
நாகையில் கடல் உள்வாங்கியுள்ளது மக்கள் மற்றும் மீனவர்கள் இடையே ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த பத்து நாட்களாக நாகை மாவட்டம் வேதாரண்யம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மிதமான மழை பொழிந்து வந்தது. இந்தநிலையில் நேற்று முதல் மழை குறைய தொடங்கியது. இன்று காலை முதல் மழை முழுவதுமாக நின்று விட்ட நிலையில், வேதாரண்யம் பகுதியில் உள்ள கண்ணகி கடற்கரை பகுதியில் காலை முதலே சுமார் 100 அடி தூரத்திற்கு கடல் உள்வாங்கியுள்ளது.
இதனால் சேரும் சகதியுமாகக் கடல் பகுதி உள்ளது. அதேபோல் கடலில் அலைகள் இன்றி அமைதியாகக் காணப்படுகிறது. திடீரென கடல் உள்வாங்கியது அந்த பகுதியில் உள்ள மக்களுக்கும் மீனவர்களுக்கும் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. பருவநிலை மாற்றத்தால் கடல் உள்வாங்குவது வழக்கம் தான், ஆனால் அலைகள் ஏற்படாதது அங்கு ஒரு வித அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது என மக்கள் தெரிவித்து வருகின்றனர்.