Tamil Nadu Government Information 'Tamil Putulavan' scheme

தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை சார்பில் ‘ஐம்பெரும் விழா’ கடந்த ஜூன் 14ஆம் சென்னையில் உள்ள ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கி விழா உரையாற்றினார்.

Advertisment

அப்போது அவர், “புதுமைப் பெண் திட்டங்களைப் பல மாணவிகள் பாராட்டினார்கள். அந்த மகிழ்ச்சி மாணவர்களுக்கும் கிடைக்கவே ‘தமிழ் புதல்வன்’ திட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி வரும் ஆகஸ்ட் மாதம் முதல் மாணவர்களுக்கு ‘தமிழ் புதல்வன்’ திட்டத்தின் கீழ் ரூ.1,000 வழங்கும் திட்டம் தொடங்கப்படும்” எனப் பேசினார்.

Advertisment

இந்த ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கலின் போது அரசுப் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்து, உயர்கல்வியில் சேரும் மாணவர்களின் கல்வியை மெருகேற்ற ‘தமிழ்ப் புதல்வன்’ என்ற திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் மாதம்தோறும் மாணவர்களுக்கு ரூ.1000 வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். இதற்காக ரூ.360 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் எனத் தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் ‘தமிழ் புதல்வன்’ திட்டத்திற்கான பணிகளை தமிழக அரசு தொடங்கியுள்ளது. இந்த திட்டத்தில் மாணவர்கள் பயன்பெற ஆதார் எண் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தகுதியான மாணவர்கள் ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை வைத்திருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது. இது தொடர்பான தகவலை மாணவர்களுக்கு தெரியும் வகையில் கல்வி நிறுவனங்கள் விளம்பரப்படுத்த வேண்டும் எனத்தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

Advertisment