Tamil Nadu Chief Minister orders Relief to the families of those who drowned in the river at thirupur

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த 20 பேர் கொண்ட குழு கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்திற்கு சுற்றுலா சென்றுள்ளனர்.அங்கு சென்றுவிட்டு மதுரை திரும்பும் பொழுது திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் உள்ள அமராவதி ஆற்றில் குளிக்க சென்றனர். அப்போது, அங்கு எதிர்பாராதவிதமாக மூன்று பேர் ஆற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. மேலும், இந்த சம்பவம் குறித்து தாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில், இறந்து போனவர்கள் பாக்கியராஜ் (39), சின்ன கருப்பு (31) , ஹரி (16) ஆகியோர் என்பது தெரியவந்தது.

Advertisment

இந்த நிலையில், ஆற்றில் மூழ்கி இறந்து போன மூன்று பேரின் குடும்பத்தினருக்கு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரண நிதி வழங்கி உத்தரவிட்டுள்ளார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘மதுரை மாவட்டம் ஆலங்குளத்தைச் சேர்ந்த பாக்கியராஜ், சின்ன கருப்பு மற்றும் சிறுவன் ஹரி ஆகிய மூவரும் சுற்றுலா சென்றுவிட்டு தங்கள் ஊருக்கு திரும்பும் வழியில் திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம், தாராபுரம் தெற்கு கிராமம், மதுரை நெடுஞ்சாலை அபூர்வா ஹோட்டல் அருகே உள்ள அமராவதி ஆற்றில் புதிய ஆற்றுப் பாலம் அருகே நேற்று (16.1.2024) மாலை குளிக்கச் சென்றபோது எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார்கள் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகவும் வேதனையடைந்தேன்.

Advertisment

இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.