Skip to main content

தஞ்சையில் இருந்து திருச்சி பள்ளிக்கும் பரவிய கரோனா...!

Published on 20/03/2021 | Edited on 20/03/2021

 

Corona spread from Thanjavur to Trichy school ...!

 

கடந்த சில நாட்களாகவே தஞ்சையில் பள்ளிகளில் கரோனா தொற்று என்பது அதிகரித்து வருகிறது. தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டையில் உள்ள அரசு உதவிபெறும் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் உள்ள 460 மாணவிகளுக்கு மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனையில் மொத்தம் 56 மாணவிகளுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. மேலும் மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் 350 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், பெற்றோர்கள் 9 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது.

 

அதனைத் தொடர்ந்து தஞ்சை மாவட்டத்தில் பட்டுக்கோட்டை ஆண்கள் மேல்நிலை பள்ளி ஆசிரியருக்கும், மதுக்கூர் அருகே ஆலத்தூர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆய்வகப் பெண் உதவியாளர் ஒருவருக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், நான்காவதாக நேற்று முன்தினம் (18.03.2021) காலை தஞ்சையில் அரசு உதவிபெறும் பள்ளியில் 2 ஆசிரியர்கள், ஒரு மாணவி ஆகியோருக்கும், கும்பகோணத்தில் உள்ள தனியார் பள்ளியில் 7 மாணவர்களுக்கும் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

 

நேற்று மேலும் இரண்டு தனியார் பள்ளிகளில் 27 மாணவிகள் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. அதேபோல் தஞ்சை சாஸ்தா பல்கலை மாணவர்கள் இரண்டு பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில்  தஞ்சை மாவட்டத்தில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் என மேலும் 29 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தஞ்சையில் பள்ளிக்களில் மட்டும் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 142 ஆக உயர்ந்துள்ளது. கரோனா பாதிக்கப்பட்ட 142 பேரில் 66 பேர் குணமடைந்து விட்டனர். பள்ளி மாணவர்கள் ஆசிரியர்கள் என 76 பேர் கரோனா சிகிச்சையில் உள்ளனர்.

 

இந்நிலையில் தஞ்சையில் இருந்து திருச்சி பள்ளிக்கும் பரவியுள்ளது கரோனோ. திருச்சி மண்ணச்சநல்லூர் அரசு ஆண்கள் பள்ளியில் ஆசிரியர் ஒருவருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. ஆசிரியரின் மனைவி டிஇஎல்சி பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றுகிறார். அவர் பணிக்காக தஞ்சை சென்று வரும்போது கரோனா தொற்று உறுதியான நிலையில், கணவரான திருச்சி மண்ணச்சநல்லூர் அரசு ஆண்கள் பள்ளி ஆசிரியருக்கும் கரோனா உறுதியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வழக்கறிஞர்களுக்கு வந்த மின்னஞ்சல்; ம.தி.மு.க. எடுத்த முடிவு

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
election commission Email to mdmk

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ம.தி.மு.க. ஒரு தொகுதியில் போட்டியிட இருக்கிறது. சொந்த சின்னத்தில் மட்டுமே ம.தி.மு.க. போட்டியிடும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பம்பரம் சின்னத்தை  தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. நேற்று இந்த வழக்கில் அவசர முறையீடு செய்யப்பட்ட நிலையில், தலைமை நீதிபதி கங்கா பூர்வாலா அமர்வில் விசாரணைக்கு வந்தது.

வைகோ தரப்பில், 'தங்களுடைய கோரிக்கையை ஏற்றுக் கட்சி நிர்வாகிகளின் பெயர்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்து தேர்தல் ஆணையம் பம்பரம் சின்னம் ஒதுக்கீடு செய்யவில்லை. நாளை கடைசி நாள் என்பதால் தாங்கள் கோரிக்கையை உடனடியாக பரிசீலிக்க வேண்டும் எனத் தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட விட வேண்டும்' என வாதிடப்பட்டது.

