Skip to main content

விடுதியில் தங்கி படித்துவரும் மாணவிகள் 8 பேருக்கு திடீர் வயிற்றுப்போக்கு! 

Published on 09/10/2021 | Edited on 09/10/2021

 

Sudden diarrhea in 8 students staying in hostels!

 

சேலத்தில் தனியார் விடுதியில் தங்கிப் படித்துவரும் 8 மாணவிகளுக்கு ஒரே நேரத்தில் திடீரென்று வயிற்றுப்போக்கு ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

சேலம் மாவட்டம், சின்னத்திருப்பதி சாந்தி நகரில் பிண்டா பெண் குழந்தைகள் விடுதி செயல்பட்டுவருகிறது. இந்தக் காப்பகம், அரசு நிதியுதவியுடன் இயங்குகிறது. 

 

இந்த விடுதியில் 35 மாணவிகள் தங்கி, சேலத்தில் உள்ள அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படித்துவருகின்றனர். இங்கு தங்கியுள்ள பெண் குழந்தைகளுக்குத் தினமும் மூன்றுவேளை உணவும் விடுதி நிர்வாகமே வழங்குகிறது. பள்ளிகளில் படிக்கும் மாணவிகள் மட்டும் தங்களுக்குத் தேவையான மதிய உணவை விடுதியிலிருந்து எடுத்துச் சென்று விடுவார்கள். 

 

இந்த விடுதியில் தங்கியபடி 9 மற்றும் 10ஆம் வகுப்பு படித்துவரும் மாணவிகளுள் 8 பேர் அக். 7ஆம் தேதி வழக்கம்போல் காந்தி சாலையில் உள்ள பள்ளிக்குச் சென்றனர். அங்கு மதிய உணவு சாப்பிட்ட அவர்கள், சிறிது நேரத்திலேயே அடுத்தடுத்து வயிற்றுப் போக்கால் பாதிக்கப்பட்டனர். 

 

மாலையில் விடுதிக்குத் திரும்பிய மாணவிகள், விடுதி காப்பாளர் சுகன்யாவிடம் இதுபற்றி தெரிவித்தனர். அதற்குப் பிறகும் அவர்களுக்கு விட்டு விட்டு வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து விடுதியில் உள்ள செவிலியர் ஒருவர் அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தார். 

 

மேல்சிகிச்சைக்காக மாணவிகள் 8 பேரும் சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. நேற்று (08/10/2021) காலை நிலவரப்படி அவர்கள் அனைவரும் ஓரளவு நலமாக இருப்பதாக மருத்துவமனைத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

 

இதுகுறித்து கன்னங்குறிச்சி காவல் நிலைய காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர். விடுதியில் தங்கியுள்ள மாணவிகளின் உடலில் எந்த பாதிப்பும் ஏற்படாத நிலையில், பள்ளிக்கு உணவை எடுத்துச்சென்று சாப்பிட்டவர்களுக்கு மட்டும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மாணவிகள் பள்ளிக்குச் செல்லும் வழியிலோ அல்லது பள்ளியிலோ வேறு ஏதேனும் வாங்கி சாப்பிட்டார்களா என்பது குறித்தும் விசாரணை நடந்துவருகிறது. இச்சம்பவம் விடுதி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Two people who went to vote fainted and passed way

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் காலை 9 மணி நிலவரப்படி 24.34 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த நிலையில் வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனர். சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே செந்தாரப்பட்டி ஊராட்சி தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்கச் சென்ற சின்னபொண்ணு (77) என்ற மூதாட்டி மயங்கி விழுந்து உயிரிழந்தார். அதேபோன்று, சேலம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் சூரமங்கலம் பகுதியை சேர்ந்த பழனிசாமி(65) தனது மனைவியுடன் வாக்களிக்கச் சென்றபோது மயங்கி விழுந்து பலியானார். சேலம் மாநகரில் நடந்த இந்த துயர் சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.