஆணையிட்டார். சட்டசபையில் இரங்கல் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.


இந்த நிலையில், நேற்று காலை சுமார் 11.30 மணியளவில் சட்டசபையில் இருந்து நேராக சென்னை விமான நிலையத்திற்கு சென்ற அவர், அங்கிருந்து விமானம் மூலம் 2.30 மணிக்கு மதுரை சென்று பிறகு சாலை மார்க்கமாகவே திருச்சி வழியாக தஞ்சாவூர் அருகிலுள்ள களிமேடு கிராமத்திற்கு சென்றடைந்தார்.


அங்கு, தேர் விபத்து நடந்த இடத்தை பார்வையிட்ட அவர், விபத்தில் உயிரிழந்த 14 வயது சிறுவன் சந்தோஷின் வீட்டிற்குச் சென்று குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். முதலமைச்சரை பார்த்ததும் பாதிக்கப்பட்டவர்கள் கதறி அழுதனர். அவர்களை தேற்றிய மு.க.ஸ்டாலின், நிவாரண தொகை அடங்கிய காசோலையை வழங்கினார். பிறகு, அருகிலுள்ள தெருவில் உயிரிழந்த 8 பேரின் குடும்பத்தினர்களையும்,  பின்னர் விபத்தில் உயிரிழந்த கீழவாசல் மோகன் மற்றும் பரிசுத்த நகர் நாகராஜ் ஆகியோரின் வீட்டிற்கும் சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செய்ததோடு அவர்கள் அனைவருக்கும் அரசு வழங்கிய நிவாரணத் தொகைக்கான காசோலைகளை வழங்கி அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். முதல்வரை கண்டதும் கண்ணீர் மல்க கதறி அழுத சிலர், தங்கள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் எனவும் முதல்வரிடம் கோரிக்கை வைத்தனர். 


இதன் பின்னர் தஞ்சை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த காயமுற்றவர்களை சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறிய முதல்வர் மு.க.ஸ்டாலின், அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவ அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.


முதலமைச்சரின் இந்த ஆய்வின்போது அவருடன் திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு, அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் உடனிருந்தனர். முன்னதாக, சம்பவ இடத்திற்கு முன்னமே சென்றிருந்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் காயமுற்றவர்களுக்கு தேவையான உதவிகளை செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பேரறிஞர் அண்ணா - கலைஞர் நினைவிடத்தில் முதல்வர் மரியாதை! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Chief Minister honors Anna - kalaignar Memorial

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. இதனையொட்டி நேற்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கின. திமுக சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை பெசன்ட் நகரிலும், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும், நாம் தமிழர் கட்சியின் சீமான் சென்னையிலும், விசிகவின் திருமாவளவன் சிதம்பரத்திலும், பாமகவின் அன்புமணி ராமதாஸ் தர்மபுரியிலும் இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்தனர்.

இதன் ஒரு பகுதியாக தென் சென்னையில் திமுக சார்பில் போட்டியிடும் தமிழச்சி தங்கப்பாண்டியன் மற்றும் மத்திய சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் ஆகியோரை ஆதரித்து பெசன்ட் நகரில் நேற்று (17.04.2024) மாலை 4 மணியளவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார். அதனைத் தொடர்ந்து மக்களவை தேர்தல் பரப்புரை ஓய்ந்ததால் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள பேரறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். 

Next Story

“பாஜகவையும், அதிமுகவையும் ஒரு சேர வீழ்த்த வேண்டும்” - முதல்வர் மு.க. ஸ்டாலின் சூளுரை!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
BJP and ADMK must be defeated together says CM MK Stalin speech

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை மறுநாள் (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. மேலும் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்நிலையில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், “வணக்கம். நல்லாயிருக்கீங்களா? ஏப்ரல் 19ஆம் தேதி நம் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கப் போகும் நாள். நாட்டோட எதிர்காலம் உங்கள் கையில்தான் இருக்கிறது. உங்கள் வாக்கு உங்கள் தொகுதி எம்.பி.யை மட்டும் தேர்வு செய்வதற்கான வாக்கு இல்லை. கடந்த 10 ஆண்டுகளாக நம் நாட்டை நாசப்படுத்திய பாசிச ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வாக்கு. இனி இந்தியாவில் ஜனநாயகம் இருக்க வேண்டுமா? வேண்டாமா? என்பதை முடிவு செய்யும் தேர்தல் இது. அரசியல் சட்டத்தை காப்பாற்ற நடக்கிற தேர்தல். மதம், ஜாதி கடந்து மக்கள் ஒற்றுமையாக வாழ உங்கள் வாக்குதான் வலிமையான ஆயுதம். இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றது முதல் என்னென்ன திட்டங்களை செயல்படுத்திக் கொண்டு வருகிறேன் என்பது உங்களுக்கே தெரியும்.

மாதாமாதம் மகளிருக்கு ரூ. 1000 வழங்கக் கூடிய கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம், பேருந்துகளில் மகளிர் இலவசமாக பயணம் செய்ய விடியல் பயணம் திட்டம், பள்ளி குழந்தைகள் காலையில் பசியில்லாமல் படிக்க முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், கல்லூரி மாணவிகளுக்கு ரூ. 1000 வழங்கக் கூடிய புதுமைப் பெண் திட்டம், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை பெற்றுத் தர நான் முதல்வன் திட்டம், மக்களைத் தேடி மருத்துவம், இல்லம் தேடி கல்வி என ஏராளமான திட்டங்களை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம்.

தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் உற்ற துணையாக இருக்கிறோம். உங்கள் திராவிட மாடல் அரசின் சாதனைகள் இந்தியா முழுவதும் எதிரொலிக்க, இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு உங்கள் வாக்குகளை செலுத்துங்கள். தமிழகத்தை வஞ்சித்த பாஜகவையும் தமிழ்நாட்டை பாழ்படுத்திய அதிமுகவையும் ஒரு சேர வீழ்த்த வேண்டும். தமிழ்நாட்டிற்கு சிறப்பு திட்டங்கள் கிடைக்க தமிழையும் தமிழரையும் உண்மையாக நேசிக்கிற ஒன்றிய ஆட்சி டெல்லியில் அமைய திமுக மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.