Skip to main content

போட்டியில் கலந்துகொள்ள முடியாமல் போன தமிழ்நாடு மாணவர்கள்; அமைச்சர் விளக்கம்  

Published on 10/06/2023 | Edited on 10/06/2023

 

Tamilnadu students who could not participate in the competition; Minister's explanation

 

தேசிய விளையாட்டுப் போட்டிகளில் தமிழக மாணவர்கள் கலந்து கொள்ளாததை அடுத்து அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

 

அகில இந்திய பள்ளிக் குழுமம் சார்பில் நடத்தப்படும் தேசிய விளையாட்டுப் போட்டி ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் நடைபெறும். அதே போல், இந்த ஆண்டும் டெல்லியில் கடந்த ஜூன் 6 ஆம் தேதி துவங்கியுள்ள தேசிய விளையாட்டுப் போட்டி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டிகள் வரும் 12 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தேசிய விளையாட்டுப் போட்டியில் தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களும் கலந்து கொள்வர். ஆனால், இந்த  ஆண்டு தமிழகத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் போட்டியில் கலந்துகொள்ளவில்லை. இது சர்ச்சையான நிலையில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்து அது குறித்துப் பேசினார். 

 

அதில் அவர் பேசியதாவது, “கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளில் இந்த விளையாட்டு போட்டிகள் நடைபெறவில்லை. அந்த நேரத்தில் அரசுத் துறை அதிகாரிகள் மற்றும் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் பங்கேற்று இருந்தார்கள். அதனால் இந்த ஆண்டில் நடைபெறவிருந்த விளையாட்டு போட்டிகளில் அரசு அதிகாரிகளின் தகவல் பரிமாற்றத்தின் ஏற்பட்ட குழப்பத்தினால் தான் தமிழக மாணவர்கள் கலந்துகொள்ள இயலாமல் போனது. இதற்கு தமிழக அரசு, அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், இதுபோன்ற தவறுகள் இனிமேல் நடக்காமல் பார்த்துக் கொள்வோம்" என்று தெரிவித்தார். 

 

இது பற்றி பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது, "பள்ளி மாணவர்கள் மே மாதத்தில் தங்களது தேர்வுகளை முடித்துவிட்டு அவரவர் ஊருக்கு சென்றதால் இந்த போட்டியை ஏற்பாடு செய்வதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், நம்முடைய கவனத்திற்கு சுற்றறிக்கை வந்ததும் அதை உயர் அதிகாரிகளுக்கு தெரிவிப்பது தான் கடமை. ஆனால் அதில் தவறு நடந்துள்ளது. அதனால் தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மிக்ஜாம் புயல் பாதிப்பு; நடிகர் சிவகார்த்திகேயன் நிதியுதவி

Published on 10/12/2023 | Edited on 10/12/2023
Mikjam storm damage; Funded by actor Sivakarthikeyan

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் தேசிய மற்றும் மாநிலப் பேரிடர் மீட்புக் குழுவினர், காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகளைச் சார்ந்த மீட்புப் பணிக் குழுவினர் இப்பணிகளில் பெருமளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். படகுகள் மற்றும் வாகனங்கள் மூலமாக நீர் சூழ்ந்த பகுதிகளிலிருந்து பொதுமக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு வருகின்றனர். மேலும் அவர்களுக்குத் தேவையான உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த சூழலில் புயல் நிவாரண நிதிக்கு தனது ஒரு மாத ஊதியத்தை வழங்குவதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்திருந்தார். அதன்படி ஒரு மாத சம்பளத்தை வழங்கியதோடு, தமிழகத்தின் அனைத்து சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பல்வேறு தரப்பினரும் மிக்ஜாம் புயல் பாதிப்புக்கு நிவாரணத்திற்கு நிதியுதவி அளிக்குமாறு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். இதனையடுத்து பல்வேறு தரப்பினரும் நிவாரண நிதி அளித்து வருகின்றனர். இந்நிலையில் மிக்ஜாம் புயல் பாதிப்பில் இருந்து மக்களை காக்கும் விதமாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நடிகர் சிவகார்த்திகேயன் 10 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார். இதற்கான காசோலையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் நடிகர் சிவகார்த்திகேயன் வழங்கினார்.