இதற்குப் பதிலளித்த தேர்தல் ஆணைய தரப்பு வழக்கறிஞர், 'சட்டப்படி அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி இரண்டு தொகுதிகளுக்கு மேல் போட்டியிட்டால் தான் ஒரே சின்னம் ஒதுக்கப்படும். மதிமுக கோரிக்கை மீது இன்று முடிவு எடுக்கப்படும். இது குறித்து சம்பந்தப்பட்ட பகுதியின் தேர்தல் அதிகாரி தான் முடிவு எடுப்பார்' என்று தெரிவிக்கப்பட்டது.

பம்பரம் சின்னம் தற்போது பொது சின்ன பட்டியலில் உள்ளதா இல்லையா என்பது குறித்து 2.15 மணிக்கு தேர்தல் ஆணையம் விளக்கமளிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை 2.15 மணிக்கு ஒத்தி வைத்தனர். பின்னர் நடந்த விசாரணையில், நாளை (27-03-2024) காலை 9 மணிக்குள் பம்பரம் சின்னம் தொடர்பாகப் பதிலளிக்க தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்நிலையில், பம்பரம் சின்னத்தை ஒதுக்க முடியாது எனத் தேர்தல் ஆணையம் மின்னஞ்சல் மூலம் ம.தி.மு.க. வழக்கறிஞர்களுக்குப் பதில் அளித்துள்ளது. வேண்டுமானால் மதிமுக சார்பில் பம்பரம் சின்னம் ஒதுக்கக் கோரி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் விண்ணப்பிக்கலாம் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பம்பரம் இல்லாவிட்டாலும் தனி சின்னத்தில் தான் போட்டி என்ற முடிவில் ம.தி.மு.க. தீர்க்கமாக இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சின்னம் தொடர்பான வழக்கு இன்று மீண்டும் பிற்பகல் விசாரணைக்கு வர இருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

பிரச்சாரத்தை தொடங்கிய எடப்பாடி; திருச்சியில் தயாராகும் பொதுக்கூட்ட ஏற்பாடு

Published on 24/03/2024 | Edited on 24/03/2024
Edappadi who started the campaign; Organized public meeting in Trichy

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இன்று சேலத்தில் அதிமுகவின் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். அதேநேரம் இன்று திருச்சியில் அதிமுக பரப்புரை பொதுக்கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதிமுகவின் முதல் பரப்புரை கூட்டம் என்பதால், திருச்சி வண்ணாங்கோவில் பகுதியில் மிக பிரம்மாண்டமான மேடை அமைக்கப்பட்டு இருக்கிறது.

பல்லாயிரக்கணக்கானோர் அமரும் வகையில் இருக்கையில் அமைக்கப்பட்டிருக்கின்றன. பரப்புரை கூட்டத்தில் பங்கேற்பதற்காக இன்று மதியம், 1.30 மணியளவில் சேலத்தில் இருந்து காரில் புறப்படும் எடப்பாடி பழனிச்சாமி மதியம், 3.30 மணியளவில் திருச்சியை வந்தடைகிறார். திருச்சியில் உள்ள தனியார் ஓட்டலில் கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். அதன்பிறகு மாலை, 4.40 மணி அளவில் வண்ணாங்கோயில் பரப்புரை கூட்ட திடலுக்கு வருகிறார்.

கூட்டத்தில் பங்கேற்று விட்டு, இன்றிரவு, 8 மணிக்கு விமானம் மூலம் சென்னை புறப்பட்டு செல்கிறார். திருச்சியில் நடைபெறும் பிரம்மாண்ட பரப்புரை பொதுக்கூட்டத்தில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் போட்டியிடும் அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளை சேர்ந்த, 40 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகப்படுத்தி, அவர்களுக்கு எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்யவுள்ளார்.

இந்த மேடையில், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, எஸ்டிபிஐ கட்சி தலைவர் நெல்லை முபாரக், புதிய தமிழகம் கட்சித் தலைவர்  கிருஷ்ணசாமி உள்ளிட்ட தோழமைக் கட்சித் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.