Skip to main content

சூடுபிடித்தது தேர்தல் களம்... தொடங்கியது வேட்புமனு தாக்கல்...

Published on 12/03/2021 | Edited on 12/03/2021

 

tn assembly election 2021 election

 

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவும், கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவும் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த நிலையில், கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு முடிந்து தேர்தல் பிரச்சாரம், தேர்தல் அறிக்கை வெளியீடு உள்ளிட்ட பணிகளில் அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் பிஸியாக இயங்கிவரும் நிலையில் தமிழக தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. 

 

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வேட்புமனுக்களை மார்ச் 12ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை தாக்கல் செய்ய அவகாசம் அளிக்கப்பட்டுள்ள நிலையில், தற்பொழுது வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது. சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வேட்புமனுக்கள் பெறப்படாது. 

 

வேட்புமனு தாக்கல் செய்வதற்கு குறைந்தபட்சம் ஒருநாள் முன்னதாக, தேர்தல் செலவு கணக்குகளைப் பராமரிப்பதற்காக வேட்பாளர் பெயரிலோ அல்லது வேட்பாளர் மற்றும் அவருடைய முதன்மை முகவர் ஆகிய இருவர் பெயரில் கூட்டாகவோ, வங்கியில் பிரத்யேக கணக்கு தொடங்கி, அதன் வங்கிக் கணக்குப் புத்தகத்தின் நகல் வேட்புமனு தாக்கல் செய்யும்போது ஒப்படைக்க வேண்டும்.

 

தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவில் இருந்து வேட்புமனு தாக்கல் செய்ய வரும் நபருடன் அதிகபட்சம் 2 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்திற்குள் வேட்புமனு தாக்கல் செய்பவர் மற்றும் அவருடன் 2 நபர்கள் என அதிகபட்சம் 3 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். சுயேச்சை வேட்பாளர்களை அடையாளம் காட்டுவதற்கு 10 நபர்கள் உடன் வந்தாலும், மனுத்தாக்கலின்போது அவருடன் 2 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். 

 

வேட்புமனுவை, வேட்பாளரோ அல்லது முன்மொழிபவரோ தாக்கல் செய்யலாம். மனுத்தாக்கல் செய்ய வரும் வேட்பாளர் மற்றும் அவருடன் வரும் நபர்கள் என அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியைப் பின்பற்றி வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பா.ஜ.க தலைவரை எதிர்த்து பா.ஜ.க மூத்த தலைவர் சுயேட்சையாகப் போட்டி!

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
karnataka bjp leader k.s.eswarappa filed nomination as independent

மக்களவைத் தேர்தல், நாடு முழுவதும் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கவிருக்கிறது தேர்தல் ஆணையம் அறிவித்தது. நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறும் இந்தத் தேர்தல் நாடு முழுவதும் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெற்று அதில் பதியப்படும் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள், தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன.

அந்த வகையில், மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில், ஏப்ரல் 26 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்தத் தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், ஜனதா தளம் (எஸ்) கட்சி போட்டியிடவுள்ளது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. அந்த வகையில், பா.ஜ.க - ஜனதா தளம் (எஸ்) கூட்டணி, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்து தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டு வந்தனர்.

மேலும், முதற்கட்டமாக நடைபெறும் 14 தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல், கடந்த மார்ச் 28ஆம் தேதி முதல் கடந்த 4ஆம் தேதி வரை நடைபெற்றது. இதனையடுத்து, அரசியல் கட்சி வேட்பாளர்களும், சுயேட்சை வேட்பாளர்களும் வேட்புமனு தாக்கல் செய்து தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இதற்கிடையில், கர்நாடகா முன்னாள் துணை முதல்வரும், பா.ஜ.க மூத்த தலைவருமான கே.எஸ்.ஈஸ்வரப்பா, ஹவேரி மக்களவைத் தொகுதியில் தனது மகன் கே.ஈ.கந்தேஷ் போட்டியிட பா.ஜ.க தலைமைக்கு வாய்ப்பு கோரியிருந்தார். ஆனால், அம்மாநில பா.ஜ.க தலைவர் பி.ஓய்.ராகவேந்திரா, அந்த வாய்ப்பை வழங்க மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், கட்சி மீது அதிருப்தியில் இருந்த கே.எஸ்.ஈஸ்வரப்பா, இந்த விவகாரம் குறித்து கட்சி மேலிடத்தில் புகார் அளித்தார். ஆனால், அதுவும் பயனளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து, ராகவேந்திரா போட்டியிடும் சிவமோகா தொகுதியில் அவரை எதிர்த்து போட்டியிடப் போவதாக கே.எஸ்.ஈஸ்வரப்பா அதிரடியாக அறிவித்தார்.