இது குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மிக்ஜாம் புயல் – கன மழையைத் தொடர்ந்து திமுக அரசு பல்வேறு நிவாரணப் பணிகளை இடைவிடாது மேற்கொண்டு வருகிறது. அரசின் இந்த முயற்சிக்கு துணை நிற்கிற விதமாக, நிறுவனங்கள், இயக்கங்கள், தனிநபர்கள் என பலரும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நிதியளித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று நம்மை நடிகர் சிவகார்த்திகேயன் சந்தித்த போது, ரூ.10 லட்சத்துக்கான காசோலையை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்காக நம்மிடம் வழங்கினார். அவருக்கு அன்பும், நன்றியும். ஒன்றிணைந்து செயல்படுவோம். இயற்கைப் பேரிடரால் ஏற்பட்ட துயர் துடைப்போம்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

“அந்த கேள்வியை மக்களிடம் கேளுங்கள்” - எதிர்க்கட்சிகளின் விமர்சனத்திற்கு அமைச்சர் உதயநிதி பதில்

Published on 09/12/2023 | Edited on 09/12/2023
minister Udayanidhi's response to opposition criticism for cyclone michaung

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் திருவொற்றியூரில் வெள்ள நிவாரண பொருட்களை மக்களுக்கு வழங்கிய பின் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, “2015 ஆம் ஆண்டு கனமழை காரணமாகத் துரித நடவடிக்கை எடுத்ததன் காரணமாக விரைந்து மக்களுக்கு மின்சாரம் கொடுத்தோம். ஆனால் தற்போது அப்படியில்லை. இந்த மாதிரி மழைக் காலங்களில் மக்களுக்கு மின்சாரம் தங்கு தடையில்லாமல் கிடைப்பதற்காகத்தான் தரையில் மின்சார ஒயரை பதித்து மின் இணைப்பு அளித்தோம். தற்போது மின்சாரம் தடையில்லாமல் கிடைப்பதற்கு நாங்கள்தான் காரணம். மழை வெள்ளம் காரணமாகச் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

புயல் வரும் என்று வானிலை மையம் எச்சரிக்கை கொடுத்தும் இந்த அரசாங்கம் மெத்தனமாக இருந்திருக்கிறது. அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால் உணவு, பால், குடிநீர் பெரும்பாலான பகுதிகளில் கிடைக்கவில்லை” என்று தமிழக அரசு மீது குற்றச்சாட்டை வைத்திருந்தார். அதேபோல், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட அதிமுகவினர் தமிழக அரசு மீது குற்றச்சாட்டை வைத்திருந்தனர்.

இந்த நிலையில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்து நிவாரணப் பணிகளை செய்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “6 நாட்களாக நாங்கள் மக்களுடன்தான் இருக்கின்றோம். புயல் அடித்தபோதும் சென்னை மேயர், சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் என அனைவரும் களத்தில்தான் இருந்தோம். நாங்கள் எங்கள் பகுதியில் இருக்கக்கூடிய மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகின்றோம்” என்று கூறினார். அதனைத் தொடர்ந்து, எதிர்க்கட்சிகள் வைத்திருக்கும் குற்றச்சாட்டு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதில் அளித்த அவர், “நாங்கள் மக்களுடன் இருக்கிறோம். நாங்கள் ஒன்னும் வீட்டில் படுத்துக்கொண்டோ ஒளிந்துகொண்டோ இருக்கவில்லை. அதனால், அந்த கேள்வியை மக்களிடம் போய் கேளுங்கள்” என்று கூறினார்.