Skip to main content

சிறுவன் கொலை வழக்கு; குற்றவாளிக்கு மரண தண்டனை குறைப்பு 

Published on 22/03/2023 | Edited on 22/03/2023

 

Supreme Court reduced the sentence accused by boy case

 

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகேயுள்ள கார்குடல் கிராமத்தைச் சேர்ந்த கொளஞ்சிநாதன், மகேஸ்வரி தம்பதியரின் மகன் சுரேஷ்(வயது7). கடந்த 2009ம் ஆண்டு கொளஞ்சிநாதன் வெளிநாட்டில் வேலை செய்து வந்தார். அப்போது சுரேஷ் விருத்தாசலம் பெரியார் நகரில் உள்ள மெட்ரிக் பள்ளியில் 2 ஆம் வகுப்பு படித்து வந்தபோது பள்ளிக்கு சொந்தமான வேனில் சென்று விட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தான். 27.07.2009 அன்று சுரேஷ் பள்ளிக்குச் சென்றுவிட்டு வேனிலிருந்து இறங்கி வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தபோது அவனை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் கடத்திச் சென்றனர். மகன் வீடு திரும்பாததால் மகேஸ்வரி கம்மாபுரம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 

 

அன்றைய மறுநாள் மகேஸ்வரியின் செல்போனை தொடர்பு கொண்ட மர்ம நபர் சுரேஷை கடத்தி வைத்திருப்பதாகவும் அவனை விடுவிக்க வேண்டும் என்றால்  5 லட்சம் தர வேண்டும், போலீசுக்குப் போனால் அவனை உயிரோடு பார்க்க முடியாது என்று மிரட்டினான். இதையடுத்து போலீசார் தனிப்படை அமைத்து சுரேஷை மீட்கும் முயற்சிகளில் இறங்கினர். அதனைத் தொடர்ந்து அடிக்கடி மகேஸ்வரியுடன் பேசிய மர்ம நபர் பேசிய தொலைப்பேசிகள், செல்போன் நம்பர்களை வைத்து அந்த நபர் எங்கிருந்து பேசினான் என்பதை போலீசார் கண்டுபிடித்து பின் தொடர்ந்தனர். முதலில் திட்டக்குடியில் உள்ள ஒரு காயின்பாக்ஸ் ஃபோனில் இருந்து அந்த நபர் பேசினான். இதையடுத்து போலீசார் அந்தப் பகுதியில் மாறுவேடத்தில் கண்காணித்தனர். அப்போது அந்த நபர் இருப்பிடத்தை மாற்றி ரூ.5 லட்சத்துடன் பெரம்பலூர் வருமாறு மகேஸ்வரியிடம் கூறினான்.

 

இதனால் மகேஸ்வரியும் தனிப்படை போலீசாரும் பெரம்பலூர் சென்றனர். ஆனால் கடத்தல்காரனிடமிருந்து வேறு எந்தத் தகவலும் வரவில்லை. அதே நேரத்தில் மகேஸ்வரியின் உறவினரான பாலாயி என்பவரும் சுந்தரராஜன் என்ற அவரது ஆண் நண்பரும் பெரம்பலூரில் சுற்றியபடி மகேஸ்வரியை கண்காணித்தனர். இதைக் கண்டுபிடித்த போலீசார் அந்த இருவரையும் மடக்கிப் பிடித்து விசாரித்தபோது சுரேசை கடத்தி சாக்கு மூட்டையில் கட்டி பெரம்பலூர் அருகே உள்ள குண்டலம் ஏரியில் வீசியதாகத் தெரிவித்தனர்.  இதையடுத்து அங்கு விரைந்த போலீசார் ஏரிக்குள் சாக்கு மூட்டையில் கட்டப்பட்டுக் கிடந்த மாணவனின்  உடலை மீட்டனர். இந்த வழக்கில் கம்மாபுரம் போலீசார்,  சுந்தரராஜன்(25), பாலாயி(34) ஆகியோரை கைது செய்தனர்.

 

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று கடந்த 2010 செப்டம்பர் 30 ஆம் தேதி அன்று மரண தண்டனை உறுதி செய்தது. அதனைத் தொடர்ந்து இந்த தண்டனை 2013 ஆம் ஆண்டு பிப்ரவரி 5 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து சுந்தரராஜன் தனது தண்டனையைக் குறைக்க மேல்முறையீடு செய்திருந்தார். இதன் தீர்ப்பு நேற்று வெளியானது அதில், அவர் குற்றம் செய்தபோது அவருக்கு 23 வயது. மற்றும் 2009 முதல் சிறையில் இருக்கிறார். 2013ல் சிறையிலிருந்து தப்பிக்கும் முயற்சியைத் தவிர, அவரது நடத்தை திருப்திகரமாக இருந்தது. இதன் காரணமாக அவரது மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டு நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. மரண தண்டனையின் விளிம்பில் இருந்தவருக்கு தண்டனை குறைக்கப்பட்டு ஆயுள் தண்டனையாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“எதிரணியாக இருந்தாலும் அடையாளம் காட்டுங்கள் வாக்கு சேகரிக்கிறேன்” - தங்கர்பச்சான்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Cuddalore Constituency pmk  candidate director Thangabachan launched  campaign

