Skip to main content

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பக்ரீத் வாழ்த்து!

Published on 16/06/2024 | Edited on 16/06/2024
Tamil Nadu Chief Minister MK Stalin wishes Bakrit

பக்ரீத் பண்டிகை நாளை(17.06.2024) கொண்டாடப்படுவதையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பக்ரீத் திருநாள் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார். அதில், “நபிகள் நாயகம் காட்டிய வழியில் சமத்துவம் சகோதரத்துவம் அன்புநெறி ஆகியவற்றைப் பின்பற்றி வாழும் இசுலாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது பக்ரீத் பெருநாள் வாழ்த்துகள். ஈட்டிய பொருளில் ஒரு பகுதியை ஏழை எளியோர் இன்னல் தீர வழங்கி மகிழ்வதை 'ஈத்துவக்கும் இன்பம்' என்பார் அய்யன் திருவள்ளுவர். அந்த இன்பத்தை எய்திட இசுலாமியப் பெருமக்களுக்கு வழிகாட்டுவதே இந்தப் பக்ரீத் பெருநாள்! நபிகள் நாயகத்தின் போதனைகள் அன்றாட வாழ்வில் மனிதர்கள் கடைப்பிடிக்க வேண்ட அமைந்திருக்கின்றன. அறவழிக்கான அறிவுரைகளாகவே நபிகள் நாயகத்தின் அத்தகைய அறிவுரைகளைப் பின்பற்றி வாழ்கின்ற இசுலாமிய மக்கள் அனைவரும் இந்தப் பக்ரீத் பெருநாளை இனிதே கொண்டாடி மகிழ எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அதே போன்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள பக்ரீத் திருநாள் வாழ்த்துச் செய்தியில், “இறை நம்பிக்கை உள்ளவர்கள் எந்தத் தியாகத்திற்கும் தயங்கமாட்டார்கள் என்ற தத்துவத்தைப் பறைசாற்றும் திருநாளாம் பக்ரீத் திருநாளைக் கொண்டாடும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த தியாகத் திருநாள் நல்வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன். இறைவனின் கட்டளையை ஏற்று தனது ஒரே மகன் இஸ்மாயிலை தியாகம் செய்ய முன்வந்த இறைத் தூதர் இப்ராஹிம் அவர்களின் ஈடு இணையற்ற தியாகத்தை நினைவு கூரும் தினமே பக்ரீத் திருநாளாகும். 

Tamil Nadu Chief Minister MK Stalin wishes Bakrit

இறைவனின் விருப்பத்திற்குக் கீழ்ப்படிந்து வாழ்வதே சிறந்த வாழ்க்கை நெறி என்று உலகிற்கு பறைசாற்றும் பொன்னாள் இந்நாளாகும். நாட்டின் வளர்ச்சிக்கும், சமுதாய முன்னேற்றத்திற்கும் தடைக் கற்களாகத் திகழ்கின்ற அதர்மம், அநீதி, சூழ்ச்சி, வன்மம் ஆகியவற்றை வேரோடும், வேரடி மண்ணோடும் ஒழித்து, நற்சிந்தனைகளும், நன்னெறிகளும் வெற்றிபெற எண்ணற்றத் தியாகங்களும், அர்ப்பணிப்புகளும் தேவைப்படும். இறைத் தூதரின் தியாகங்களை மனதில் நிலைநிறுத்தி, மனித நேயம் தழைக்க அர்ப்பணிப்பு உணர்வோடு பாடுபடுவோம் என இந்த பக்ரீத் திருநாளில் நாம் அனைவரும் உறுதி ஏற்போம்.

உலகில் அன்பும், அமைதியும் தழைத்தோங்கிட, அனைவரும் மனிதநேயத்துடனும், சகோதரத்துவத்துடனும், தியாகச் சிந்தனையுடனும் வாழ்ந்திட வேண்டும் என்று கூறி, அனைவரது வாழ்விலும் வளமும், நலமும் பெருகிட வேண்டும் என்ற என்னுடைய விருப்பத்தினைத் தெரிவித்து, இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரது தியாக வழியில், எனது இனிய பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்

 

Next Story

அதிமுகவினர் சட்டப்பேரவையில் இருந்து வெளியேற்றம்! 

