![Tamimun Ansari requested the minister to release the prisoners](http://image.nakkheeran.in/cdn/farfuture/xeXCjnXcXNv_GUUMgzwpHX7YIL-L55bkHT5A_jsLLls/1693402922/sites/default/files/inline-images/mjk-std.jpg)
இன்று சென்னை பசுமை வழி சாலையில் உள்ள அமைச்சக இல்லத்தில், சட்டத்துறை அமைச்சர் ரகுபதியை மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி சந்தித்து பேசினார்.
இந்தச் சந்திப்பில், 20 ஆண்டுகளை கடந்த ஆயுள் தண்டனை கைதிகளை சாதி, மத, வழக்கு பேதமின்றி முன் விடுதலை செய்ய வேண்டும் என்ற மஜக-வின் கோரிக்கை தொடர்பாக அமைச்சரிடம் எடுத்துரைத்தார். ஆதிநாதன் ஆணைய பரிந்துரைகள் மற்றும் சட்ட வழிமுறைகள் குறித்தும் விவாதித்தார். கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் அண்ணா நூற்றாண்டு விழா ஆகியவற்றை முன்னிட்டு இந்த மனிதாபிமான கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும் என்று கூறினார். இது குறித்து கவனத்தில் கொண்டிருப்பதாகவும், சட்டப்பூர்வ நடவடிக்கையை இந்த அரசு மேற்கொள்ளும் என்றும் அமைச்சர் உறுதியளித்தார்.
இது தொடர்பாக கடந்த செப்டம்பர் 10, 2022 அன்று சென்னையில் மஜக சார்பில் தலைமைச் செயலக முற்றுகை போராட்டம் நடைபெற்றது. அது தவிர ஜனவரி 8, 2022 அன்று கோவை மத்திய சிறை முற்றுகை, ஜூலை 09, 2023 அன்று நெல்லை மத்திய சிறை முற்றுகை, ஆகஸ்ட் 5, 2023 அன்று கடலூர் மத்திய சிறை முற்றுகை ஆகியன முன்னெடுக்கப்பட்டன.
![Tamimun Ansari requested the minister to release the prisoners](http://image.nakkheeran.in/cdn/farfuture/QZ_-Pd1S_-uNRUMNjwpEhgDxShs0bwO1fLm846zNVmU/1693402949/sites/default/files/inline-images/mjk-art2.jpg)
தற்போது இதே கோரிக்கையை முன்னிறுத்தி செப்டம்பர் 27, 2023 அன்று சேலம் மத்திய சிறையை முற்றுகையிட்டு கோரிக்கை போராட்டம் நடத்த மஜக முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனிடையே செப்டம்பர் 15, 2023 அண்ணா பிறந்தநாளையொட்டி இக்கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும் என்று இன்றைய சந்திப்பு நடைபெற்றுள்ளது. இச்சந்திப்பின்போது மாநிலச் செயலாளர் நெய்வேலி இப்ராகிம், மாநில துணைச் செயலாளர் அசாருதீன் ஆகியோரும் உடனிருந்தனர்.