Skip to main content

பா.ஜ.க.வின் எதிர்ப்பு பூமியாக தமிழகம் இருப்பதால் வஞ்சிப்பதா?: கே.எஸ்.அழகிரி 

Published on 18/12/2020 | Edited on 18/12/2020

 

TAMILNADU CONGRESS COMMITTEE KS ALAGIRI STATEMENT

தமிழகம் பா.ஜ.க. வின் எதிர்ப்பு பூமியாக இருப்பதால் 7 கோடி மக்களையும் பிரதமர் மோடி வஞ்சித்து வருகிறார் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம் சாட்டியுள்ளார். 

 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழ்நாட்டில் சமீபத்தில் வீசிய 'நிவர்' புயலாலும், 'புரெவி' புயலாலும் 41 ஆயிரத்து 262 ஏக்கர் நிலத்தில் விவசாயம் மற்றும் தோட்டக்கலை பயிர்கள் சேதமடைந்து விவசாயிகளைப் பாதிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசாங்கமும் குழுவை அனுப்பி பாதிக்கப்பட்ட இடங்களை 2 குழுக்களாகப் பிரிந்து சென்று பார்வையிட்டு தமிழக அரசு அதிகாரிகளுடன் சேர்ந்து கண்துடைப்பு நாடகம் நடத்தப்பட்டிருக்கிறது. தமிழக அரசு தேசிய பேரிடர் மீட்பு நிதியிலிருந்து ரூபாய் 3 ஆயிரத்து 758 கோடி நிதியுதவி மத்திய அரசிடம் கேட்டிருக்கிறது.

 

மாநில பேரிடர் மீட்பு நிதி 75:25 விகிதத்தில் மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்பு உள்ளது. மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த நிதியில் தற்போது ரூபாய் 538 கோடி பற்றாக்குறை நிலையில் உள்ளது. அரசு கஜானாவிலும் பணம் இல்லை. பேரிடர் மீட்பு நிதியிலும் பணம் இல்லை.

 

ஆனால், இயற்கை சீற்றத்தினாலும், வறட்சியினாலும் தமிழகம் பாதிக்கப்படும் போதெல்லாம் மத்திய பா.ஜ.க. அரசிடம் தமிழக அரசு நிதி கேட்பது தொடர்கதையாக நடந்து வருகிறது. ஆனால், மாநில அரசு கேட்ட தொகைக்கும், மத்திய அரசு வழங்கிய நிதியையும் ஒப்பிட்டால் மலைக்கும், மடுவுக்குமான வித்தியாசம் தான் தெரிகிறது.

 

2011-12 ஆண்டில் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது, ‘தானே’ புயல் சேதத்திற்காக பிரதமர் மோடியிடம் கேட்டது ரூபாய் 5,249 கோடி. ஆனால், மத்திய அரசு வழங்கியதோ ரூபாய் 500 கோடி. டிசம்பர், 2015 சென்னை வெள்ளப்பெருக்கின் போது கேட்ட தொகை ரூபாய் 25,912 கோடி. ஆனால், கொடுத்ததோ ரூபாய் 1,940 கோடி. 2016-17 இல் ‘வர்தா’ புயல் சேதத்திற்குத் தமிழக அரசு கேட்டது ரூபாய் 22,573 கோடி. ஆனால் மத்திய அரசு வழங்கியதோ ரூபாய் 266 கோடி. 2017 வறட்சியின் போது கேட்ட தொகை ரூபாய் 39,565 கோடி. ஆனால், கொடுத்ததோ ரூபாய் 1,793 கோடி. 2017-18 இல் ‘ஒக்கி’ புயல் சேதத்திற்குக் கேட்டது ரூபாய் 9,302 கோடி. மத்திய அரசு வழங்கியதோ ரூபாய் 133 கோடி. 2018-19 இல்‘கஜா’புயல் சேதத்திற்கு தமிழக அரசு கேட்டது ரூபாய் 17,899 கோடி. மத்திய அரசு வழங்கியதோ ரூபாய் 1,146 கோடி. கடந்த காலங்களில் தமிழக அரசு மத்திய பா.ஜ.க. அரசிடம் கேட்ட மொத்த நிவாரணத் தொகை ரூபாய் 1,20,500 கோடி. ஆனால், பா.ஜ.க. அரசு 6 கட்டங்களாக வழங்கியதோ ரூபாய் 5,778 கோடி. கேட்ட தொகையில் 5 சதவிகிதத்திற்கும் குறைவாகவே நிவாரண நிதி வழங்கப்பட்டிருக்கிறது. இதுதான் பிரதமர் மோடியின் கூட்டுறவு கூட்டாட்சி.

 

தமிழக அரசு கேட்ட நிவாரணத் தொகையையும், மத்திய அரசு வழங்கிய தொகையையும் ஒப்பிட்டுப் பார்த்தால் ஏணி வைத்தால் கூட எட்டாது. பா.ஜ.க. அரசின் அலட்சியப் போக்கிற்கு என்ன காரணம்? தமிழக அரசைத் துச்சமென மதிப்பது ஏன்? தமிழக மக்கள் மீது பாரபட்சம் காட்டுவது ஏன்? 

