
விசைப்படகு உரிமையாளர்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகை அறிவித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லுகையில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் மீனவர்கள் கைது செய்யப்படுவதும், படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளுக்குத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார் .
இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த படகுகளின் உரிமையாளர்களுக்கு இந்த நிவாரண தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் பயன்படுத்த இயலாத நிலையில் உள்ள தமிழகத்தைச் சேர்ந்த 125 படகுகளுக்கு நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. 108 விசைப்படகு உரிமையாளர்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும், 17 நாட்டுப்படகு உரிமையாளர்களுக்கு தலா 1.5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் வடகிழக்கு பருவ மழையால் சேதமடைந்த மீன்பிடி படகு மற்றும் உபகரணங்களுக்கு இழப்பீடாக மொத்தமாக 5 கோடியே 66 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.