Published on 25/06/2024 | Edited on 25/06/2024
ADMK expelled from the Legislative Assembly

சென்னை தலைமைச் செயலகத்திலுள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் தமிழக சட்டசபை பேரவைக் கூட்டம் கடந்த 20 ஆம் தேதி (20.06.2024) தொடங்கியது. அப்போது மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சட்டப்பேரவை கூட்டத் தொடரின் இரண்டாம் நாளில் (21.06.2024) இருந்து பல்வேறு துறைகளின் மீதான மானியக் கோரிக்கைகளின் மீது விவாதமும், வாக்கெடுப்பும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இன்று (25.06.2024) காலை தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் தொடங்கியது. அப்போது கேள்வி நேரத்தை ஒத்திவைத்து விட்டு கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்த கோரி அதிமுக உறுப்பினர்கள் மூன்றாவது நாளாக அமளியில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து அவைக்கு குந்தகம் விளைவித்ததால் அதிமுக உறுப்பினர்களை வெளியேற்ற சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார். மேலும் இன்று ஒரு நாள் பேரவை நடவடிக்கைகளில் கலந்து கொள்ள அதிமுக உறுப்பினர்களுக்குத் தடை விதிக்கப்பட்டது. 

ADMK expelled from the Legislative Assembly

இது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டபேரவையில் பேசுகையில், “எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது, அவர் மீது போடப்பட்ட வழக்கில் சிபிஐ மீது நம்பிக்கை இல்லை எனக் காரணம் காட்டி, அதற்குத் தடை உத்தரவு வாங்கிய வீராதி வீரரான எதிர்க்கட்சித் தலைவர்தான் தற்போது கள்ளக்குறிச்சி விவகாரத்தில் சிபிஐ விசாரணை வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார். சட்டப்பேரவையில் திட்டமிட்டு கலவரத்தை ஏற்படுத்த அதிமுக உறுப்பினர்கள் முயற்சி செய்கின்றனர்.

நாடாளுமன்ற மக்களைவைத் தேர்தலில் திமுக கூட்டணி 40க்கு 40 தொகுதிகளில் பெற்ற வெற்றி அதிமுக கண்களை உறுத்துகிறது. அதைத் திட்டமிட்டு திசை திருப்ப இது போன்ற பிரச்சனைகளை அதிமுகவினர் கிளப்புகின்றனர்” எனத் தெரிவித்தார். முன்னதாக கள்ளக்குறிச்சி சம்பவத்தைக் கண்டித்து முன்னதாக இன்றும் கருப்பு சட்டை அணிந்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவைக்கு வந்திருந்தனர். 

Next Story

“கள்ளச்சாராய விற்பனைக்கு ஏலம் நடந்துள்ளது” - கண்டன ஆர்ப்பாட்டத்தில் ராஜேந்திரபாலாஜி 

Published on 24/06/2024 | Edited on 24/06/2024
 Rajendra Balaji said An auction has been held for t sale of illicit liquor

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களுக்குப் பொறுப்பேற்று, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவி விலக வலியுறுத்தி, விருதுநகரில் அதிமுக நடத்திய கண்ட ஆர்ப்பாட்டம் நடந்தது. 

அதில் பேசிய முன்னாள் அமைச்சர்  கே.டி.ராஜேந்திரபாலாஜி, “கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 54 பேர்  உயிரிழந்துள்ளனர். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மருத்துவமனையில் 150- க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் பலர் கவலைக்கிடமாக உள்ளனர். திமுக ஆட்சியில் மு.க.ஸ்டாலின்  முதலமைச்சராகப் பதவியேற்ற பின்பு கள்ளச்சாராய விற்பனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதிமுக பொதுச்செயலாளர் இ.பி.எஸ். தொடர்ந்து சட்டமன்றத்தில் குரல் எழுப்பி வருகிறார். போதைப் பொருள், கள்ளச்சாராயம்  தமிழ்நாட்டில் அதிகரித்து வருகிறது. தமிழக மக்களின் கண்ணீர் ஆட்சியாளர்களுக்குத் தெரியவில்லை. உலகமே உற்றுப்பார்க்கின்ற வகையில்  தமிழ்நாடு பேசுபொருளாகிவிட்டது.

அப்பாவி பொதுமக்கள் உடல் வலியைப் போக்குவதற்கு பழக்கப்பட்டுப்போன  மது அருந்தும் பழக்கத்தை விடமுடியாதவர்களாக உள்ளனர். விலை  குறைவான கள்ளச்சாராயத்தை கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதி மக்கள்  வாங்கிக் குடித்துள்ளனர். அதனால், ஊரே இன்று சுடுகாடாக மாறிவிட்டது.  தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்பதே முதலமைச்சருக்குத் தெரியவில்லை.

நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளில் தோற்றாலும், அதிமுக ஓட்டு சதவீதத்தில் அதிகம் பெற்றுள்ளது. அதிமுக வெற்றியை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது.  திமுக தோல்வியை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. திமுகவுக்கு தனித்து நிற்கும் தைரியம் கிடையாது. கூட்டணிக் கட்சி வைத்து ஒரு தற்காலிக வெற்றியைப் பெற்றிருக்கிறார்கள். அப்படி இருந்தும் நாம் விருதுநகர் பாராளுமன்ற தொகுதியிலும் தென்காசி தொகுதியிலும் நல்ல வாக்குகளை பெற்றுள்ளோம். விருதுநகர் தொகுதியில் 4379  ஓட்டு வாக்கு வித்தியாசத்தில்தான் வெற்றியை இழந்திருக்கிறோம் அதிலும்  பிரச்சனை இருக்கிறது. வெற்றியை நாம் தொடவில்லை என்று யாரும் சொல்ல முடியாது. வெற்றி நம் பக்கம்தான் இருக்கிறது. அதிமுக ஆட்சி அமைத்து இ.பி.எஸ். மீண்டும் முதலமைச்சராவார்.  நாம் ஆட்சிக்கு வந்தவுடன்,  நமக்கு  எதிராகச் சதி செய்த அனைவரும் சட்டத்திற்கு முன்பாக நிறுத்தப்படுவார்கள்.  என்றைக்கும் அதிமுக காரன் கோழை அல்ல. அதிமுகவில் உள்ளவர்களின்  நாடி  நரம்புகளில்  எம்ஜிஆர், ஜெயலலிதா இருவருடைய வீரம் இருப்பதால் எந்தக்  கொம்பனாலும் அதிமுகவை அழிக்க முடியாது.  

முதல்வர் ஸ்டாலின் ஏன் பதவி விலக வேண்டும் என்பது குறித்து இ.பி.எஸ். விளக்கமாகப் பேசியிருக்கிறார். கள்ளக்குறிச்சி கல்வராயன் மலைப்பகுதியில் காவல்துறையினர் ஆய்வு செய்யச் சென்றபோது எங்கு பார்த்தாலும் கள்ளச்சாராய ஊறல்கள் தான். இந்தக் கள்ளச்சாராயத்தைக் குடிப்பதால் மக்கள் உயிர் போகுமென்பது இந்த அரசுக்கு தெரியாதா ? கல்வராயன் மலை இன்று சுற்றுலா தலமாக மாற்றப்படும் என்று முதலமைச்சர் அறிவிப்பு வெளியிடுகிறார்.கல்வராயன் மலை இன்று கள்ளச்சாரய மலை ஆகிவிட்டது. காவல்துறையினரின் கைகள் யாரால் கட்டப்பட்டுள்ளது? அந்தந்த பகுதிகளில் சாராயம் விற்பனை செய்ய ஏலம் விடப்பட்டிருக்கிறது. இதைக் கண்டுகொள்ளாமல் இருப்பதற்கு காவல்துறை அதிகாரிக்கு அழுத்தம் கொடுத்த  அரசியல்வாதி  யார்? மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை  கண்காணிப்பாளரை மாற்றிவிட்டால் இந்தப் பிரச்சனை முடிவுக்கு வந்துவிடுமா? இதற்கு நடவடிக்கை எடுக்காமல் விட்டது யார்? கண்டுகொள்ளாமல் விடச் சொன்னது யார்? எனவே,  காவல்துறையைக்  கையில் வைத்திருக்கும் முதல்வர் ஸ்டாலின் தான் இதற்கு முழு பொறுப்பேற்று பதவியை ராஜினாமா செய்ய  வேண்டும்.

முதல்வர் ஸ்டாலின் எதிர்க்கட்சியாக இருந்தபோது நாங்கள் ஆட்சிக்கு  வந்தவுடன் மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்று சொன்னாரா?  இல்லையா?  தற்பொழுது அதைச் செய்தாரா ? அவரது தங்கை கனிமொழி இளம் விதவைகள்  தமிழ்நாட்டில் அதிகமாக உள்ளனர்.  இதற்குக் காரணம் இ.பி.எஸ். என்றும்,  அதனால் திமுகவுக்கு ஓட்டு போடுங்கள் என்றும் பேசினார்.  திமுக ஆட்சிக்கு வந்து மூன்று வருடங்கள் முடிந்த நிலையில், முதல்வர்  ஸ்டாலின் இதுவரைக்கும்  மதுவிலக்கை அமல்படுத்தினாரா?  இதை விட்டுவிட்டு கள்ளச்சாராயம் குடித்து  இநந்தவருக்கு ரூபாய் 10 லட்சம் தருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு  சிவகாசி அருகே பட்டாசு வெடிவிபத்தில் 10 பேர் இறந்ததற்கு ரூபாய் மூன்று  லட்சம் தான் கொடுத்தார்.  நாட்டை காக்கும் ராணுவ வீரர் மரணம் அடைந்தால்  ரூபாய் 5 லட்சம்தான் தருகிறார். இந்த நடவடிக்கைகளைப்  பார்க்கும்போது  கள்ளச்சாராயத்தை  நீங்களே ஊக்கப்படுத்துவது போல் தெரிகிறது.  