இந்த நிலையில், மீதமுள்ள 14 தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் இன்று (12-04-24) தொடங்கியது. இன்று தொடங்கிய வேட்புமனு தாக்கலானது வரும் 19ஆம் தேதி வரை நடக்கிறது. இதில், கர்நாடக முன்னாள் துணை முதல்வரும், பா.ஜ.க மூத்த தலைவருமான கே.எஸ்.ஈஸ்வரப்பா, ராகவேந்திரா போட்டியிடும் சிவமோகா தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக தனது வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார். இது பா.ஜ.க மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

அனல் பறக்கும் வயநாடு; முக்கிய தலைவர்கள் வேட்புமனுத் தாக்கல்! 

Published on 03/04/2024 | Edited on 03/04/2024
Wayanad; Major leaders filing nominations

கேரளாவில் உள்ள 20 நாடாளுமன்ற மக்களவை தொகுதிகளுக்கும் இரண்டாம் கட்டமாக 26 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதனையொட்டி வயநாடு தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அன்னி ராஜாவும், பா.ஜ.க. சார்பில் மாநில தலைவர் கே. சுரேந்திரனும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் வயநாட்டில் சிபிஐ வேட்பாளர் அன்னி ராஜா இன்று (04.03.2024) தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.

வயநாடு தொகுதி சி.பி.ஐ. வேட்பாளர் அன்னி ராஜா கூறும்போது, “இடது முன்னணி வேட்பாளராக என்னிடமிருந்து அவர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதை மக்கள் மத்தியில் தெரிந்துகொள்ள நான் செல்கிறேன். எனவே, நாங்கள் வாக்களித்தால் நீங்கள் இங்கு வருவீர்களா என்று என்னிடம் கேள்வி கேட்கிறார்கள். உங்களுக்காக இந்தத் தொகுதியில் இருந்து என்னைத் தேர்ந்தெடுத்தால் நான் இங்கே இருப்பேன் என்று அவர்களுக்கு நான் உறுதியளிக்கிறேன். நான் அவர்களுடன் இருப்பேன் என்று அவர்களிடம் கூறும்போது, மனித - விலங்கு மோதல் முக்கியப் பிரச்சனைகளில் ஒன்றாக உள்ளது. இதற்கு, நிரந்தரத் தீர்வு காண்பதற்கு மக்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள். இதற்காக தற்போதுள்ள சட்டத்தில் திருத்தம் செய்வது முக்கியம். ஆனால் அது கேரள சட்டசபையில் அல்ல. நாடாளுமன்றத்தில் நடக்கும்” எனத் தெரிவித்தார்.

அதே சமயம் காங்கிரஸ் கட்சியின் சிட்டிங் எம்.பி.யும் வேட்பாளருமான ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன் தனது தொகுதியான வயநாட்டில் ரோட் ஷோ நடத்தினார். அப்போது அவரது சகோதரியும், காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தியும் உடன் இருந்தார். அப்போது ராகுல் காந்தி கூறுகையில், “வயநாட்டில் உள்ள ஒவ்வொரு நபரும் எனக்கு அன்பையும், பாசத்தையும், மரியாதையையும் அளித்து என்னைத் தங்கள் சொந்தமாக நடத்தினார்கள். உங்களின் நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பது எனக்குக் கிடைத்த பெருமை. நான் உங்களை ஒரு வாக்காளர் போல் நினைக்கவில்லை. அது போன்று உங்களை நடத்தவில்லை. என் சகோதரி பிரியங்காவை எப்படி நினைக்கிறேனோ அதே மாதிரி தான் உங்களையும் நடத்துகிறேன். உங்களை பற்றி நினைக்கிறேன். எனவே வயநாட்டின் வீடுகளில் எனக்கு சகோதரிகள், அம்மாக்கள், அப்பாக்கள் மற்றும் சகோதரர்கள் உள்ளனர். அதற்காக என் இதயத்தில் இருந்து நன்றி கூறுகிறேன்.

Wayanad; Major leaders filing nominations

மனித - விலங்கு மோதல், மருத்துவக் கல்லூரி அமைப்பது போன்ற பிரச்சனை உள்ளது. இந்த தேர்தல் போராட்டத்தில் வயநாடு மக்களுடன் நான் நிற்கிறேன். மருத்துவக் கல்லூரி தொடர்பாக அரசுக்கு அழுத்தம் கொடுக்க முயற்சித்தோம். முதலமைச்சருக்கு கடிதம் எழுதினேன். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர்கள் எதையும் செய்யவில்லை. டெல்லியில் எங்கள் ஆட்சி அமைந்தால், கேரளாவில் ஆட்சி அமைந்தால், இந்த இரண்டையும் செய்வோம். இந்த பிரச்சனைகளை தீர்த்து வைப்போம் என்று நான் உறுதியாக நம்புகிறேன்” எனத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து ராகுல் காந்தி தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். இதன் மூலம், வயநாடு தொகுதியில் முக்கிய தலைவர்கள் வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளதால், அங்கு தேர்தல் பிரச்சாரம் அனல் பறக்க ஆரம்பித்துள்ளது.