Skip to main content

ரஜினிக்கு பாராட்டு விழா; உற்சாகத்தில் ரசிகர் மன்றத்தினர்

Published on 27/02/2023 | Edited on 27/02/2023

 

superstar rajini function preparedness in vellore district 

 

சென்னையில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட ரஜினி ரசிகர் மன்றத்தின் சார்பில் மார்ச் 26 ஆம் தேதி பிரமாண்டமான விழா நடத்துகின்றனர். இதற்காக சென்னையின் 5 மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் இரண்டு கட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதனிடையே பிப்ரவரி 26ஆம் தேதி வாலாஜாவில் ஒரு திருமண மண்டபத்தில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டச் செயலாளர் சோளிங்கர் ரவி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில் 200க்கும் அதிகமான மன்றத்தின் மாநகர, ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ரஜினிக்கு சென்னையில் நடைபெறும் பாராட்டு விழா பொதுக்கூட்டத்தில் ரசிகர்கள் திரளாகக் கலந்து கொள்ள வேண்டும் என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

 

விழாவை எப்படியெல்லாம் சிறப்பிக்கலாம் என கலந்தாலோசனை நடத்தினர். ரஜினிக்கு நடைபெறும் பாராட்டு விழா நிகழ்ச்சி நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியாகவும் நடைபெறும் என்கிறார்கள் ரஜினி ரசிகர் மன்றத்தினர். வறுமை நிலையில் உள்ள ரஜினி ரசிகர்கள் குடும்பத்தினருக்கு அரசியல் கட்சிகள், பிற நடிகர்கள் ஆச்சரியப்படும் அளவில் நலத்திட்ட உதவிகள் வழங்கவுள்ளனர். இதற்கான வேலைகள் 90 சதவிகிதம் முடிந்த நிலையில் இதுகுறித்து ரஜினிக்கு தெரியப்படுத்தியுள்ளனர். அவர் அதனைப் பார்த்தும், கேட்டும் ஆச்சரியமடைந்தவர், மகிழ்ச்சியடைந்து விழாவுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளார்.

 

இந்த நிகழ்ச்சி சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெறும் எனக் கூறப்படுகிறது. தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான ரஜினி ரசிகர்கள் கலந்து கொள்வதோடு, திரை பிரபலங்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்த நிகழ்ச்சிக்கான டைட்டில் வெளியிடும் நிகழ்ச்சியும் சினிமா டைட்டில் வெளியிடுவது போன்று திரை நட்சத்திரங்களை வைத்து வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது. அரசியலுக்கு வரமாட்டேன் என ரஜினிகாந்த் அறிவித்த பின்னர், அவரது மன்ற நிர்வாகிகள் பலர் வேறு கட்சிகளுக்கு சென்றனர். அரசியலுக்கு வருவார் என எதிர்பார்த்த பெரும்பாலான ரசிகர்கள் சோர்ந்து போயினர். குறைந்த ரசிகர்களே தலைவர் அரசியலுக்கு வராததே நல்லது என அவரது முடிவுக்கு கட்டுப்பட்டு, என்றும் அவரே எங்கள் தலைவர் எனக் கொண்டாடுகின்றனர். அரசியல் முடிவு, ரஜினிக்கும் ரசிகர்களுக்கும் பாலமாக இருந்த மன்றத்தின் தலைமை நிர்வாகி சுதாகர் மறைவு போன்றவற்றால் சோர்ந்து போய் உள்ள ரஜினி ரசிகர்களுக்கு இந்த பாராட்டு விழா மற்றும் நலத்திட்ட உதவி நிகழ்ச்சி மீண்டும் புத்துணர்ச்சியை தரும் என்கிறார்கள் மன்ற நிர்வாகிகள். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரூ. 20 லட்சம் வரை சொத்து சேர்த்த பஞ்சாயத்து கிளார்க்; லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Anti-corruption department raids panchayat clerk house

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த திருவலம் பகுதியை சேர்ந்தவர் பிரபு. இவர் காட்பாடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் பஞ்சாயத்து கிளார்க்காக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் தற்போது பொன்னை அடுத்த பாலேகுப்பத்தில் பஞ்சாயத்து கிளார்க்காக பணியில் உள்ளார்.