பட்டாசு  தொழிற்சாலை வெடி விபத்தில் இறந்தவர்களுக்கு அரசு  30 லட்சம் ரூபாய் தர வேண்டும். ஊர் மக்கள் சந்தோஷமாக இருக்க,  தனது அழகிய மேனியைக் கருக்கி உயிரை விடுபவன் தான் பட்டாசுத் தொழிலாளி. அவர்களுக்கு கவலை கிடையாதா? அவர்களது பிள்ளைகளின் படிப்புக்கு வழியில்லையே? ஆனால் கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களைத் தேடித்தேடிச் செல்கிறீர்கள். சட்ட விரோதமாக தொழில் செய்தால் ரூபாய் 10 லட்சம் தருகின்றீர்கள். சட்டத்திற்கு  உட்பட்டு தொழில் செய்து இறந்தால் ரூபாய் 3 லட்சம் தருகின்றீர்கள். இது எந்த விதத்தில் நியாயம்?  இங்கு சர்வாதிகார ஆட்சி நடக்கிறது.  கேட்பதற்கு ஆள் இல்லை. 40 தொகுதியிலும் ஜெயித்து விட்டோம்.  அடுத்த சட்டமன்றத்திலும் 234 தொகுதிகளில் வென்று விடுவோம் என்ற அகம்பாவத்தில் திமுக இருந்து  வருகிறது. மக்கள் என்ன ஏமாளியா? கோமாளியா? மக்கள் பார்த்துக்  கொண்டுதான் இருக்கிறார்கள்.

சரியான நேரத்தில் தக்க பதிலடி கொடுப்பார்கள். நாடாளுமன்றத் தேர்தல் முக்கியமில்லை என்பதால், சட்டமன்றத்தில்  அதிமுகவுக்கு வலுவாக ஆதரவளிப்பார்கள். வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி 234 தொகுதியிலும் எளிதாக வெற்றி பெறும் .  இந்தக் கள்ளச்சாராய விஷயத்தில் திமுக காரனுக்குத் தொடர்பு உள்ளது என்று  இ.பி.எஸ். கூறி வருகிறார்.  இதை விசாரிக்க திமுக அரசு முன்வரவில்லை.  ஒருமுறை பெருந்தலைவர் காமராஜர்  ‘கொலை செய்பவனால் ஒரு குடும்பம்  மட்டுமே பாதிக்கும். ஆனால் ஊரில் கள்ளச்சாராயம் விற்பவனால் பல்வேறு  குடும்பங்கள் நாசமாகப் போகும்.’ என்று கடுமையாகக் கண்டித்துள்ளார். 

எனவே, கள்ளச்சாராயத்தைத் தடுக்கத் தவறிய முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனடியாக பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இதுதான் அடித்தட்டு மக்களின்  கோரிக்கை, பொதுமக்களின் கோரிக்கை, அதிமுகவின் கோரிக்கை,  இபிஎஸ்ஸின் கோரிக்கை, நல்ல மனிதர்களின் கோரிக்கை. கள்ளச்சாராயத்தால் பல உயிர்களை இழந்த கள்ளக்குறிச்சிக்கு இதுவரை மு.க.   ஸ்டாலின் செல்லவில்லை. ஏழைகளின் உயிர் என்ன அவருக்குக் கரும்பா? தப்போ, சரியோ, விவரம் தெரியாமல் இறந்தவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்லக்கூட முதல்வர் போகவேண்டாமா? இந்த விஷயத்தில் 20 பேர் தான் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள் என்று சொல்கிறார்கள். இன்னும்  நிறையக் குற்றவாளிகள் கைது செய்யப்படாமல் உள்ளனர். எனவே அவர்களையும் உடனடியாக கைது செய்ய வேண்டும்.” என்றார்.