கடலூர் தொகுதி பாமக வேட்பாளர் இயக்குநர் தங்கபாச்சன் அவரது மாந்தோப்பில் பிரச்சாரத்தை துவக்கி பாமக மற்றும் கூட்டணி கட்சியினரை உற்சாகப்படுத்தினார்.

கடலூர் மக்களவை தொகுதி பாமக வேட்பாளர் இயக்குநர் தங்கர்பாச்சன் செவ்வாய்க்கிழமை அவரது சொந்த ஊரான பத்திரக்கோட்டையில் உள்ள அவரது மாந்தோப்பில் தேர்தல் பிரச்சாரத்தை துவக்கினார். அப்போது அவர் பேசியதாவது கும்பல், கும்பலாக கூடி பேசாமல், தனித்தனியாக வீடு, வீடாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட வேண்டும். இந்த தேர்தல் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும், என்னிடம், எதிரணியராக இருந்தாலும் அடையாளம் காட்டுங்கள், அவர்களிடம் நான் பேசி வாக்கை பெறுகிறேன்.

நான் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக பாட்டாளி மக்கள் கட்சியுடன் தொடர்பில் இருந்து வருகிறேன். தற்போது  அரசியலுக்காக வெளியே வந்துள்ளேன். பாட்டாளி மக்கள் கட்சியின் வெற்றிக்கு அனைவரும் உறுதி ஏற்க வேண்டும். சமூக வலைத்தளங்களில் பரப்புவதை மட்டும் நமது நோக்கமாக இருக்கக் கூடாது, அது வாக்காக மாறாது. கட்சியின் கொள்கைகளை மக்களிடத்தில் கொண்டு போய் சேர்த்தால் பல லட்சம் வாக்குகளாக மாறும். இந்தத் தொகுதியில் அன்புமணி மைத்துனர் நிற்பதாக கூறி வருகிறார்கள். யார் நிற்பதை பற்றியும் கவலைப்பட தேவையில்லை. தேர்தல் பணியை மேற்கொள்ளுங்கள் என்றார். இவருடன் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜெகன் மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Next Story

கடலூர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Cuddalore Parliamentary Constituency Congress candidate filing nomination

கடலூர் பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியில் திமுக தலைமையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் எம்.கே.விஷ்ணு பிரசாத் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.  இதனைத் தொடர்ந்து இவர் கடலூர் மாவட்டத்தில் உள்ள தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர், தொழிலாளர் நலத்துறை அமைச்சர், காங்கிரஸ் கட்சியினர், கூட்டணி கட்சியினர் உள்ளிட்ட அனைத்து முக்கிய நிர்வாகிகளையும் சந்தித்து ஆதரவு திரட்டினார்.

இதனைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை மதியம் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் அலுவலரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். இவருடன் தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம், தமிழக தொழிலாளர் நலன் மற்றும் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ கணேசன் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் கே எஸ் அழகிரி, காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச் செல்வன் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதனைத் தொடர்ந்து  வேட்பாளர் வேட்பாளர் எம். கே. விஷ்ணு பிரசாத் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “கடலூர் பாராளுமன்ற தொகுதியான நெய்வேலி சட்டமன்ற தொகுதியில் உள்ள என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் வெளிமாநிலத்தில் உள்ளவர்கள் அதிக அளவில் பணியில் உள்ளனர். இதில் தமிழகத்தில் உள்ளவர்களை பணியாற்ற நடவடிக்கை எடுப்பேன். மேலும் கடலூர் தொகுதிக்கு நான் புதியது என்றாலும் இங்குள்ள அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் மற்றும் சி.வெ கணேசன் ஆகியவரின் அறிவுறுத்தல் படி  தேவையான அனைத்து திட்டங்களையும் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்வேன்” என கூறினார்

இந்நிகழ்வில் எம்எல்ஏக்கள் கடலூர் ஐயப்பன்,  நெய்வேலி சபா ராஜேந்திரன், விருதாச்சலம் ராதாகிருஷ்ணன், கடலூர் மாநகராட்சியின் துணை மேயர் தாமரைச்செல்வன், திமுக நகர செயலாளர் ராஜா மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.