2011 - 2017 ஆகிய இடைப்பட்ட காலகட்டத்தில் பணியின் போது வருமானத்திற்கு அதிகமாக சுமார் 20 லட்சம் வரை சொத்து சேர்த்ததாக வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையினர் பிரபு மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனை அடுத்து இன்று வேலூர் லஞ்ச ஒழிப்புத் துறையினர் காட்பாடி அடுத்த திருவலம் பகுதியில் உள்ள பஞ்சாயத்து கிளார்க் பிரபு என்பவரின் வீட்டில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த சோதனையில் வங்கி பரிவர்த்தனை மற்றும் சொத்து தொடர்பான ஆவணங்கள், பிரபுவின் வருமானம் தொடர்பான ஆவணங்களை கைப்பற்றியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

வேட்பாளரை வசைபாடும் நிர்வாகிகள்; அடுத்தடுத்து வெளியாகும் ஆடியோவால் பரபரப்பு

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Argument to party officials with Vellore candidate AC Shanmugam

தமிழ்நாட்டில் 39 நாடாளுமன்றத் தொகுதிகளில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. வாக்குப்பதிவு நடந்து முடிந்த பின் சில இடங்களில் உட்கட்சி மோதல் உச்சத்துக்குச் சென்றுள்ளது. வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் பாஜகவின் தாமரை சின்னத்தில் புதிய நீதி கட்சியின் நிறுவனர் ஏசி சண்முகம் போட்டியிட்டார். தமிழ்நாட்டில் பணமழை பொழிந்த சிலதொகுதிகளில் மிக முக்கியமானது வேலூர் நாடாளுமன்ற தொகுதி. வாக்காளர்களுக்கு தலா 500 ரூபாய், ஒரு பூத்துக்கு 50 ஆயிரம் ரூபாய் என சுமார் 100 கோடிக்கு மேல் தேர்தல் களத்தில் செலவு செய்துள்ளாராம் ஏசி சண்முகம்.

பாஜக நிர்வாகிகள், பாமக நிர்வாகிகள் மாவட்டம் ஒன்றியம் நகர கிளை வரை லட்சங்களில் தேர்தல் பணிக்காக ஏ.சி.சண்முகத்திடம் பணம் வாங்கி உள்ளனர். இப்படி பணம் வாங்கியவர்கள் வாக்குப்பதிவு முடிவுக்கு பின்னர் பங்கு பிரிப்பதில் அடித்துக்கொண்டு இருக்கின்றனர். தேர்தலுக்கு முன்பே ஏ.சி.சண்முகத்திடம் பணம் வாங்குவதில் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனைகள் குறித்து சில ஆடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. வாக்குப்பதிவு முடிவுக்கு பின்னர் இப்பொழுது ஏ.சி. சண்முகத்தை கடுமையான முறையில் விமர்சிக்கும் ஆடியோக்கள் வெளியாகி உள்ளன. அதன் தொடர்ச்சியாக தினமும் சண்டையும் அடித்துக் கொண்டும் சாலை மறியலிலும் ஈடுபட்டுள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ஏ-கஸ்பா பகுதியில் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்ததும் பணம் பங்கு பிரிப்பதில் பாஜகவினர் இடையே மோதல் ஏற்பட்டு கைகலப்பாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். ஒரு தரப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் பாஜக வழக்கறிஞர் கோகுல் தரப்பினரை மற்றொரு தரப்பினர் தாக்கியதில் காயம் அடைந்த கோகுலை காவல்துறையினர் மீட்டு அழைத்து வந்த போது காவல்துறையினர் முன்னிலையில் மீண்டும் சரமாரியாக தாக்கினர். இதனைத் தொடர்ந்து ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் கோகுல், கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ், மற்றும் ஸ்ரீ வர்ஷன் ஆகிய மூன்று பேரை போலீஸார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதேபோல் வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பேரணாம்பட்டு ஒன்றியத்தில் பாஜக நிர்வாகிகள் பணம் பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் புதிய நீதிக் கட்சி நிர்வாகிகளை தொடர்பு கொண்டு ஏ.சி. சண்முகத்தை ஆபாசமான வார்த்தைகளில் கொச்சையாகத் திட்டி பேசி உள்ளனர். இந்த ஆடியோ தற்போது வெளியாகி, பாஜக தரப்பை நெருக்கடிக்கு உள்ளாக்கியது. இதனால் வேலூர் மாவட்ட பாஜக தலைவர் மனோகரன்,  பேரணாம்பட்டு ஒன்றியத்தை மொத்தமாக களைத்து விட்டார். கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் யாரும் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என அறிக்கை வெளியிட்டுள்ளார். இப்படி தேர்தல் முடிந்த பின்னரும் தினம் தினம் வேலூர் மாவட்ட பாஜகவில் அடிதடியும் சண்டையும் நடந்து வருகின்றது.

புதிய நீதிக் கட்சியின் குடியாத்தம் பகுதி நிர்வாகிகளும், வேலூர் மாவட்ட நிர்வாகிகள் சிலரும் கட்சியிலிருந்து நீக்குவதற்கான பணியில் ஏ.சி. சண்முகம் ஈடுபட்டுள்ளார் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்