 

தமிழகம் பா.ஜ.க. வின் எதிர்ப்பு பூமியாக இருப்பதால் 7 கோடி மக்களையும் பிரதமர் மோடி வஞ்சித்து வருகிறார். கடந்த 2019 மக்களவை தேர்தலில் பிரதமர் மோடிக்கு தமிழக மக்கள் பாடம் புகட்டினார்கள். பா.ஜ.க. அரசால் தமிழகம் தொடர்ந்து வஞ்சிக்கப்படுவதைத் தடுத்து நிறுத்த துணிவற்ற அரசாக எடப்பாடி அரசு திகழ்ந்து வருகிறது. தமிழக முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள் விசாரணை வளையங்களில் சிக்கி மடியில் கனத்துடன் இருப்பதால் மோடி அரசைத் தட்டிக் கேட்கிற துணிவை எடப்பாடி அரசிடம் எதிர்பார்க்க முடியாது.

 

எனவே, மத்திய பா.ஜ.க. அரசின் பழிவாங்கும் போக்கிலிருந்து மக்களைப் பாதுகாக்க, தமிழகத்தில் ஆளும் துணிவற்ற அரசிடம் இருந்து மக்களை மீட்க வருகிற சட்டமன்ற தேர்தல் உரிய வாய்ப்பாக அமையப் போகிறது. அந்த வாய்ப்பை மிகச் சரியாகப் பயன்படுத்தி ஆட்சி மாற்றத்தை உருவாக்குகிற வகையில் பா.ஜ.க. அரசின் வஞ்சக அரசியலைத் தமிழக மக்களிடம் தோலுரித்துக் காட்டுவதே தி.மு.க.- காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் ஒரே நோக்கமாக இருக்க வேண்டும்.' இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 

சார்ந்த செய்திகள்

Next Story

வெளியேறிய விஜயதாரணி; வீடியோ வெளியிட்ட தமிழ்நாடு காங்கிரஸ்

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
The video was released by the Tamil Nadu Congress for Vijayadharani who left from party

கடந்த மூன்று முறையாகத் தொடர்ந்து விளவங்கோடு தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வான காங்கிரஸைச் சேர்ந்த விஜயதாரணி, நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில் பா.ஜ.க.வில் இணையப் போவதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இது, காங்கிரஸ் ஆதரவாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

விஜயதாரணி 2021ல் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றபோது, சட்டமன்ற காங்கிரஸ் குழுத் தலைவர் பதவி கிடைக்கும் என எதிர்பார்த்தாகவும் அது கிடைக்காமல் போக பிறகு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவி கிடைக்கும் என நினைத்ததாகவும், ஆனால் சமீபத்தில் சட்டமன்ற காங்கிரஸ் குழுத் தலைவர் பதவி செல்வப்பெருந்தகைக்கு வழங்கப்பட்டது. இதனையடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டும் கிடைக்காததால் விஜயதாரணி அதிருப்தியில் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி இருந்தன.

முன்னதாகவே அவர் டெல்லியில் முகாமிட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில், தற்போது இன்று (24-02-24) பிற்பகல் 2 மணிக்கு டெல்லியில் பாஜகவில் இணைய உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்நிலையில் சுதாகர் ரெட்டி, மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், மத்திய இணை அமைச்சர் எல். முருகன் ஆகியோர் முன்னிலையில் தற்போது விஜயதாரணி பாஜகவில் இணைந்துள்ளார்.

இது தொடர்பாக, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (பக்கத்தில்) காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, முன்பு பேசிய ஒரு பழைய வீடியோவை பகிர்ந்து விமர்சனம் செய்துள்ளது. அதில் ராகுல் காந்தி, ‘எதற்கும் பயப்படாத அச்சமற்ற உண்மையான போராளிகளை மட்டுமே காங்கிரஸ் விரும்புகிறது. பயப்படுபவர்கள் கட்சியை விட்டு வெளியேறுங்கள், உங்களுக்கு RSS தான் சரியான இடம்’ என்று கூறியுள்ளார். 

Next Story

தமிழக காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவர் நியமனம்; தமிழக முதல்வர் வாழ்த்து

Published on 17/02/2024 | Edited on 18/02/2024
Greetings from the Chief Minister of Tamil Nadu for New Chairman of Tamil Nadu Congress Committee appointed

தமிழக காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக கு. செல்வப்பெருந்தகையை காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் நியமித்து அறிவித்துள்ளார்.

இது குறித்து காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘காங்கிரஸ் தலைவர் கு. செல்வப்பெருந்தகை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல், காங்கிரஸ் தலைவர் எஸ். ராஜேஷ் குமார் தமிழ்நாடு சட்டப்பேரவை காங்கிரஸ் குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகப் பொறுப்பு வகித்து வந்த கே.எஸ். அழகிரியின் பங்களிப்புகளைக் காங்கிரஸ் கட்சி பாராட்டுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக செல்வப்பெருந்தகையை நியமித்ததற்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ‘இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள சகோதரர் செல்வப்பெருந்தகைக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள். கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியைச் சிறப்பாக வழிநடத்தி வெற்றிகள் பல குவித்திட்ட அருமை நண்பர் கே.எஸ். அழகிரியின் எதிர்காலப் பணிகள் சிறக்கவும் - காங்கிரஸ் சட்டமன்றக் குழுத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ராஜேஷ் குமார் அவர்களது செயல்பாடுகள் சிறக்கவும் வாழ்த்துகிறேன். இணைந்து பயணிப்போம்! இந்தியாவை வெற்றிபெறச் செய்வோம்!’ என்று பதிவிட்டுள்ளார்.